சனி, 26 மே, 2018

உடலுறுப்பு திருட்டு: எடப்பாடிக்குக் கடிதம் எழுதிய பினராயி!

உடலுறுப்பு திருட்டு: எடப்பாடிக்குக் கடிதம் எழுதிய பினராயி! மின்னம்பலம்: கேரளாவைச் சேர்ந்தவருக்கு சிகிச்சையளித்துவிட்டு, கட்டணத்திற்காக உடலுறுப்பைத் திருடிய சேலம் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கில்லிகுரிஷி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் மணிகண்டன். இவர் ஆறு பேருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகனத்தில் சென்னைக்கு வந்துள்ளார். அப்போது சேலம் மாவட்டம், மீனாட்சிபுரம் அருகே வாகனம் வந்துகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்த 7 பேரும் காயமடைந்த நிலையில், அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
பலத்த காயமடைந்த மணிகண்டனுக்கு மேல்சிகிச்சைக்காக, அங்கிருந்து 120 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் விநாயகா சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மணிகண்டன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி அவர் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் அவரது உறவினர்களிடம் தெரிவித்தனர்.

மணிகண்டனுக்குச் சிகிச்சை அளித்ததற்காக மருத்துவக் கட்டணமாக ரூ. 3 லட்சத்து 25 ஆயிரம் பணம் செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் அவரது உறவினர்களிடம் கூறியுள்ளது. மணிகண்டனின் உறவினர்கள் பணம் இல்லை என்று கூற, அவரது உடலுறுப்புகளை எடுத்துக்கொண்டு, உடலை உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.
மேலும் உடலுறுப்புகளை எடுப்பதற்கு முன் மணிகண்டனின் உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணிகண்டன் உறவினர்கள் கேரள காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயனிடமும் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றைக் கேரள முதல்வர் வெளியிட்டுள்ளார். அதில், உடலுறுப்பைத் திருடிய மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மருத்துவ அறிவியல் மூலம் நியாயப்படுத்த முடியாத கொடூரமான ஒழுக்கமற்ற செயலில் ஈடுபட்ட மருத்துவமனைக்கு உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இது குறித்துத் தமிழக முதல்வருக்குக் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார் கேரள முதல்வர்.

கருத்துகள் இல்லை: