புதன், 24 பிப்ரவரி, 2016

ராஜ்ய சபாவில் ரோஹித்தின் தற்கொலை விவாதம் வெடித்தது....மாயாவதி பஹுஜன் - ஸ்மிரிதி கூச்சல் குழப்பம்

டெல்லி: தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை விவகாரத்தில், பாஜகவுக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வந்ததால் ராஜ்யசபாவில் தொடர்ந்து அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, ராஜ்யசபாவில், ஹைதராபாத் பல்கலை.யில் தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்த விவகாரத்தை கிளப்பி பேசினார் மாயாவதி.  ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை நாடு முழுவதற்கும் அமல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்வதாக அவர் குற்றம்சாட்டியபோது, பாஜக உறுப்பினர்கள் குறுக்கிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதையடுத்து, அவையை 10 நிமிடம் ஒத்தி வைப்பதாக ராஜ்யசபா தலைவர் அறிவித்தார். அவை மீண்டும் கூடியபோதும், கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.
மதியம் மீண்டும் இருமுறை அவை கூடி ஒத்தி வைக்கப்பட்டது. பாஜக, தலித் எதிரி என பகுஜன் சமாஜ் கட்சி எம்.பிக்கள் கோஷமிட்டனர். விசாரணை நடத்தும் குழுவில் தலித் அதிகாரி இருக்க வேண்டும் என்று மாயாவதி கோரிக்கைவிடுத்தார். அப்போது குறுக்கிட்ட உயர் கல்வி அமைச்சர் ஸ்மிருதி இரானி, நீதி வழங்கும் நீதிபதியும், குறிப்பிட்ட ஜாதியினராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கைவிடுக்கப்படுமா? நீதியும் ஜாதி பார்த்து வருமா. இந்த நாட்டு மக்களுக்கு நாம் அதைத்தான் சொல்லப்போகிறோமா என்றார். இதனால் மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோதும் கூச்சல் குழப்பம் நிலவியதால், நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. மொத்தம் 6 முறை அவை ஒத்தி வைக்கப்பட்டு கூடிய பிறகும், கூச்சல் தீராததால் நாள் முழுமைக்கும் ஒத்தி வைத்து அவை துணை தலைவர் குரியன் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது

Read more at://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: