சனி, 22 நவம்பர், 2014

மேயர் சைதை துரைசாமி ராஜினாமா? கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை?

 முன்பு மேயர்களாக இருந்த மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் ஆகியோர் மீது சைதை துரைசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். வியாழக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்திலும் அவர்கள் மீது சைதை துரைசாமி குற்றச்சாட்டுகளை கூறினார். இதற்கு பதில் அளித்து அறிக்கை வெளியிட்ட முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் மேயர் சைதை துரைசாமி கீழ்ராஜ மங்கலத்தில் 10 ஏக்கரில் பண்ணை வீடு கட்டி இருப்பதாக குற்றச்சாட்டு கூறி இருந்தார். இந்த புகார் எழுந்த சில தினங்களுக்குள் மேயர் சைதை துரைசாமி அ.தி.மு.க. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்க கூடாது. எந்த நிகழ்ச்சிகளிலும் அவர் பெயரை போஸ்டரில் போடக்கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. கட்சி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள், மண்டல குழு தலைவர்களுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவுமுதலே இந்த பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் சைதை துரைசாமி மேயர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக இன்று காலை சென்னையில் தகவல் பரவியது. அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையும் இது பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. T இதற்கிடையே இந்தியா டுடே சார்பில் சென்னை சிறந்த நகரமாக தேர்ந்து எடுக்கப்பட்டு வழங்கப்படும் விருதை பெறுவதற்காக மேயர் சைதை துரைசாமி டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: