திங்கள், 1 மே, 2017

போட்டி போட்டு அதிவேகமாகச் செல்லும் பேருந்துகள் பறிமுதல்!

போட்டி போட்டு அதிவேகமாகச் செல்லும் பேருந்துகள் பறிமுதல்!பொள்ளாச்சியில் அதிவேகமாகச் சென்ற 30 பேருந்துகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை - பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் சுமார் ரூ.500 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு இருபுறமும் கற்களைக் கொட்டி காங்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குறுகிய சாலையில் செல்லும் தனியார் பேருந்துகள் அதிகளவில் பயணிகளை ஏற்றுவதற்காக ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுச் செல்கின்றன. சாலையின் இருபுறமும் செல்வதால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்வதாக கூறுகின்றனர்.
ஒரு இடத்தில் சாலைப் பணிகளை செய்யும்போது மாற்று வழியில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால் சாலை அமைக்கும் இடங்களிலும் தனியார் பேருந்துகள் முந்திக் கொண்டு செல்வதால் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி சாலை அமைக்கும் ஊழியர்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.

இதுபோன்று தனியார் பேருந்துகள் கோவை பொள்ளாச்சியில் மட்டுமின்றி, அனைத்துப் பகுதிகளிலும் காலம் காலமாக நடந்து வருகிறது. இதை யாரும் தட்டிக் கேட்பதும் இல்லை. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 29ஆம் தேதி பொள்ளாச்சி அருகே இரு தனியார் பேருந்துகள் ஒன்றுக்கொன்று முந்திக்கொண்டு மற்ற வாகனங்களுக்கு வழிவிடாமல் சாலையை ஆக்கிரமித்துக் கொண்டு சென்றுள்ளன. இதைக்கண்ட பொதுமக்கள் சிலர் பேருந்துகள் அதிவேகமாகச் செல்வதை வீடியோ எடுத்து அனைவருக்கும் அனுப்பியுள்ளனர். முக்கியமாக, பொள்ளாச்சி துணை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த வீடியோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயனுக்கு அனுப்பிய துணை ஆட்சியர் காயத்ரி, அதிவேகமாகச் சென்ற இரு பேருந்துகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் கோவை காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதிக்கும் அனுப்பி பேருந்துகளை பறிமுதல் செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ் வீடியோவில் உள்ள பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதன்படி "ஏபிஎஸ் அய்யப்பா பஸ் டிரைவர் டி. நாகராஜ் மற்றும் எஸ்.வி.டி ஸ்ரீ வேலவன் டிரான்ஸ்போர்ட்ஸ் சக்ரவர்த்தி ஆகியோர் பேருந்தை இயக்கியதாக அடையாளம் காணப்பட்டனர். பின், அவர்களது ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கிணத்துக்கடவில் அதிவேகமாகச் சென்ற 17 பேருந்துகள், பொள்ளாச்சியில் 2பேருந்துகள், கோமங்கலத்தில் 12 பேருந்துகள் நேற்று ஏப்ரல் 30ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், பேருந்துகள் வேகமாகச் செல்வது குறித்து பேசுவதற்கு நாளை மே 2ஆம் தேதி அனைத்து பேருந்துகள் உரிமையாளர்கள் கூட்டத்தை பொள்ளாச்சி துணை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சாலை நீட்டிப்புப் பணி தொடங்கியதிலிருந்து, தனியார் பேருந்துகளுக்கு எதிராக நிறையப் புகார்கள் வருகின்றன. பேருந்து ஓட்டுநர்கள் 60 நிமிடங்களுக்குள் ஒரு பயணத்தை முடிக்கும்வகையில் பேருந்தை இயக்குகின்றனர். இது சாத்தியமற்றது. 60 நிமிடங்களில் 40 கி.மீ. தூரத்தை கடக்க முயல்கின்றனர். அதன்படி, ஒரு ஓட்டுநர் சவாரி செய்யாவிட்டால், அவர் சம்பளத்தை இழக்க நேரிடுகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அதிக வருவாயை ஈட்டுவதற்காக விதிமுறையை மீறும் தனியார் பேருந்துகள் மீது வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: