செவ்வாய், 3 மே, 2016

அன்புநாதனை தப்பவைத்த போலீஸ்...தெறிக்க விடலாமா ?நெருக்கடியில் வந்திதா பாண்டே..

டந்த 22-ம் தேதி, தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லகானி உத்தரவை அடுத்த சில மணித் துளிகளில், கரூர் எஸ்.பி வந்திதா பாண்டே, மற்றும் வருமானவரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் இணைந்து அன்புநாதனின் அய்யம்பாளையம் குடோன், பண்ணை வீடு என ரெய்டு நடத்தினர். அப்போதிருந்து வந்திதா பாண்டேவுக்கு நெருக்கடி தொடங்கியுள்ளது. அன்புநாதன் வீட்டுக்குள் ரெய்டுக்காக உள்ளே நுழைந்ததும், முன்னாள் டி.ஜி.பி ராமானுஜம், டி.ஜி.பி அசோக்குமார் எனக் காவல் துறை உயர் அதிகாரிகள், வந்திதா பாண்டேவிடம் பேசியுள்ளனர். அதன்பிறகு தமிழகத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள முக்கிய அதிகாரிகள் சிலர், ‘‘தேவையென்றால் குறைந்த தொகையைக் காட்டி பணம் பிடித்ததாக வழக்குப்போடுங்கள்” என்று சொல்லி வற்புறுத்தினார்களாம்.


அந்த பங்களாவில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை அழிக்கும்படி கேட்டனராம். 2 ஆயிரம் கோடிக்கு மேல் அன்புநாதன் வீட்டில் இருந்து 20 ‘செட்டப்’ ஆம்புலன்ஸ்களில் தமிழகம் முழுவதும் பணம் ஆங்காங்கே கொண்டு சென்று, பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.  பணம் எங்கெல்லாம் இருக்கும், யாரிடம், எவ்வளவு பணம் கொடுத்துள்ளார் என்கிற பட்டியல் அந்த வீட்டில் இருந்ததாம். ஐவரணியில் உள்ள அமைச்சர்களின் சப்போர்ட் அன்புநாதனுக்கு இருந்த காரணத்தால், வேட்பாளர் தேர்வு, பணம் வசூல் உள்ளிட்டவை அன்புநாதன் மூலம் நடந்ததாகவும், கடந்த சில மாதங்களாகவே, அன்புநாதன் வீட்டு முன்பு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சீட் கேட்டு கட்சிக்காரர்கள் காத்துக் கிடந்தனர் என்கிறார்கள்.

எஸ்.பி வந்திதா பாண்டே விசாரணைக்கு வந்தபோது, 20-க்கும் மேற்பட்ட காவலர்கள், பாதுகாப்புக்கு நிறுத்தப்பட, 24-ம் தேதி காலை, அன்புநாதன், லுங்கியோடு ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு, அங்கிருந்த போலீஸாரிடம் “போய்விட்டு வந்துவிடுகிறேன்” எனச் சொல்லிவிட்டு கிளம்பினார். இன்றுவரை வீடு திரும்பவில்லை. “அன்புநாதனை திட்டமிட்டே காவல் துறையினர் தப்பிக்க விட்டுவிட்டார்கள். இதன் பின்னணியில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் இருக்கிறார். கரூர் எஸ்பி அலுவலகத்தில் இருந்துகொண்டு இவர் செய்தவை எல்லாம் வெளியே தெரியும்” என்கிறார்கள் கரூர்வாசிகள்.

குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்க இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமாரை பலமுறை தொடர்புகொண்டோம். அவர் செல்போனை எடுக்கவே இல்லை.

- சி.ய.ஆனந்தகுமார் விகடன்.com

கருத்துகள் இல்லை: