வெள்ளி, 29 ஜூன், 2018

சர்ஜிகல் ஸ்ட்ரைக் விடியோ போலியானது? கேலி கூத்து என பாக்கிஸ்தான் அறிவிப்பு

சர்ஜிகல் ஸ்டிரைக் வீடியோ: பாக். நிராகரிப்பு!மின்னம்பலம் : இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து வெளியான வீடியோவை நிராகரித்துள்ளது பாகிஸ்தான் அரசு. இந்தத் தாக்குதல் கற்பனையானது என மீண்டும் கூறியுள்ளது.
2016ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதியன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்தது இந்திய ராணுவம். அப்பகுதியில் 500 மீட்டர் முதல் 3 கிலோமீட்டர் வரை ஊடுருவி, அங்கிருந்த 7 தீவிரவாத முகாம்கள் மற்றும் பதுங்குகுழிகளின் மீது தாக்குதல் நடத்தினர். அடுத்த நாள் அதிகாலை 4 மணி வரை இந்த தாக்குதல் தொடர்ந்தது. இது பற்றிய விவரங்களை, லெப்டினண்ட் ஜெனரல் ரன்வீர் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உரி ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கான பதிலடி இது என்று கூறினார்.
ஆனால், பாகிஸ்தான் அரசு இந்த செய்தியை மறுத்தது.
தங்கள் நாட்டு எல்லைக்குள் எந்தவித சர்ஜிகல் ஸ்டிரைக்கும் (துல்லியத் தாக்குதல்) நடைபெறவில்லை என்றது. இந்தியாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்த வீடியோ ஆதாரங்களை வெளியிடுமாறு கூறின.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு, கடந்த 27ஆம் தேதியன்று இந்திய ஊடகங்களில் சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்த வீடியோ ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உறுதியானதாகக் கூறப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த வீடியோ வெளியாக வேண்டிய அவசியம் என்னவென்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று பாஜக மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 28) சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்த வீடியோ கேலிக்கூத்தானது என்று தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகம்மது பைசல். “நான் ஏற்கனவே சொன்னதை மீண்டும் சொல்கிறேன். இந்த சர்ஜிகல் ஸ்டிரைக் இந்தியாவின் கேலிக்கூத்து; இது கற்பனைக் கதையே தவிர வேறொன்றுமில்லை. அவர்கள் (இந்தியா) கனவு காணலாம்” என்று கூறியுள்ளார்.
கடந்த வாரம் பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் அஜய் பிஸ்ராய் அவரது மனைவியுடன் இஸ்லாமாபாதில் உள்ள ஒரு சீக்கிய குருத்வாராவுக்குச் சென்றார். ஆனால், ’நானக் ஷா பக்கீர்’ என்ற இந்தியப் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றதைக் காரணம் காட்டி, அங்கிருந்த சீக்கிய மக்கள் அவருக்கு அனுமதி மறுத்தனர். இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் தூதரகத்திடம் இந்திய அரசு கவலை தெரிவித்தது. இதுபற்றிப் பேசிய பைசல், “மத ரீதியான எந்த நம்பிக்கையையும் அரசியல் ஆக்க வேண்டாம் என்பதற்காகவே, இந்தியத் தூதருக்கு அனுமதி மறுக்கப்பட்டது” என்று விளக்கமளித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்றுவரும் மும்பை தாக்குதல் குறித்த விசாரணைக் குழுவின் பொறுப்பாளர் மசார் உல் ஹக் சமீபத்தில் பணி மாற்றம் செய்யப்பட்டார். இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த பைசல், கடந்த பத்தாண்டுகளில் பல அதிகாரிகள் மாறியுள்ளதாகவும், ஆனால், அரசின் செயல்பாடுகள் எந்தத் தடையுமில்லாமல் நடைபெறுமெனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: