திங்கள், 14 மே, 2018

பயோ டாய்லெட் கழிவுகள்: ரயில்வே யார்டுகளை பாழ்படுத்தும் நிர்வாகம்

theekkathir.in  ;சென்னை- பயோ டாய்லெட் கழிவுகளை ரயில்வே
யார்டுகளில் திறந்து விடுவதால் சுற்றுச் சூழலும், தொழிலாளர் நலனும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வயல் வெளிகளைக் கழிவறைகளாக பயன்படுத்தி வந்த இந்திய மக்கள் இந்தியாவின் வயல் வெளிகள் வழியாகக் கடந்து செல்லும் ரயில் பாதைகளை பொதுக் கழிப்பிடமாக பயன்படுத்த ஆரம்பித்தனர். இப்போதும் சென்னை மாநகரின் மையப்பகுதியான வியாசர்பாடி – வண்ணாரப்பேட்டை – பேசின் பிரிட்ஜ் – கொருக்குப்பேட்டை இடையே தண்டவாளத்தை அந்தப்பகுதி மக்கள் பொது கழிப்பிடமாக பயன்படுத்துவதை அந்த வழித்தடங்களில் பயணம் செய்யும்போது நம்மால் உணர முடியும்.
இருப்பினும் தண்டவாளங்கள் தூய்மையாகவும் துருப்பிடிக்காமலும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ரயில் பெட்டிகளின் கழிவறைகளில் உயிரி கழிவறை பயோ டாய்லெட் அறிமுகப்படுத்தப்பட்டது.
கழிவறைகளின் மனித கழிவு நேரடியாக வெளியேறும் வண்ணம் குழாய் வடிவிலான “கமோ சூட்” என்ற பாகம் பொருத்தப்பட்டிருந்தது. அதற்குப் பதிலாக ஒவ்வொரு கழிவறையின் அடிப் பாகத்தில் ஒவ்வொரு பெட்டி (டேங்க்) பொருத்தப்பட்டுள்ளது. இதற்குள் வளரும் பூச்சிகள் டேங்கிற்குள் விழும் மனிதக்கழிவுகளை சாப்பிட்டு, சாப்பிட்டு, மனிதக் கழிவு தண்ணீராக வெளியேறும் என்பதுதான் இதன் தொழில் நுட்பமாகும். ஆனால் அதிகப்படியான பயன்பாட்டினாலும் தவறான பயன்பாட்டினாலும் இது நடைபெறுவதில்லை.
இத்தகைய கழிவறைகளின் கோப்பைகளில் மனிதக்கழிவை தவிரவேறு எந்தப் பொருட்களும் போடக்கூடாது. நமது வீடுகளில் உள்ள கழிவறைகளை எவ்வாறு பயன்படுத்துகிறோமோ அதேபோல் ரயில் பெட்டிகளில் அமைக்கப்பட்டுள்ள பயோ டாய்லெட்டையும் பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்தியாவில் ரயில் பயணம் செய்யும் பயணிகளால் அவ்வாறு பயன்படுத்தப்படுகிறதா? அல்லது பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி முன்னுக்கு வருகிறது. ஏனென்றால் மேலே குறிப்பிட்டது போல் தண்டவாளத்தை பொதுக் கழிப்பிடமாக இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சமூகமாக இந்தியச் சமூகம் உள்ளது. எனவே முதன்முதலாக ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டிருந்த பயோ டாய்லெட் முறை எதிர்பார்த்த பலனை தரவில்லை.


அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த ஜாபர் ஷெரீப்புக்கு இதன் பின்னடைவுகளை விளக்கமாகச் சுட்டிக்காட்டி கடிதம் எழுதியதன் பயனாக அப்போது அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து அதன் வடிவத்தை மாற்றி சி.டி. டாய்லெட் என்ற முறையை ரயில்வே அறிமுகப்படுத்தியது. இந்த முறையும் எதிர்பார்த்த பலனை தரவில்லை. கழிவறைகளுக்குள் பயணிகள் பல்வேறு வகையான குப்பைகள் போடுவார்கள். இதனால் கழிவறையில் பொருத்தப்பட்ட டேங்கிற்குள் இருக்கும் பூச்சிகள் உயிரிழந்து விடுவதால் டேங்கிற்குள் தேங்கும் மனிதக் கழிவுகளும், குப்பையும் தண்ணீருமாக கழிவறை நிரம்பி வழிந்து பயணம் செய்யும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.  குறைவான தூரமும் குறைந்த எண்ணிக்கையிலும் பயணிகள் பயணம் செய்யும் உயர்வகுப்பு கோச்சுகளிலேயே இந்த நிலை என்றால் தொலை தூரம் செல்லும் (திருவனந்தபுரம் – கவுகாத்தி, சென்னை – ஜம்முதாவி) ரயில்களில் பொது பெட்டிகளில் நிலை என்ன என்பதை சாதாரண மனிதர்களால் புரிந்துகொள்ள முடியும்.
இந்நிலையில் மீண்டும் தற்போது புது வடிவிலான பயோ டாய்லெட் முறை பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தும் முறை குறித்து ரயில்வே நிர்வாகம் பெட்டிகளில் விளம்பரம் செய்துள்ளது. ஆனாலும், இதில் சேமிக்கப்படும் மனிதக் கழிவுகள் அழியாமல் தேங்கி, நிரம்பி வழிவதும் பயணிகள் மூக்கை மூடிக்கொள்வதும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உள்ளது.
கழிவுநீர் தொட்டியான யார்டுகள்:                                                                                                    பயோ டாய்லெட் மற்றும் சிடி டாய்லெட்டுகளில் அடைப்பு ஏற்பட்டு அதன்மூலம் கழிவுகள் வெளியேற வழியின்றி வரும் பெட்டிகளில் உள்ள கழிவுகள் யார்டுகளில் உள்ள பிட்லைன்களில் திறந்து விடப்படுகிறது. 5,000, 6,000 கி.மீ. தூரம் பயணித்து வரும் வண்டிகளில் தேங்கியுள்ள மனிதக் கழிவுகளை பிட்லைன்களில் திறந்து விடுகிறபோது குமட்டிக் கொண்டு குடல் வெளியே வருவது போன்ற துர்நாற்றம் வீசுகிறது. இந்தக் கழிவுகளை திறந்துவிடும் அதே பிட்லைனில்தான் அந்த வண்டி தொடரை பரிசோதனை செய்து மாலைக்குள் பிட் கொடுக்க வேண்டும். அனைத்துக் கோச்சு பராமரிப்பு யார்டுகளிலும் இதே நிலைதான்.
எர்ணாகுளம் யார்டு கேண்டீன் அருகிலேயே பிட்லைன் அமைந்துள்ளது. கேண்டீன் அருகாமையினுள் பிட்லைனிலும் இது போன்ற பயோ டாய்லெட் அடைப்பைத் திறந்து விடுகின்ற போது அந்த கேண்டீனை மனிதனால் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
தண்ணீர் மறு சுழற்சி
பேசின் பிரிட்ஜ் யார்டில் பிட்லைனிலிருந்து பெறும் தண்ணீரை மறுசுழற்சி முறையில் கோச்சுகள் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு நல்ல நடைமுறைதான். ஆனால் பயோடாய்லெட் அடைப்புகள் அகற்றும்போது வெளியேற்றப்படும் மனிதக் கழிவுகள் தண்ணீர் பீச்சியடித்து பிட்லைனிற்குள் அமைந்துள்ள பம்புகளுக்கு அனுப்பப்படுகிறது. அவையும் மறுசுழற்சி தண்ணீருடன் கலந்து விடுகிறது. இந்த மறு சுழற்சி தண்ணீரைப் பயன்படுத்தி வண்டிகளைச் சுத்தம் செய்யும் போது அதில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இப்படி மனிதக்கழிவுகள் நேரடியாகக் கலந்து வரும் தண்ணீரைப் பயன்படுத்துவது தூய்மையானதா என்பது மற்றுமொரு கேள்வியாகும்.
யார்டுகளின் தூய்மையும் சுற்றுச் சூழலையும், தொழிலாளர்களின் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டுபயோ டாய்லெட், சிடி டாய்லெட் கழிவுகளைத் திறந்துவிட தனி பிட்லைன்களும் அதற்காகத் தனியான பம்புகளும் அமைக்க வேண்டும் என டிஆர்இயு நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்

கருத்துகள் இல்லை: