செவ்வாய், 22 மே, 2018

அமரர் ராஜீவ் காந்தி .. இந்தியாவை காப்பாற்றிய தகவல் தொழில் நுட்ப நாயகன்!

Muruganantham Ramasamy : ஒரு முறை அமெரிக்காவில் இந்திரகாந்தியை
ஒருமனிதர் சந்திக்கவந்தார்.தன்னை தொழில் நுட்பவியலாளர்(Technocrat)
என்றும் கூறிக்கொண்டார். அவர் நிறையப்பேசினார்! அவை இந்திராவிற்கு புரியவில்லை! ஆனால் விஷயமுள்ளது என உணர்ந்து உடனிருந்த ராஜீவை அழைத்து 'இவர் ஏதோ சொல்கிறார் கேள்!' என அறிமுகப்படுத்துகிறார். அச்சந்திப்பு இந்தியாவின் தொழில்நுட்ப பாய்ச்சலுக்கு காரணமாகும் என்றோ,அது இந்தியாவின் சமூகப்பொருளாதாரத்தில் அசாதரணமான வாய்ப்புகளை உருவாக்கும் என அவருக்கோ, ஏன் யாருக்குமே தெரியாது.அப்போது விடைபெற்ற அவர் ராஜீவின் நினைவில் தன்னை ஆழமாகப் பதிந்து விட்டிருந்தார்! அந்தமனிதர் சாம் பிட்ரோடா!
பின்பு அசாதரணமான ஒரு சூழலில் இந்திராவின் மரணத்திற்கு பிறகு பிரதமராக ராஜீவ் பொறுப்பேற்க வந்த போது உலகளாவியஅரசியலும், பொருளாதாரமும், பெரும் சுழலில் சிக்கியிருந்தன. சோவியத்யூனியன் வலுக்குன்றி , உலகின் ஒற்றை பெரியண்ணனாக அமெரிக்கா உருவாகத்துவங்கியிருந்தது. வளைகுடாப்போருக்கான மேகங்கள் திரளத்துவங்கியிருந்தன! சோஸலிஸ சமூகத்திற்கான கனவுகளின் வண்ணங்கள் வெளிறியிருந்தன! இந்திய அதிகாரவர்க்கம் கெட்டிதட்டி உறைந்து போயிருந்தது! அது அசையவோ, அசைக்கவோ,தயாரில்லை! பாட்டாளிகளுக்கான அரசியலைவிட வெள்ளுடை அரசு அலுவலர்களிடம் சந்தா வசூலிப்பது எளிதென வரலாற்று முரணியக்க பொருள்முதல்வாதத்தின் புதிய சாத்தியங்களை இடதுசாரிகள் கண்டுணர்ந்திருந்த படியால் இந்தியாவின் சாமானியனின் சாபத்திற்கு தினசரி ஆளாகியிருந்த இந்திய அதிகாரவர்க்த்தின் காவலர்களாக ஆனார்கள்! எல்லா புதியசிந்தனைகளும், தொழில்நுட்பங்களும், அமெரிக்க ஏகாதிபத்யத்தின் சதியென நிறுவும் வாதங்களை இந்தியாவில் உற்பத்தியாகும் காகிதத்தில் பாதியை புத்தகங்களாக்கி பரப்பினார்கள்! மிச்சமிருப்பவைதான் பாடப்புத்தகங்களுக்கும்,இதர தேவைகளுக்கும்! விஞ்ஞானப்பூர்வ அணுகுமுறையை அடிப்படைதரிசனமாக கண்டிருந்த மார்க்ஸின் ஆன்மா அதிர்ச்சியில் உறைந்தது.

இச்சமயத்தில் சாம் பிட்ரோடாவை ராஜீவ் அழைத்தால்... பொங்கினார்கள். கல்விபெற்றால் வேலை கிடைக்கும் என நம்பி படித்திருந்த கோடிக்கணக்கான இந்திய இளைஞர்கள் கையறு நிலையில் நின்றதோ, இதுநடக்கும்!அதுநடக்கும்!என நம்பியிருந்த எதுவும் நிகழவில்லை என்பதோ அவர்கள் நினைவிலில்லை! ஒரு புறம் வேலையில்லா இளைஞர்களை புரட்சிக்கு வர அறைகூவிய ஏழைகளுகளின்தோழர்கள் மறுபுறம் எளியமக்களை அற்ப விஷயங்களுக்கு அதிகாரத்தின் தாழ்வாரங்களில் அலைக்கழித்து அவமதிக்கும் அரசுஊழியர்களின் தடித்ததோலுக்கு கவசமாய் இருப்பதுமாய் காலம் சென்றது!
"தொழில்புரட்சியில் நமக்கு வாய்ப்பில்லை!தொழில்நுட்பப்புரட்சியிலுமில்லை என்றால் நமக்கு வாழ்க்கையேயில்லை!" என ராஜீவ் அறிவித்தார். தேசத்திற்குபின்வரும் ஒரு நற்காலத்திற்காக அன்றைய காலத்தை தங்களின் கொடுங்காலமாக்கிக் கொள்ள அவரும்,சாமும் தீர்மானித்தனர்! குறிப்பாக தொலைத்தொடர்புத்துறைஊழியர்களின் இடதுசாரி தொழிற்சங்கங்கள் சாம்பிட்ரோடாவை அவமதிப்பதை தங்கள் உடனடி செயல்திட்டமாக கொண்டார்கள்! காசர்கோட்டில் தொலைபேசித்துயைில் வேலைபார்த்தபோது ஒரு கூட்டத்தில் சாம்பிட்ரோடா செல்போனின் சாத்தியங்கள் குறித்துப்பேசியபோது கூச்சலிட்டு அவமானப்படுத்தியதையும், அதையெல்லாம்பொருட்படுத்தாது தனதுதொழில்நுட்பக்கனவுகள் குறித்துப்பேசியதையும் அன்று இடதுசாரி தொழிற்சங்கங்களின் கோஷங்களை தானும் நம்பி பல கோஷங்களை எழுதியதையும் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் பதிவுசெய்துள்ளார்!
ஆனால் ராஜீவ் இதையெல்லாம் பொறுமையுடன் எதிர்கொண்டார். வேலையின்மை எனும் சமூகப்பிரச்சனையின் பல பரிமாணங்களை; அவநம்பிக்கையின் விஷத்தில் மூழ்கத்துவங்கியிருந்த இளைஞர்களின் வெளிறிய கண்களை; நாடுமுழுவதும் கண்டுவந்தவர் வேறெப்படி இருக்கமுடியும்? அன்றிடப்பட்ட அடித்தளம் பதினைந்தாண்டுகளில் பலனளிக்கத்துவங்கியபோதுதான் நாம் பாதாளத்தில் விழாமல் தப்பி வந்துள்ளது தெரிந்தது.இந்தியா போன்ற மக்கள்நெருக்கம் கொண்ட நாட்டில் பெரும் சேவைத்துறைகள் இல்லாமல் வேறெதில் நாம் இத்தனைநாள் பிழைத்திருக்க முடியும்? இன்று தகவல்தொழில்நுட்பவியல் பலமடங்கு வளர்ந்துள்ளது. அதில் பல சவால்களும் வளர்ந்துள்ளன. 96கோடி செல்போன் இணைப்புகள் இன்றுள்ளன. தனது எண்ணற்ற இயலாமைகளை இந்நாடு தொழில்நுட்பத்தாலேயே கடந்துள்ளது. பொன்னுலகக்கனவு எனக்கும் உண்டு!அதுவே நமது சாத்தியங்களின் எல்லையை விரிவாக்குகிறது! நம்மை மேலும் முன்னகர்த்துகிறது! ஆனால் இங்கே இடதுசாரிகள் நமது சாத்தியங்களை குறுக்கினார்கள்! ஆனால் தனது அக்கறையாலும், பொறுப்புணர்வாலும், ராஜீவ் அந்த சுவர்களை தகர்த்தார்! இந்திய அதிகாரவர்க்கத்தின்,அவர்களின் காவலர்களாகி விட்ட இடதுசாரிகளின், துணையின்றியே அவர்களின் அழியாத கோஷமாய் தொன்னூறுகள் வரையிருந்த 'வேலையில்லா திண்டாட்டத்தை' பழஞ்சொல்லாக்கினார்!
காலந்தோறும் தேசங்கள்தோறும் பிரச்சனைகளிருக்கும்! சித்தாந்தங்களை மட்டும் கொண்டு எதுவும் நடக்காது.அவை வெறும் சொற்குவியல்! அவற்றைத்தாண்டி காலத்தின் சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள விரிவான மனம் கொண்ட தலைவர்கள் தேவை! அப்படியொருவர்தான் ராஜீவ்...

கருத்துகள் இல்லை: