சனி, 7 மே, 2016

பாகிஸ்தான் வம்சாவளி சாதிக் கான் "லண்டன் மாநகர மேயராகிறார்"

பிரிட்டன் தலைநகர் லண்டன் மாநகரின் மேயராக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாதிக் கான் தேர்வாவது ஏறக்குறைய உறுதியாகியிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை இன்னமும் தொடர்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. சாதிக் கான் லண்டன் மேயருக்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சாதிக் கான், கன்சர்வேட்டிவ் சார்பில் போட்டியிட்ட ஜாக் கோல்ட்ஸ்மித்தை விட சுமார் ஒன்பது சதவீத வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். வெள்ளி இரவு சுமார் பத்து மணி வரையிலான வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் சுற்று வாக்குகளில் சாதிக் கான் சுமார் 44 சதவீத வாக்குகளும் அவரை எதிர்க்கும் பிரதான கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளர் ஜாக் கோல்ட்ஸ்மித் சுமார் 35 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ஒருவர் லண்டன் மேயராக தேர்வு செய்யப்பட முதல் சுற்றில் குறைந்தது 50 சதவீத வாக்குகள் பெற்றாக வேண்டும். முதல் சுற்றில் 50 சதவீத வாக்குகள் யாருக்கும் கிடைக்காத பட்சத்தில் இரண்டாவது சுற்றில், அதாவது இரண்டாவது தேர்வாக வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்களோ அந்த எண்ணிக்கையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அப்படி செய்யப்படும்போது யாருக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்கிறதோ அவர் மேயரகா தேர்வு செய்யப்படுவார்.
சாதிக் கானுக்கு முதல் சுற்றிலேயே சுமார் 44 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கும் பின்னணியில் அவர் லண்டன் மேயராக தேர்வாவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவே தேர்தல் நிபுணர்கள் கருதுகிறார்கள். எனினும் லண்டன் மேயர் தேர்தல் வாக்குகள் தொடர்ந்தும் எண்ணப்படுகிறது. முறையான இறுதி முடிவுகள் எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த எட்டு ஆண்டுகளாக கன்சர்வேடிவ் கட்சி லண்டன் மேயர் பதவியை தக்க வைத்துக்கொண்ட நிலையில், தற்போது தொழிற்கட்சி அந்த பதவியை மீண்டும் கைப்பற்றவுள்ளது.பாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்துக்கு குடியேறிய குடும்பத்தில், 1970ஆம் ஆண்டு பிறந்தவர் சாதிக் கான்.
கார்டன் பிரவுன் பிரிட்டிஷ் பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் சாதிக் கான் அமைச்சர் பதவி வகித்தார்.
ஐரோப்பிய நாடுகளின் தலைநகர் ஒன்றில் முஸ்லிம் ஒருவர் மேயராக தேர்வு செய்யப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.BBC Com

கருத்துகள் இல்லை: