திங்கள், 17 நவம்பர், 2014

லிங்காவின் வசூலுக்கு அரசியல் ஆச்சி மசாலா ரொம்ப முக்கியம்! ரஜினியின் அல்வா அள்ளிக்கோ அள்ளிக்கோ!

அரசியலில் இறங்க நான் பயப்படவில்லை; ஆனால், தயக்கமாக இருக்கிறது. எப்படி இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்வேன்,'' என, லிங்கா பட இசை வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியது, அவரது ரசிகர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.நடிகர் ரஜினி நடித்து வெளியாக இருக்கும், 'லிங்கா' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற, கவிஞர் வைரமுத்து, இயக்குனர் அமீர் ஆகியோர், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசினர்.விழாவில், ரஜினி பேசுகையில், ''அரசியலில் இறங்க நான் பயப்படவில்லை; ஆனால், கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. எப்படி இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்வேன்,'' என்றார்.அரசியலில் இறங்க ஆர்வமாக இருப்பது போல, ரஜினி பேசிய பேச்சு, அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இதுகுறித்து, ரஜினி ரசிகர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: கிட்டத்தட்ட, 15 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி இப்படித்தான், பேசி வருகிறார்.
மூப்பனார் த.மா.கா.,வை ஆரம்பித்து, தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்ததும், அந்த கூட்டணிக்காக குரல் கொடுத்தார். 'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்றார்.பின், பா.ஜ., பக்கம் சாய்ந்து தாமரைக்கு ஓட்டளிக்க கேட்டுக் கொண்டார். இப்படி அரசியல் பேசும் அவர், சில நேரங்களில், தண்ணீர் பிரச்னை உட்பட மக்கள் பிரச்னையிலும் ஆர்வம் செலுத்துவது போல பேச ஆரம்பிப்பார்.பாபா படம் தொடர்பாக, பா.ம.க.,வுடன் ஏற்பட்ட சர்ச்சையைக் கூட, படத்திற்கான இலவச விளம்பரமாக்கினார். லோக்சபா தேர்தல் நேரத்தில், பிரதமர் மோடி, ரஜினி வீடு தேடிச் சென்றார். ஆனாலும், ரஜினியின் தந்திரம் அறிந்து, அவரை அரசியலுக்கு வரச் சொல்லி, மோடி வற்புறுத்தவில்லை.அதன்பின், லிங்கா படபிடிப்பு, மைசூருவில் நடந்தபோது, பா.ஜ., தலைவர் அமித் ஷா, ரஜினியிடம் தொலைபேசி மூலம் பேசியதாகவும், பா.ஜ.,வின் எடியூரப்பாவும், ஈஸ்வரப்பாவும் ரஜினியை சந்தித்து பேசியதாகவும் தகவல் பரப்பப்பட்டது. ஆனால், சமீபத்தில் தமிழகம் வந்த அமித் ஷா, சென்னையில் இருந்த ரஜினியை கண்டு கொள்ளவே இல்லை.ரஜினியை கட்சிக்கு அழைத்த, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும், திடுமென தன் நிலையை மாற்றி, 'ரஜினியை நம்பி தமிழக பா.ஜ., இல்லை' என்று, கூறி விட்டார்.

விசுவாசம்:

இதற்கிடையில், சிறையில் இருந்த ஜெயலலிதா, ஜாமினில் வெளிவந்ததும், முதல் ஆளாக அவருக்கு வாழ்த்துச் சொல்லி, தன் விசுவாசத்தைக் காட்டினார்.இப்படி எல்லோருடனும் நட்புடன் இருந்து, வித்தியாசமான அரசியல் செய்வதில் தேர்ந்தவராக இருக்கும் ரஜினி, ஒரு நாளும் அரசியலுக்கு வரமாட்டார்.ஆனால், தொடர்ந்து அரசியலுக்கு வரப்போவது போல பேசி, தன் படத்தை சிறப்பாக வியாபாரம் செய்வதில் கில்லாடி. அவரின், இப்போதைய பேச்சுக்களும் அப்படிப்பட்டதே. இனியும் அவர் அரசியலுக்கு வருவார். அவருக்காக, படத்தை திரையரங்கில் ஓட வைக்கும் ரசிகர்களுக்கு, எம்.எல்.ஏ., சீட் தருவார்; ஜெயித்து வந்து, ஆட்சி அமைக்கும்போது, அமைச்சர் பொறுப்பு கிடைக்கும் என, எந்த ரசிகனும் ஏமாற மாட்டான்.இது அவருக்கும் தெரியும்; அவருடைய ரசிகனுக்கும் தெரியும். திரைப்படத்துக்குக்கூட முடிவு உண்டு. ஆனால், ரஜினியின் அரசியல் பேச்சுக்கு மட்டும், முடிவே கிடையாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ரசிகர்களால் பாதசாரிகள் அவதி:

சென்னை, ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள, பிரபல திரையரங்கில் ரஜினிகாந்த் நடித்த, 'லிங்கா' படத்தின், இசை வெளியீட்டு விழா, நேற்று நடந்தது. விழாவிற்கு வந்த ரஜினி ரசிகர்கள், நடைபாதையில் வாகனங்களை நிறுத்திச் சென்றதால், பாதசாரிகள் வாகன நெரிசலில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது. வாகனங்களை, நடைபாதையில் நிறுத்துவதை தடுக்காமல், போக்குவரத்து போலீசார் வேடிக்கை பார்த்தனர். இதனால், நுாற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டதால், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல், கடும் அவதிப்பட்டனர்.

- நமது நிருபர் -dinamalar.com

கருத்துகள் இல்லை: