செவ்வாய், 22 மே, 2018

தூத்துக்குடி: போலீசார் பொதுமக்களின் நெஞ்சை நோக்கி 70 தடவைக்கும் மேலாக சுட்டனர்!

நக்கீரன் :தூத்துக்குடி ஸ்டெர்லைட்
STERLITE ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்வேறு கிராம மக்கள் ஏராளமானோர் இன்று காலை பேரணியாக சென்றனர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் உருவாகி கலவரமானது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியானார்கள். 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களோடு மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  போலீசார் கூட்டத்தை கலைக்க முதலில் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். கூட்டம் கலையவில்லை என்றதும் போலீசார் வானத்தை நோக்கி சுடாமல், எடுத்த எடுப்பிலேயே பொதுமக்களின் நெஞ்சை நோக்கி சுட ஆரம்பித்துள்ளனர். சுமார் 70 தடவைக்கும் மேலாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதனால் தான் உயிரிழப்புகள் அதிகமானதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். போலீசார் வானத்தை நோக்கியோ அல்லது மைக்கில் துப்பாக்கிச் சூடு நடத்துவோம் என்றோ எச்சரிக்கை விடுத்திருக்கலாம். அதற்கு மேலாக கலெக்டர் நேற்றே போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என்றும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: