புதன், 23 மே, 2018

ராகுல் : "ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுப்பதால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்"

பிந்திய செய்தி :நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11பேர் வரை பலியாகியுள்ள நிலையில், மீண்டும் அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்!மின்னம்பலம்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுப்பதால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11பேர் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராகுல்காந்தி இன்று (மே 23) தமிழில் பதிவிட்டுள்ள ட்விட்டில், "தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது. தமிழ் சகோதர சகோதரிகளே , நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஏன் செல்லவில்லை
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், "தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க முதல்வர் எடப்பாடி நேரில் செல்லவில்லை: செய்தி - அது என்ன ஏற்காடா, ஊட்டியா, கொடைக்கானலா... குடும்பத்துடன் சென்று மலர்க் கண்காட்சியை திறந்து வைத்து மகிழ்ச்சியில் திளைத்து திரும்புவதற்கு" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை: