வெள்ளி, 6 ஜூலை, 2018

சென்னை பணிப்பெண் கொலை: தொழிலதிபரின் மனைவி கைது.. பெசன்ட் நகர் முருகானந்தம் ....

பணிப்பெண் கொலை: தொழிலதிபரின் மனைவி கைது!மின்னம்பலம்: சென்னை பெசன்ட் நகரில் வீட்டுப் பணிப்பெண்ணை வெந்நீர் ஊற்றி சித்ரவதை செய்து கொன்ற தொழிலதிபரின் மனைவி உள்பட இரண்டு பெண்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெசன்ட் நகரில் வசிப்பவர் தொழிலதிபர் முருகானந்தம். காஞ்சிபுரம் அருகே கேஸ் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த இளம்பெண் மகாலட்சுமி (19) இவரது வீட்டில் பணிப்பெண்ணாக ஐந்து வருடத்துக்கும் மேலாக வேலை செய்துவந்தார். மகாலட்சுமிக்குக் கடந்த மூன்று நாட்களுக்கு முன் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால், மருத்துவமனையில் சேர்க்காமல், செவிலியர் ஒருவரை வரவழைத்து வீட்டிலேயே மருத்துவம் பார்த்துள்ளனர். இந்த நிலையில் (ஜூலை 4) புதன்கிழமை மகாலட்சுமி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக, சாஸ்திரி நகர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, மகாலட்சுமியின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக்காயங்கள், சூடு வைத்த காயங்கள் இருந்தன. அவர் உடல்நலக் குறைவால் இறந்தாரா அல்லது பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையில் இதுதொடர்பாக தொழிலதிபர் முருகானந்தத்தின் மனைவி சுஷ்மிதாவை பிடித்து விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவர் போலீஸாரிடம் கூறியதாவது, "கடந்த 5 ஆண்டுகளுக்கு, முன் மகாலட்சுமி எங்கள் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார். ஒருமுறை வீட்டில் வளர்த்த நாய்க்குட்டிகளில் ஒன்றை கடுமையாக தாக்கினார். இதில் நாய்க்குட்டி இறந்துவிட்டது. அப்போதே மகாலட்சுமியை அவரது சொந்த ஊருக்குச் சென்றுவிடுமாறு கூறினோம். சொந்த ஊருக்குச் சென்றால், தன்னுடைய குடும்பத்தினர் பாலியல் தொழிலில் தள்ளிவிடுவார்கள் என்றார். இதையடுத்து அவர்மேல் இரக்கப்பட்டுத் தொடர்ந்து பணியாற்ற அனுமதித்தோம். ஆனால், நாங்கள் சொல்வதை செய்யாமல் அடிக்கடி வாக்குவாத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் எனது மகனை (10 வயது ஜெய் பாலாஜி) சில தினங்களுக்கு முன் மர்ம உறுப்பில் கிள்ளியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நான் மற்றும் எனது உறவினர் மித்ரா இருவரும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை அனைத்துவிட்டோம். பிறகு தோசைக்கரண்டி, பூரிக்கட்டையால் மகாலட்சுமியைத் தாக்கினோம். இதில் அவர் மயங்கிவிழுந்தார். ஆத்திரம் அடங்காமல் அவர் மீது வெந்நீர் ஊற்றினோம். மகாலட்சுமி அலறி துடித்தார். தன்னை மருத்துவமனையில் சேர்க்கும்படி கெஞ்சினார். போலீஸுக்குத் தெரிந்தால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்பதால் செவிலியர் ஒருவரை வரவழைத்து சிகிச்சையளித்தோம். ஆனால், சிகிச்சை பலனின்றி மகாலட்சுமி இறந்துவிட்டார். பிறகு அவரது சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி கடலில் வீசி விடலாம் எனத் திட்டமிட்டோம். தொழில் விஷயமாக வெளியே சென்ற எனது கணவர் முருகானந்தம் வீடு திரும்பினார். அவரிடம் இந்த விஷயத்தை எப்படியாவது மூடி மறையுங்கள் என்றோம். ஆனால், அவர் போலீஸுக்குத் தகவல் தெரிவித்து எங்களை மாட்டிவிட்டார்" எனத் தெரிவித்துள்ளார். வழக்கு தொடர்பாக சுஷ்மிதா, மித்ரா இருவரையும் போலீஸார் (ஜூலை 5) கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை: