செவ்வாய், 22 மே, 2018

தூத்துக்குடியில் ஜாலியன் வாலாபாக்!

 மின்னம்பலம் L தூத்துக்குடியில் ஜாலியன் வாலாபாக்!
ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது, பயிற்சி பெற்ற கமாண்டோ படை வீரர்கள் போலிஸ் வாகனத்தின் மீது ஏறி நின்று கொண்டு ஒவ்வொருவராக குறி பார்த்து சுட்டனர். - டைம்ஸ் நவ் தொலைக்காட்சி செய்தி
மின்னம்பலம் : ஸ்டெர்லைட்
ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் வரை பலியாகியுள்ளனர். காவல் துறையின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரித் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. 100ஆவது நாளான இன்று (மே 22) தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் நேற்று இரவு முதல் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இன்று காலை தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்களை விவிடி சிக்னல் அருகே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் காவல் துறையினர் கலைக்க முயற்சி செய்தனர்.
மேலும் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13பேர் வரை பலியாகினர். துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான காவல் துறையைக் கண்டித்தும், தமிழக அரசு பதவி விலகக் கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13பேர் பலியாகியுள்ளனர். இது அரச பயங்கரவாதத்தின் கொடூரமான உதாரணம். அநீதிக்கு எதிராகப் போராடியதற்காக இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலும் பிரார்த்தனைகளும்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்
மக்கள் போராட்டத்தை முடக்க நினைத்த அதிமுக அரசின் அலட்சியத்தாலேயே இன்று மக்கள் பேரணி நடத்தி அது துப்பாக்கிச் சூடு வரை சென்றுள்ளது. இன்றைய பேரணி பற்றி முன்பே அறிந்த காவல் துறை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது. இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற அசம்பாவிதத்திற்கு முழு காரணம் இந்த அரசின் கையாலாகத்தனமும், உளவுத் துறை தோல்வியும்தான். இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை அரசு உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் மக்களின் நலனுக்காக நடைபெறும் போராட்டங்கள் ஜனநாயக ரீதியிலும், அற வழியிலும் நடந்திடும் வகையில் எதிர்காலத்திலாவது இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமக நிறுவனர், ராமதாஸ்
தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற பொதுமக்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தபட்சம் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலும், அதை மூடி மறைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளும் கண்டிக்கத்தக்கவை.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்குவதுடன், காயத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
ஜாலியன் வாலாபாக்கில் பிரிட்டிஷ் ராணுவம் உயிர்களை வேட்டையாடியதைப் போலத் தமிழகக் காவல் துறையும் மனித உயிர்களைப் பலிவாங்கி உள்ளது. உயிர்ப்பலி வாங்கிய துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான காவல் துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட வேண்டும். காவல் துறையின் அராஜகம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையமும், மாநில மனித உரிமை ஆணையமும் இணைந்து தாங்களாகவே விசாரணையை நடத்த முன்வர வேண்டும்.உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு 20 இலட்ச ரூபாய் நிவாரணத் தொகையும், படுகாயமுற்றவர்களுக்கு ஐந்து இலட்ச ரூபாய் நிவாரணத் தொகையும் தமிழக அரசு வழங்க வேண்டும்.
தேமுதிக பொதுச் செயலாளர், விஜயகாந்த்
மக்களின் உயிரும் உடமைகளும் தான் முக்கியம். மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டமும் வெற்றிபெற்றதாக வரலாறு இல்லை, எனவே மக்கள் விரும்பாத அந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக ஆளும் அதிமுக அரசும், மத்திய அரசும் தடைவிதித்து நிரந்தரமாக மூட வேண்டும். துப்பாக்கிச் சூடு கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி செய்துகொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய ஆளும் அதிமுக அரசு கலைக்கப்பட வேண்டிய அரசு என்று தேமுதிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அமமுக துணைப் பொதுச்செயலாளர், தினகரன்
தங்களின் எதிர்கால வாழ்க்கைக்காகப் போராடிய தூத்துக்குடி மக்கள் மீது காவல் துறையை ஏவித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மக்களின் நியாயமான கோரிக்கைக்கு முறையான அனுமதியையோ அல்லது அவர்களின் கோரிக்கை தொடர்பான அறிக்கையையோ வழங்கி அம்மாவட்ட மக்களுக்குத் துணையாக அரசு இருந்திருக்க வேண்டும், அதை விடுத்துச் சொந்த மக்களையே சுட்டுக் கொல்வது அரக்கத்தனம், இது சர்வாதிகாரம். மக்களின் இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை இந்த அரசு நிரந்தரமாக மூடுவதுதான்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், திருநாவுக்கரசர்
வானத்தை நோக்கி சுட்டு முன்னெச்சரிக்கை செய்யாமலும், கீழ் நோக்கிச் சுடாமலும் நெஞ்சில் சுட்டுப் பலர் இறந்திருப்பதாகத் தகவல்கள் வருவது வேதனைக்குரியது. காவல்துறையினரின் இத்துப்பாக்கிச் சூடு மிகுந்த கண்டனத்திற்குரியது. துப்பாக்கிச் சூடு மூலம் போராட்டத்திற்கு தீர்வு காண முடியாது. இது ஜனநாயக விரோதச் செயலாகும். போராட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடவும், பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதியின் மூலம் உரிய நீதி விசாரணை உடனே மேற்கொள்ளப்பட வேண்டும். காயமுற்றவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு,
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
தூத்துக்குடி நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புகுந்து போலீசார் அப்பாவி பொதுமக்களை நர வேட்டையாடியுள்ளனர். ஆயிரக்கணக்கில் போலீசாரைக் குவித்து கோரத் தாண்டவம் ஆடி மக்களை கொன்று குவித்துள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும். தாக்குதலுக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உடனடியாக மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபடுமாறு கட்சி அணிகளைக் கேட்டுக்கொள்கிறோம். தமிழகத்தைக் கொலைக்களமாக மாற்றியுள்ள ஆட்சியாளர்களைக் கண்டித்து ஒன்றிணைந்து போராட முன்வருமாறு என அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக்கொள்கிறோம்.
சிபிஐ மாநிலச் செயலாளர், முத்தரசன்
காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வெடித்ததோடு, இரண்டு முறை துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர்.
இதனால் ஏற்படும் சகல விளைவுகளுக்கும் மாநில அரசாங்கமே முழுமுதற் காரணமாகும். பொதுமக்களுக்குப் பெருந்தீங்கு விளைவித்து வருகிற ஆலையை இயங்க அனுமதி அளித்துப் பாதுகாப்பும் தந்துகொண்டிருக்கிற மத்திய, மாநில அரசுகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, ஆலையை நிரந்தரமாக மூடிவிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வற்புறுத்துகிறது.
விசிக தலைவர், திருமாவளவன்
தமிழக அரசின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதியின் பொதுமக்கள் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பது நிருபணமாகியுள்ளது. தமிழ் மக்களின் உயிரைத் துச்சமாக நினைத்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்குத் தமிழக அரசு உதவத் துடிப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும். ஸ்டெர்லைட் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும், போலீசார் மீது கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்த்
மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப் போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு.
மக்கள் நீதி மய்யம் தலைவர், கமல்ஹாசன்
ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நீதி கேட்டு மக்கள் அமைதியாகப் போராட்டம் நடத்திய போதெல்லாம் அலட்சியப்படுத்தியது அரசுகள். அரசின் அலட்சியமே அனைத்துத் தவறுகளுக்கும் காரணம். இதில் குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை. அவர்கள் எப்போதும் உயிரிழக்கிறார்கள். முன்பு ஆலையினால் இப்போது அரசின் ஆணையினால். அனைவரும் அமைதி காக்க வேண்டும்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், சரத்குமார்
ஜனநாயக ரீதியில் போராடும் மக்களிடம் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி தடியடி, புகைக்குண்டு என அப்பகுதியை கலவரபூமியாக மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது. பல்லாயிரக்கணக்கில் திரளும் மக்கள் பல லட்சக்கணக்கில் திரள்வதற்கு முன்பாக அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை: