சனி, 26 மே, 2018

மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் 15 பேர் கைது

மதுரை: மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகளை நள்ளிரவில் வீடு புகுந்து
போலீசார் கைது செய்தனர். மதுரை, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் போலீசார் இந்நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் அதிகாரம் அமைப்பினரை போலீஸார் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கடந்த 3 மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. மக்கள் ஆட்சியரை சந்திப்பதற்காக அந்த அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது அங்கு வந்து அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். எனினும் அவர்களையும் மீறி மக்கள் முன்னேறி சென்றதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைக்கு அரசியல் தலைவர்கள், கட்சியினர் என அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை ஆகிய இடங்களில் மக்கள் அதிகாரம் இயக்கத்தினர் 15 பேரை போலீஸார் நள்ளிரவு வீடு புகுந்து கைது செய்தனர். இவர்கள் 15 பேரும் ஸ்டெர்லை எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்னும் தூத்துக்குடியில் பதற்றம் நிலவி வருகிறது

கருத்துகள் இல்லை: