திங்கள், 14 மே, 2018

ஏழைகளுக்கு ஒரு நீதி, சாஸ்திரா பல்கலைக்கழகத்துக்கு ஒரு நீதியா? ஆக்கிரமித்து கட்டிய சாஸ்திரா ..

ஏழைகளுக்கு ஒரு நீதி, சாஸ்திராவுக்கு ஒரு நீதியா?மின்னம்பலம்: “ஏழைகளுக்கு ஒரு நீதி, பல்கலைக்கழகத்துக்கு ஒரு நீதியா?” என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்ரமித்துள்ள அரசு நிலங்களை தமிழக அரசு உடனடியாகக் கைப்பற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சையில் திருமலைச்சமுத்திரத்தில் 1985 ஆம் ஆண்டு தமிழக அரசு 58.17 ஏக்கர் நிலத்தைத் திறந்த வெளிச் சிறை கட்டுவதற்காக சிறைத் துறைக்கு அளித்தது. திறந்த வெளிச் சிறைச்சாலைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஒரு பகுதியை சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்ரமித்து கட்டடங்களைக் கட்டியுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சாஸ்திரா பல்கலைக்கழகம் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக இன்று (மே 14) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின், “ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்று ஒருபுறம் ஏழைகள் வசிக்கும் குடிசைகளையும், சிறிய சிறிய வீடுகளையும்கூட இடித்துத் தள்ளும் அதிமுக அரசு, ஒரு தனியார் பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதையும் அதில் கட்டிடம் கட்டுவதையும் வேடிக்கை பார்ப்பது ஏன்?
இப்போது அந்தப் பல்கலைக்கழகம் கொடுக்கும் மாற்று நிலங்களை ஏற்றுக்கொண்டு ஆக்கிரமித்த நிலங்களை விட்டுவிடுங்கள் என்று நில நிர்வாகத் துறைக்கு தலைமைச் செயலாளரே அழுத்தம் கொடுப்பதாக வெளிவந்த செய்திகளின் பின்னணி என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சாஸ்திரா பல்கலைக்கழம் 30 ஏக்கர் அரசு நிலத்தை 22 ஆண்டுகளாக ஆக்ரமித்துவருவதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை உடனடியாகக் கைப்பற்றி, தஞ்சாவூரில் சிறைச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்படும் திறந்த வெளிச் சிறைச்சாலை விரைவில் அமைவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு விரோதமாகச் செயல்படும் அதிகாரிகளைக் கண்காணித்து, அவர்கள் எவ்வளவு உயர்நிலையில் இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: