சனி, 6 மே, 2017

மருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு ரத்து : உயர்நீதிமன்றம்!

மருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு  ரத்து : உயர்நீதிமன்றம்!
மின்னம்பலம் : மருத்துவ மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைப்படிதான் நடக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மத்திய அரசு நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியது. மேலும், மருத்துவ மேற்படிப்பில் கிராமப்புற சேவை செய்யும் மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் ராஜேஷ் வில்சன் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றி நடத்த வேண்டும் என தனி நீதிபதி புஷ்பா சத்யநாராயணா உத்தரவிட்டிருந்தார்.

எனவே இதற்கு எதிராக அரசு மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் ஆகியோர் கடந்த ஏப்ரல்-20ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மருத்துவர்கள் போராட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணை மே-5 ஆம் தேதி நீதிபதி சத்யா நாராயணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட கால அவகாசம் கொடுங்கள். போராட்டத்தை கைவிடாவிட்டால் எஸ்மா சட்டத்தை பயன்படுத்துங்கள் என்று கூறி விசாரணையை மே-6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் நேற்று மே-5 ஆம் தேதி மாலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதன்படி மருத்துவர்கள் இன்று மே-6 ஆம் தேதி பணிக்கு திரும்பினர். மருத்துவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என்று மருத்துவ சங்க பொது செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வை எதிர்த்து போராடிய கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், மாணவர்களும் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். ஆனால் இதர மருத்துவ சங்கங்கள் தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவ சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து 50% இட ஒதுக்கீட்டுக்கான மேல்முறையீட்டு மனு இன்று மே-6 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி சத்யா நாராயணா, மருத்துவ மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, மருத்துவ கவுன்சிலின் விதிமுறைப்படிதான் நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இனி கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவ மாணவர்களுக்கு தமிழக அரசு அளித்து வந்த 50 % இட ஒதுக்கீடு ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு மிகவும் ஏமாற்றமாக உள்ளது என்று மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: