புதன், 24 பிப்ரவரி, 2016

ஆட்சியில் பங்கு தராத கழகங்கள்: பல முனைப் போட்டிக்கு தயாராகும் தமிழகம்

தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வரும் கழகங்கள் ஆட்சியில் பங்கு தர மறுப்பதால்,  தமிழக அரசியல் வரலாற்றில் வரவிருக்கிற 15-வது சட்டப் பேரவைத் தேர்தல் பல முனைப் போட்டிக்கு தயாராகி வருகிறது.
சுதந்திரத்துக்குப் பின் தமிழகத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தி வந்தது. 1967 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிடம் தோல்வியடைந்த காங்கிரஸ், அதற்கு பின்னர் ஆட்சியை பிடிக்கவே இல்லை. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக இரு அணிகளாக பிரிவுப்பட்டு தேர்தலை சந்தித்த போதும், காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
அதற்குப்பின்னர் இரு கழகங்களில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்தே காங்கிரஸ் போட்டியிட்டு வருகிறது.
1977 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய நாளிலிருந்து தமிழக அரசியல், இரு அணிகளாகவே இருந்து வந்துள்ளது. அதிமுக அணி, திமுக அணி என்றே நடைபெற்ற வந்த தேர்தல் தற்போது மாறியுள்ளது.
முதல் திரியை கொளுத்திப் போட்ட விடுதலை சிறுத்தைகள்
ஆட்சியில் பங்கு தரும் கட்சிகளுடனே கூட்டணி என திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்தது. மாற்று அணி உருவாவதை தடுக்கவே கழகங்கள் சிறிய கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தர மறுக்கிறது என திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
அப்படியே, பாட்டாளி மக்கள் கட்சியும் தனது தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என அறிவித்து முதல்வர் வேட்பாளரையும் அறிவித்தது.
சில எம்.எல்.ஏ. 'சீட்'களுக்காக ஏன் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டும். அப்படியே கூட்டணி வைத்து வெற்றி பெறும் சில உறுப்பினர்களையும் பல நேரங்களில் பெரிய கட்சிகள் 'விலைக்கு' வாங்கிவிடுவதாலே சிறிய கட்சிகள் வரவிருக்கும் தேர்தலில் பெரிய கட்சிகளை ஆதரிப்பதில்லை என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
தமிழக தேர்தல் பலவித கூட்டணிகளை கண்ட போதும், இதுவரை தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்றதே இல்லை. காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தனித்தே ஆட்சி செய்து வந்துள்ளன.
கடந்த 2006 ஆம் ஆண்டில் திமுக முழு மெஜாரிட்டி பெறாத நிலையிலும், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கவில்லை.
இந்நிலையில் இரு கழகங்களும் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள தயாராக இல்லாத நிலையில், வரவிருக்கும் தேர்தலில் பல முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்த விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக தலைவர் விஜயகாந்தும் முதல்வர் பதவியை அடையும் நோக்கில் தனி அணியையே அமைக்க விரும்புவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், தற்போதைய தேர்தல் களத்தில் அதிமுக அணி, திமுக மற்றும் காங்கிரஸ் அணி, மக்கள் நலக் கூட்டணி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாஜக-தேமுதிக (இன்னும் உறுதியாகவில்லை) அணி ஆகிய ஐந்து அணிகள் உள்ளன. பெரிய மாற்றங்களுக்கு வாய்ப்பில்லாத நிலையில், இந்த பல முனைப் போட்டி தொடரும் எனத் தெரிகிறது   தினமணி.com

கருத்துகள் இல்லை: