செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

இளங்கோவன் : ஜெயலலிதா விதி 110-இல் அறிவித்த அனைத்திற்கும் 144 தடை விதிப்போம்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,தமிழகத்தில் சமீபகாலமாக சில ஊடகங்கள் வெளியிட்டு வரும் கருத்துக் கணிப்புகள் உள்நோக்கம் கொண்டவையாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 5 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு மிகமிக குறைவாக கருத்துக் கணிப்பு வெளியிடுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. காங்கிரஸ் கட்சியின் உண்மையான வலிமையை வெளிப்படுத்தாமல், குறைத்து மதிப்பிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய செயல்களால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை யாரும் தடுத்துவிட முடியாது.  ஆனா சேம்சைட் கோல் அடிப்பதற்கு நெறைய பேர் இருக்காங்களே

தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைய அறிவிப்புகளை ஜெயலலிதா செய்துள்ளார். இந்த அறிவிப்புகள் எதையும் ஆட்சிக்காலத்தின் இறுதிக் கட்டத்தில் உள்ள ஜெயலலிதாவால் நிறைவேற்ற முடியாது. எப்படி விதி 110-ன்கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் வெற்று அறிவிப்புகளாக உள்ளதோ, அதைப்போலத்தான் இந்த அறிவிப்புகளும் இருக்கும். 
இத்தகைய அறிவிப்புகளை வெளியிடுவது ஒரு அரசியல் மோசடித்தனமாகும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா விதி 110-இல் அறிவித்த அனைத்திற்கும் 144 தடை விதிப்போம்.
நாளை (24.2.2016) 31 வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வேட்பாளராக விருப்ப மனு அளித்தவர்களோடு தமிழக காங்கிரசின் பார்வையாளர்கள் ஆய்வு நடத்தி, தலைமை நிலையத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்றார்.   nakkheeran.in

கருத்துகள் இல்லை: