வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

கிராந்தி சைதன்யா....தமிழர்கள் விடுதலைக்கு இவர்தான் பாடுபட்டார்,,,கட்சிகள் அல்ல.

விகடன்.com கடந்த 2013- ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், சேஷாசல வனப்பகுதியில் ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டிக் கடத்துவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்க, வனத்துறை அதிகாரி ஸ்ரீதர்,  ஊழியர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். மாண்டூர் என்ற இடத்தில் 20 -க்கும் மேற்பட்டவர்கள் தலையில் செம்மரங்களை கொண்டு செல்வதை பார்த்த ஸ்ரீதர், அவர்களை பிடிக்க முயற்சித்தார். அதில் 2 பேர் மட்டுமே சிக்கினர். மற்றவர்கள் ஓடி விட்டனர். பிடிபட்ட இருவரை ஜீப்பில் ஏற்றி சென்ற போது, அதே பகுதியில் மற்றொரு கும்பல் செம்மரங்களை வெட்டி கடத்துவதை ஸ்ரீதர் பார்த்தார். தொடர்ந்து அவர்களையும் தடுக்க முயன்றார். ஆனால் அந்த கும்பல், ஸ்ரீதர் மற்றும் வன ஊழியர்களை தாக்கியது. வனத்துறை வாகனங்களையும் அடித்து நொறுக்கியது.
அத்துடன் ஜீப்பில் பிடிபட்டிருந்த இருந்த இருவரையும் கூட விடுவித்து அழைத்து சென்று விட்டது.வனப் பகுதியில் வன அதிகாரிகள் மீது நடந்த தாக்குதல் குறித்து உயர்அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்க, அவர்கள் மேலும் சில வனஊழியர்களை சம்பவ இடத்துக்கு அனுப்பினர். ஆனால் ஸ்ரீதர் உள்ளிட்ட வனத்துறை ஊழியர்களை மீட்க சென்ற வன ஊழியர்களால், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே பெச்சதேனு என்ற இடத்தில், ஏராளமான செம்மரக்கடத்தல்காரர்கள் ஒன்று கூடி, வனத்துறை ஊழியர்களைத் தாக்கி மரத்தில் கட்டி வைத்து கல்லால் அடித்ததாக சொல்லப்படுகிறது. இதில் ஸ்ரீதர், டேவிட் கருணாகர் ஆகிய இருவரும் உடல் முழுக்க படுகாயத்துடன் இறந்து போனார்கள். இதுகுறித்து திருமலை 2வது நகர போலீஸ் நிலையத்தில் வனத்துறை தரப்பில் இருந்து  புகார் அளிக்கப்பட்டது.

வனத்துறை ஊழியர்கள் கொல்லப்பட்டதையடுத்து கடும் கோபமடைந்த ஆந்திர போலீஸ்,  திருப்பதி பகுதியில் இருந்த தமிழர்கள் உள்பட 351 பேரை கைது செய்தது. அதில் 288 பேர் தமிழர்கள்.  ஆந்திராவை சேர்ந்தவர்கள் 59 பேர் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தமிழர்கள்,  ஆந்திர மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். கடந்த இரு ஆண்டுகளாக இவர்கள் சிறையில் வாடிவந்தனர். திருப்பதி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வந்தது.  ஏற்கனவே வழக்கு விசாரணை முடிவடைந்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிப்பதாக நீதிபதி ராம்பாபு உத்தரவிட்டார். இந்த வழக்கில் வன அதிகாரிகளை தாக்கி கொலை செய்தற்கான போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க ஆந்திர அரசு தவறிவிட்டதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். இதனால்  288 அப்பாவித்  தமிழர்களும் ஆந்திர சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் அந்த சம்பவம் நடந்தபோது திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்த அப்பாவித் தமிழர்களையும் ஆந்திர போலீஸ் கைது செய்து, செம்மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்று வழக்கு போட்டதும் அம்பலத்திற்கு வந்துள்ளது. விடுவிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், ''ஆந்திர சிறையில் எங்களை தினமும் அடித்து கொடுமைப்படுத்தினர். எங்களை எந்த சிறையில் வைத்திருக்கின்றனர் என்பது கூட எங்களுக்கு தெரியாது. நாங்கள் உயிருடன் இருக்கிறோமா இல்லையா? என்பது கூட எங்கள் உறவினர்களுக்கும் தெரியாது'' என்று வேதனையுடன் தெரிவித்தார்.
ஆந்திர சிறையில் இருந்து தமிழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதையடுத்து தற்போது தமிழக அரசியல் கட்சிகள் அதற்கு நாங்கள்தான் காரணமென்று உரிமை கொண்டாடத் தொடங்கியுள்ளன. தமிழக அரசும் தமிழர்களை விடுதலை செய்ய  நடவடிக்கை எடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் அதிமுக, திமுக என்ற தமிழகத்தின் பெரிய கட்சிகளைத் தாண்டி, ஆந்திராவை சேர்ந்த  மனிதாபிமானமிக்க வழக்கறிஞர் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளே,  ஆந்திர சிறைகளில் இருந்து தமிழர்கள் விடுவிக்கப்பட முக்கிய காரணம். கிராந்தி சைதன்யா என்ற ஆந்திர வழக்கறிஞர்தான்,  மனிதாபிமானத்துடன் இந்த வழக்கை கையில் எடுத்து போராடி,  தமிழர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த  வழக்குக்காக கிராந்தி சைதன்யா,   சம்பளம் என்று கூட எதையும்  பெற்றுக் கொள்ளவில்லை.
தமிழர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த ஆந்திர வழக்கறிஞர் கிராந்தி சைதன்யாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அவரிடம் பேசினோம்...

'' இந்த வழக்கில் தமிழர்களை ஆந்திர போலீஸ் மிகவும் மோசமாக நடத்தியது. நீதிமன்றத்துக்கு கொண்டு வரும் போது கூட உறவினர்களிடம் கூட பேச அனுமதிக்க மாட்டார்கள். நீதிமன்றத்தில் இவர்கள் கொண்டு வரப்படும் வாகனங்களின் ஜன்னல்களைக் கூட அடைத்து விடுவார்கள். அவர்கள் குடும்பத்தினர் ஏதாவது கொடுப்பதற்கு கூட அனுமதிக்க இருக்காது. ஏழ்மையான அவர்கள் பல கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து உறவினர்களை பார்க்க வந்திருப்பார்கள். குற்றவாளியாக இருந்தாலும் உறவினர்களிடம் பேச அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் ஆந்திர போலீஸ் அதனை செய்யவில்லை.  அத்தனை தமிழர்களையும்  விலங்கு போலத்தான்  ஆந்திர போலீஸ் நடத்தியது. இதுதுதான் எனது மனதை பாதித்தது.

இந்த சமயத்தில்தான் இவர்களுக்காக வாதாட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகும்போது நேரடியாக மிரட்டல்கள் வரவில்லையென்றாலும் மறைமுகமாக வரத்தான் செய்தது. ஆனால் நாங்கள் இது போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படுகிறது ஆள் இல்லையே. உண்மையை சொல்லப்போனால் நான் இந்த வழக்கில் ஆஜராகிறேன் என்றதும் ஆந்திர  அரசு வழக்கறிஞர்தான் பயந்தார். 

இந்த வழக்கில் நான்  ஆஜரானதும் எனக்காக தமிழக அரசு இரு வழக்கறிஞர்களை நியமித்திருந்தது. ஒருவர் முகமது ரியாஸ், மற்றொருவர் அருண். இவர்கள்தான் எனக்கு இந்த வழக்கில் எல்லாவிதத்திலும் உதவியாக இருந்தனர். திமுக தரப்பில் இருந்து எந்த உதவியும் செய்யவில்லை. நேற்று விடுதலை என்றதும்தான் திமுக  வழக்கறிஞர்கள்  சிலர் இங்கு வந்தார்கள். வந்ததும்,  'நாங்கள்தான் அதை செய்தோம்...இதை செய்தோம்'  என்று சொன்னார்கள். இதுவெல்லாம் எனக்கு சிரிப்பைத்தான் ஏற்படுத்துகிறது. திமுகவினர் இது போன்று சொல்வது நிச்சயமாக கேலிக்குரியது. வேலூர்  மாவட்டத்தை சேர்ந்த சில தொண்டு அமைப்புகள் எங்களுக்கு உதவியாக இருந்தன'' என்றார்.

இந்த வழக்குக்காக இலவசமாக வாதாடிகொடுத்தது குறித்து கிராந்தி சைதன்யாவிடம் கேட்ட போது, ''எனக்கு பணம் சம்பாதிக்க பல வழக்குகள் உள்ளன. எனது சொந்த விருப்பத்தில்தான் இந்த வழக்கில் ஆஜரானேன். இதை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை'' என நெத்தியடியாக பதில் கூறினார்.

இந்த நெத்தியடி பதில் அப்பாவிகளை வைத்து அரசியல் செய்யும் தமிழக அரசியல் கட்சிகளுக்கும்தான்!

கருத்துகள் இல்லை: