வெள்ளி, 5 மே, 2017

கலைஞர் உடல் நிலை தற்போதைய நிலவரம்!

டிஜிட்டல் திண்ணை: கருணாநிதி உடல்நிலை எப்படி இருக்கு? : கோபாலபுரம் ரிப்போர்ட்!மின்னம்பலம் :  ‘திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். சீரான நிலையில் அவரது உடல்நிலை உள்ளது. மருத்துவர்களிடமிருந்து அனுமதி கிடைத்தால் அடுத்த மாதம் அவரது பிறந்த நாளில் நிச்சயமாக அவர் கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பார்’ என்று, திமுக-வின் செயல் தலைவர் ஸ்டாலின் சொல்லியிருந்தார். கருணாநிதியின் உடல்நிலை ஸ்டாலின் சொன்னதுபோலத்தான் இருக்கிறதா... அவர் பிறந்த நாளில் கட்சிக்காரர்களை சந்திப்பாரா? என்பதுதான் இப்போது திமுக-வில் அனைவரது கேள்வியாகவும் இருக்கிறது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து விவரமறிந்தவர்களிடம் விசாரித்தோம். ‘கருணாநிதிக்கு மருத்துவமனையில் இருந்தபோதே ஆக்சிஜன் செலுத்துவதற்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. டிராக்கியோஸ்டமி எனப்படும் இந்த சிகிச்சையின் மூலமாகத்தான் கருணாநிதிக்கு செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டது. மருத்துவர் மோகன் காமேஷ்வரன் அடிக்கடி கோபாலபுரத்துக்கு வந்து கருணாநிதி உடல்நிலையை கவனித்து வருகிறார்.
தற்போது கருணாநிதிக்கு செயற்கை சுவாசம் என்பது பெரிதாகத் தேவைப்படுவதில்லை. அவராகவே இயல்பாக சுவாசிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனாலும் அடிக்கடி சளி கட்டிக்கொள்வதால் அந்தக் குழாயை மருத்துவர்கள் எடுக்கவில்லை. கருணாநிதியால் பேச முடியவில்லை. ஆனால் வருபவர்களை அடையாளம் கண்டுகொள்கிறார். கருணாநிதியின் உதவியாளர் நித்யாதான் எந்த நேரமும் அருகில் இருப்பவர். கருணாநிதியின் மகள் செல்வியும் அடிக்கடி வந்து போகிறார். மிகவும் நெருக்கமானவர்கள் வந்து கருணாநிதிக்கு அருகே நின்றால் அவர்களைப் பார்த்து கண் கலங்குகிறார். செல்வி வீட்டிலிருந்து நீராகாரமாக உணவுகள் வருகின்றன. கரைக்கப்பட்ட இட்லி, அரிசிக் கஞ்சி என கொண்டு வருகிறார் செல்வி. அந்த உணவுகள் இரைப்பைக்கு நேரடியாகச் செல்லும்வகையில் வயிற்றில் துளையிடப்பட்டு டியூப்ஸ் செருகப்பட்டுள்ளது. அதன் வழியாகத்தான் உணவுகள் கொடுக்கப்படுகின்றன. வாய்வழியாக கருணாநிதி இதுவரை உணவு எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. கருணாநிதியைப் பார்க்க தினமும் முக்கிய நிர்வாகிகள் பலர் கோபாலபுரம் வருகிறார்கள். ஆனால் ஸ்டாலினோ, ‘என் அனுமதியில்லாமல் யாரும் தலைவரைப் பார்க்க அனுமதிக்காதீங்க..’ என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லியிருக்கிறாராம். அதனால் செல்வியைத் தவிர, தற்போது யாருக்கும் கோபாலபுரம் வீட்டுக்குள் செல்ல அனுமதி இல்லை. செல்வியைப் பார்க்கும்போதெல்லாம் கண்ணாடியை கழட்டிவிட்டு கண் கலங்குகிறாராம் கருணாநிதி. இந்தச் சூழ்நிலையில்தான் அவரின் பிறந்த நாளான ஜுன் 3ஆம் தேதி மருத்துவர்கள் அனுமதித்தால் தலைவரைப் பார்க்கலாம் என ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.

இந்த அறிவிப்பு வந்ததுமே ஸ்டாலினை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் கருணாநிதியின் மருத்துவர் மோகன் காமேஷ்வரன். ‘தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் ஆசைப்பட்டாங்கன்னு நீங்க சொல்லிட்டீங்க. ஆனால், இப்போ இருக்கும் சூழ்நிலையில் எல்லோரும் வந்து அவரைப் பார்ப்பது நல்லது இல்ல. அவருக்கு இப்பதான் இன்ஃபெக்‌ஷன் இல்லாமல் இருக்கு. அப்படி பார்வையாளர்கள் நிறைய வந்தால் அவருக்கு இன்ஃபெக்‌ஷன் ஆக வாய்ப்பிருக்கு. அதனால டாக்டர் அனுமதி கொடுக்கலைன்னு சொல்லிடுங்க. நிச்சயமாக இந்தச் சூழ்நிலையில் அவரை தொல்லை செய்வது நல்லது இல்லை. அதை நான் அனுமதிக்கவும் முடியாது’ என்று சொல்லிவிட்டாராம். இதுதொடர்பான அறிவிப்பை இப்போது உடனடியாக வெளியிட வேண்டாம் என ஸ்டாலின் நினைக்கிறார். இந்த மாத இறுதியில் மருத்துவர்கள் அனுமதி மறுத்த காரணத்தால் தலைவரை பிறந்தநாளில் யாரும் சந்திக்க வர வேண்டாம் என ஸ்டாலினிடமிருந்து அறிக்கை வரலாம் என்று சொல்கிறார்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: