புதன், 16 மே, 2018

கர்நாடகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் முதல் முதலாக வெற்றி பெற்றுள்ளார்

கணக்கைத் தொடங்கிய பகுஜன் சமாஜ்!மின்னம்பலம் :நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஜெயித்தும் வரலாறு படைக்க முடியுமா என்று பாஜக காத்துக் கொண்டிருக்க... கர்நாடக மாநிலத்தில் கொள்ளேகால் என்ற ஒரே ஒரு தொகுதியில் வென்று வரலாறு படைத்துள்ளது பகுஜன் சமாஜ் கட்சி.
உத்திரப்பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தோடு கூட்டணி அமைத்து இருபது தொகுதிகளில் போட்டியிட்டது. அக்கட்சியின் தலைவரும், முன்னாள் உபி முதல்வருமான மாயாவதி கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
இந்நிலையில் போட்டியிட்ட இருபது தொகுதிகளில் கொள்ளேகால் தனித் தொகுதியில் மட்டும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மகேஷ் வெற்றிபெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை சுமார் ஏழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார் மகேஷ். இவர் இத்தொகுதியில் 40 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இத்தொகுதியில் பாஜக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

பத்துமுறை காங்கிரசே வென்று காங்கிரசின் கோட்டையாக இருந்த கொள்ளேகால் தொகுதியில் வெற்றிபெற்றதன் மூலம் தென் மாநிலங்களில் தனது முதல் சட்டமன்ற வெற்றியைப் பதிவு செய்துள்ளது பகுஜன் சமாஜ். வெற்றிபெற்ற மகேஷை கட்சியின் தலைவர் மாயாவதி தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார்.
கர்நாடக தலித் இயக்க அரசியல் வரலாற்றில் இந்த வெற்றி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: