சனி, 7 ஜூலை, 2018

மணல் இறக்குமதிக்கு அனுமதி.... அடுத்த மாதம் முதல் ... தமிழக அரசு முடிவு!

இறக்குமதி மணல்: தமிழக அரசு முடிவு!மின்னம்பலம்: தமிழகத்தில் அடுத்த மாதம்(ஆகஸ்டு) முதல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனை செய்யப்படவுள்ளது. 500 கோடி ரூபாய் மதிப்பிலான 30 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்யப்படுவதற்கான ஒப்பந்தத்தில், தமிழக அரசு விரைவில் கையெழுத்திட உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
தமிழகத்தில் மணலுக்கான தினசரி தேவை 10 ஆயிரம் யூனிட்டுகள் என்ற அளவிலிருந்து, தற்போது 12 ஆயிரம் யூனிட்டுகள் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும் கட்டுமானப் பணிகளுக்காக நாளொன்றுக்கு 12,000 லோடு முதல் 40,000 லோடு வரை மணல் தேவைப்படுவதாக கட்டுமானத் துறையினர் கூறுகின்றனர். ஆனால், பொதுப்பணித் துறையின் குவாரிகளில் இருந்து பெறப்படும் மணல், போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது.
மணல் சேவையை ஈடு செய்வதற்காக, தமிழகத்தில் எம்-சாண்ட் எனப்படும், செயற்கை மணல் உற்பத்தியைத் தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.
அந்தச் செயற்கை மணலின் தரத்தை உறுதி செய்ய, எம்-சாண்ட் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட எம்-சாண்ட் விற்பனையாளர்களில், இதுவரை 44 பேருக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு பொதுப்பணித் துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி தமிழக பொதுப்பணித் துறை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை பொதுப்பணித் துறைதான் விற்பனை செய்யும் என்றும், சொந்த பயன்பாட்டுக்குக் கூட இறக்குமதி மணலை அனுமதிக்க முடியாது என்றும் கட்டுப்பாடுகள் விதித்து அரசாணை பிறப்பித்தது. வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்பட்டு, ஓரிரு மாதங்களில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று கடந்த மாதம் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
சுமார் 30 லட்சம் டன் வெளிநாட்டு மணலைத் தனியார் மூலம் இறக்குமதி செய்ய அரசு டெண்டர் விட்டிருந்தது. அதற்கு விண்ணப்பித்த 3 நிறுவனங்களில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஓர் நிறுவனம் தேர்வாகியுள்ளது. தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள தனியார் நிறுவனத்துடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த மாதத்திலிருந்து வெளிநாட்டு மணல் இறக்குமதியை அந்நிறுவனம் தொடங்கும் என்றும், மாதம் ஒன்றுக்கு 5 லட்சம் டன் வீதம் 6 மாதங்களுக்கு, 30 லட்சம் டன் மணலை அந்நிறுவனம் இறக்குமதி செய்யும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள். தமிழகத்தில், எண்ணூர், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 3 துறைமுகங்கள் மூலம் 500 கோடி ரூபாய் அளவுக்கு மணல் இறக்குமதி செய்யப்படும் என்றும், அது பொதுப்பணித் துறை மூலம் மக்களுக்கு நியாயமான விலைக்கு விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதங்களில், புதிதாக 27 மணல் குவாரிகளை திறக்கத் தமிழக பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: