வெள்ளி, 18 மே, 2018

திராவிடம் ! உங்கப்பாவுக்கு கிடைக்காதது உனக்கு மட்டும் எப்படி கிடைத்தது ? என்னக்கிவாது யோசிச்சு பார்த்தியா? வாட்சைப் அறிவாளிகளுக்கு செருப்படி ..

Bilal aliyar.  துபாயில் என்னுடைய அறைக்கு தமிழகத்தில் இருந்து திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருந்து BE படித்து விட்டு சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிந்து அவர்களின் புதிய ப்ராஜக்ட்காக துபாய் அனுப்பப்பட்ட ஒரு 28 வயது இளைஞர் புதிதாக வந்திருந்தார். தம்பி அரசியல் விசயங்களின் வாட்ஸ் அப் தகவல்களை சில நேரம் என்னிடம் காட்டுவார், மேலும் சீமானின் அரசியலை பற்றி என்னிடம் சிலாகிப்பார். நானும் புதிதாக வந்த தம்பி தானே எங்கே சென்று விடுவார் என்று ஒரு புன்னகையுடன் கேட்டு கொள்வேன். ஒரு முறை திராவிட கட்சிகள் இலவசங்களை கொடுத்து நம்மை பிச்சைகாரர்களாக ஆக்கி விட்டது என்று கோபம் கொப்பளிக்க தன் செல்பேசியை பார்த்து கொண்டே சொன்னார். நான் வழக்கம் போல ஒரு புன்னகையை உதிர்த்தேன். தம்பி டென்சனாகி, என்னண்ணே உங்கள மாதிரி ஆட்கள் எதையுமே உள்வாங்காமத் தான் தமிழ் நாடு இந்தளவிற்கு மோசமாகி விட்டது என்றவுடன், தம்பியுடன் நடந்த ஒரு 15 நிமிட உரையாடலை இங்கு பதிவு செய்கிறேன்.
நான்: சரி தம்பி, தமிழ்நாடு இந்தளவிற்கு மோசமாக போயடுச்சுன்னு சொல்ற, எந்த விதத்தில் மோசமாக போயிடுச்சு, யாருடன் ஒப்பிட்டு இந்த முடிவை நீ சொல்கிறாய்? ஏன்னா ஒப்பீடு என்று வரும் போது ஏதாவது ஒன்றுடன் தான் மற்றொன்றை அளவிட்டு முடிவு சொய்வோம். இந்திய மாநிலங்களில் எந்த மாநிலத்துடன் ஒப்பிட்டு தமிழகத்தின் நிலையை முடிவு செய்தாய்?
தம்பி: என்னண்ணே இப்படி கேக்குறீங்க, கல்வியை எடுத்து பாருங்க
நான்: கல்வியில் நாம் மோசமாக இருக்கிறோம் என்பதற்கான தரவுகள் உன்னிடம் இருக்கிறதா?

தம்பி: பாத்தலே தெரியலையா உங்களுக்கு
நான்: தமிழகத்தில் ஆரம்ப கல்வியும், உயர் கல்வியும் மிகச் சிறப்பாக இருப்பதாக மத்திய மனிதவளத் துறையின் ஆய்வுகள் தெரிவிக்கிறது. உயர்கல்வியில் இந்தியாவிலேயே அதிக சதவீதம் படிப்பவர்களுக்கு குறிப்பாக பெண்கள், ஆதி திராவிடர்கள் தமிழகத்தில் தான் என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்திய பல்கலைக் கழகங்களில் தமிழக பல்கலைக் கழகங்கள் குறியீட்டு அளவில் முண்ணனியிலும், போலி பல்கலைக் கழகங்கள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் அப்படி ஒன்று இல்லை என்றும் தரவுகள் சொல்கின்றன. நிலைமை இப்படி இருக்கும் போது நீ எதை வைத்து இந்த குற்றச்சாட்டை வைக்கிறாய்..
தம்பி: நீங்க என்னண்ணே என்னண்ணமோ சொல்றீங்க..
நான்: இதாண்ட தம்பி உங்ககிட்ட இருக்கிற பிரச்சனை, சரி அத விடு... ஒரு சில கேள்விகள் கேட்டால் தப்பாக எடுத்து கொள்ள மாட்டாய் என்றால் நான் உன்னிடத்தில் கேட்கிறேன்
தம்பி: கேளுங்கண்ணே
நான்: என்ன படித்திருக்கிறாய், உன் தந்தையின் தொழில் என்ன? உன் தாத்தாவின் தொழில் என்ன?
தம்பி: BE, ECE படிச்சிருக்கேண்ணே, அப்பா சமையல் வேலை செய்பவர். தாத்தாவும் சமையல் வேலை செய்பவர் தான்
நான்: நீ எப்படி BE படிக்க முடிந்து என்று என்றாவது யோசித்து பார்த்திருக்காயா?.
தம்பி: நானா படிச்சு, நல்ல மார்க் எடுத்து காலேஜ்ல லோன் வாங்கி படிச்சேண்ணே, இன்னும் 42 ஆயிரம் லோன் கட்டணும்ணே
நான்: வெரிகுட்றா தம்பி.. ஆனா சமையல் வேல செய்கிற உங்க அப்பா ஏண்டா படிக்கல?
தம்பி: எங்க தாத்தா இருந்த சூழல்ல எங்கப்பான்னால படிக்க முடியலண்ணே
நான்: ஏண்டா உங்க அப்பா மாதிரி தான் உங்க தாத்தாவும் சமையல் வேலை செய்தவர், அவரால ஏண்டா படிக்க முடியல?
தம்பி: எங்கப்பா காலத்துல எங்க ஊர்ல பள்ளிக்கூடமே இல்லைண்ணே, அதுக்கும் மேல எங்காளுக யாரும் படிக்கிறத பத்தி நெனச்சதே இல்லைன்னு எங்கப்பா சொல்லிருக்காரு... அதுக்கு வசதியும் இல்லைண்ணே
நான்: சரிடா, உங்கப்பாட்ட நல்ல வசதி இருக்கும் போல, அதான் நீ BE படிச்சு இங்க வந்திருக்க
தம்பி: ஏண்ணே நீங்க வேற, நான் சம்பாரிச்சு தான் வீடே கட்டணும். ஊர்ல கவர்ன்மெண்ட் ஸகூல்ல படிச்சு, கவுன்சிலிங்ல கோட்டாவுல BE கெடச்சுச்சு லோன் வாங்கி தான் படித்தேன்
நான்: இந்த கவர்ன்மெண்ட் ஸகூல், கவுன்சிலிங், கோட்டா, பேங்க் லோன்லாம் இல்லாம இருந்தருந்தா நீ படிச்சிருக்க முடியுமாடா?
தம்பி: முடயாதுண்ணே
நான்: இந்த வசதிகள் உங்கப்பாவுக்கு ஏன் கெடக்கல, உனக்கு எப்படி கெடச்சதுன்னு என்னக்கிவாது யோசிச்சு பார்த்தியா?
தம்பி: இல்லண்ணே
நான்: இது தான் கடந்த ஐம்பது வருடங்களில் திராவிட அரசுகள் செய்த சமூக நீதிக்கான செயல்பாடுகள். இதன் மூலம் கல்வி அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் அதன் மூலம் ஒவ்வொருவரும் பொருளாதார தன்னிறைவு அடைய முடியும் என திராவிட கட்சிகளின் கொள்கையால் வந்த பலன். அரசு பள்ளியில் படித்த நீ, இன்று தகவல் தொழில் நுட்ப துறையில் வெளிநாட்டில் தமிழ் தவிர்த்த ஆங்கிலத்தில் உரையாடும் பணி சூழலில் பணி செய்ய வைக்கும் அளவிற்கு தமிழக கல்வி தரம் இருக்கிறது. ஆகவே, இனிமேலாவது வாட்ஸ்அப் செய்திகளை தவிர்த்து விட்டு கொஞ்சம் அரசியல், சமூக வரலாற்றை படி. அதன் மூலம் உனக்குள் கேள்விகளை எழுப்பு..
தம்பி: சரிண்ணே... இதெல்லாம் எப்படிண்ணே உங்களுக்கு தெரியும்
நான்: வாட்ஸ் அப்ல வர்ர எதையுமே படிக்கிறதில்லடா, சேர் செய்றதும் இல்ல.. அவ்வளவு தான்

கருத்துகள் இல்லை: