ஞாயிறு, 20 மே, 2018

மாட்டைக்கொன்றதற்காக ஒருவர் அடித்துக் கொலை! மத்திய பிரதேசத்தில் இந்துத்வாக்கள் வெறியாட்டம்


மின்னம்பலம்: மத்தியப் பிரதேசத்தில் சத்னா மாவட்டத்தில் மாட்டைக் கொன்றதாக ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார். அவருடன் இருந்த மற்றொருவரும் தாக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார் என அந்த மாவட்டத்தின் போலீஸ் அதிகாரி அரவிந்த் திவாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சத்னா மாவட்டத்தில் இன்று (20.05.2018) பத்திரிகையாளர்களிடம்  பேசிய அரவிந்த் திவாரி கூறுகையில், சத்னா மாவட்டத்திலிருந்து70 கிமீ தொலைவிலுள்ள அஞ்சர் என்ற கிராமத்தில் மாட்டிறைச்சிக்காக சிராஜ் என்பவர் (வயது 40)மாட்டைக்கொல்லப்போவதாக குற்றவாளியான
பவான் சிங்கிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் அவர் அங்கு 3 பேரைக் கூட்டிச்சென்றுள்ளார் . அங்கு இருந்த சிராஜை
பவான் சிங்கும் அவருடைய கூட்டாளிகளும் சேர்ந்து அடித்தே கொன்றுள்ளனர்.

அப்போது சிராஜ் உடன் இருந்த சக்கீல் என்பவரும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய பவான் சிங்(35)விஜய் சிங் (26)பூல் சிங்(36) மற்றும் நாரயண் சிங்(36) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவ இடத்தில் எருமையின் இறைச்சியையும் எலும்புகளையும் கைப்பற்றியுள்ளோம்.
விசாரணையி்ல் குற்றவாளிகள் சிராஜை கம்புகளை வைத்து அடித்துக்கொன்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: