ஞாயிறு, 16 நவம்பர், 2014

தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரையே வாசன் புதிய கட்சிக்கு சூட்டுகிறார்!

  தமிழ்நாடு காங்கிரசில் உறுப்பினர் அட்டையில் காமராஜர், மூப்பனார் படங்கள் இடம் பெறும் பிரச்சினையில் மேலிடத்துடன் ஏற்பட்ட மோதலால் தலைவர் பதவியை ஞானதேசிகன் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் மேலிடம் புதிய தலைவராக இளங்கோவனை நியமித்தது. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்தார். அவருக்கு ஆதரவாக காங்கிரசில் இருந்து தொண்டர்களும், நிர்வாகிகளும் விலகினார்கள்.
இதையடுத்து ஜி.கே.வாசன் காங்கிரசில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்கிடையே ஜி.கே. வாசன் தனிக்கட்சி தொடங்குவாக அறிவித்தார். இதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். வருகிற 28–ந்தேதி திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் புதிய கட்சியின் பெயர், கொடி போன்ற விவரங்களை அறிவிக்க ஜி.கே.வாசன் திட்டமிட்டுள்ளார். வாழப்பாடி, நெடுமாறன் வைகோ  கட்சிகளின் ஞாபகங்கள் வருவதை தவிர்க்க  முடியல்லையே முடியல்லையே ?
பொதுக் கூட்டத்தில் மாநாடு போல் தொண்டர்களை பங்கேற்க செய்யவும் ஏற்பாடு நடக்கிறது. இதற்காக தமிழ் நாடு முழுவதும் இருந்து ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் திருச்சியில் திரளுகிறார்கள்.
கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஜி.கே. வாசன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் பெரும்பாலான நிர்வாகிகள் மறைந்த தலைவர் மூப்பனார் சூட்டிய தமிழ் மாநில காங்கிரஸ் பெயரையே புதிய கட்சிக்கு வைக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். 1996–ம் ஆண்டு மூப்பனார் காங்கிரஸ் மேலிடத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தமிழ் மாநில காங்கிரசை தொடங்கினார். பின்னர் கட்சியை கலைத்து விட்டு ஜி.கே.வாசன் மீண்டும் காங்கிரசில் இணைந்தார். தமிழ் மாநில காங்கிரசை மூப்பனார் ஆதரவாளர்கள் த.மா.கா. என்று சுருக்கமாக அழைத்தனர். ஒரு சட்டசபை தேர்தலையும், பாராளுமன்ற தேர்தலையும் சந்தித்ததால் மக்கள் மத்தியில் த.மா.கா. பெயர் நன்கு பதிவாகி உள்ளது. எனவே அந்த பெயரையே மீண்டும் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதை ஜி.கே.வாசனும் ஏற்றுக் கொண்டார். ஆனால் தற்போது த.மா.கா. பெயரை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது.
புதுச்சேரியில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என்ற பெயரில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் உள்ள மூப்பனார் பெயரை தவிர்த்து விட்டு தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரை புதிய கட்சிக்கு சூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஞானதேசிகன் தலைமையில் வக்கீல்கள் குழுவினர் இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள். அங்கு அவர்கள் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து புதிய கட்சியின் பெயரை பதிவு செய்யும் விண்ணப்பம் அளிக்கிறார்கள்.
இதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்து த.மா.கா. பெயரை திரும்ப பெறும் முயற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். தேர்தல் கமிஷனில் தமிழ் மாநில காங்கிரஸ் பெயரை ஏற்க மறுக்கும் பட்சத்தில் ‘தமிழ் மாநில தேசிய காங்கிரஸ்’ என்ற பெயர் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மாநில தேசிய காங்கிரஸ் என்று பெயர் வைத்துக் கொண்டாலும் த.மா.கா. என்றே அழைக்கலாம் என்பதால் இந்தப் பெயரே சூட்டப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பாக சென்னையில் ஜி.கே.வாசன் ஆதரவு முக்கிய தலைவர்கள் கூட்டம் சென்னையில் ஜி.கே.வாசன் இல்லத்தில் நடந்தது. இதில் கட்சி பெயர் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. புதிய கட்சியின் அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் அசோகா தெருவில் உள்ள ஜி.கே.வாசன் அலுவலகத்திலேயே இயங்கும். இது புதிய கட்சியின் அலுவலக முகவரியாக தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்படுகிறது.
மூப்பனார் தொடங்கிய த.மா.கா.வும் இங்குதான் செயல்பட்டது என்பதால் இந்த முகவரியே மீண்டும் கொடுக்கப்படுகிறது. புதிய கட்சி பெயர் குறித்து ஞானதேசிகன் கூறுகையில், ‘‘எங்கள் கட்சி பெயர் குறித்து இன்னும் ஓரிரு நாளில் முடிவு செய்து விடுவோம். திருச்சி கூட்டத்தில் பெயர் அறிவிக்கப்பட்டு கொடி அறிமுகப்படுத்தப்படும்’’ என்றார்.
திருச்சி கூட்ட ஏற்பாடுகளை கவனித்து வரும் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன் கூறுகையில், ‘‘திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து கலந்து கொள்ளும் வகையில் பிரமாண்ட பந்தலும் 60 அடி நீள மேடையும் அமைக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.thinaboomi.com

கருத்துகள் இல்லை: