புதன், 19 நவம்பர், 2014

இந்தியாவில் முதல் இபோலா நோயாளி டெல்லியில் - தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை


லைபீரியாவில் டெல்லி வந்த இந்தியரை எபோலா வைரஸ் தாக்கியிருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அவரை தனிமைப்படுத்தியுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, சியர்ரா லியோன், கினியாவில் ஆயிரக் கணக்கானோரின் உயிரை எபோலோ வைரஸ் குடித்துள்ளது. இந்நிலையில் லைபீரியா சென்ற 26 வயது இந்தியரை எபோலா வைரஸ் தாக்கியது. சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த அவர் டெல்லி வந்தார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.  பரிசோதனையில் அவரது ரத்தத்தில் எபோலா இல்லாவிட்டாலும் விந்தணுவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் உள்ள சுகாதார மையத்தில் அவர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
குணமடைந்த பிறகும் விந்தணுவில் 3 மாதம் வரை எபோலா வைரஸ் இருக்கலாம் என்று நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. அந்த நபர் குறைந்தது 6 மாதங்களாவது உறவு கொள்ளாமல் இருக்க வேண்டும். இல்லை என்றால் ஆணுறை அணிந்து கொள்ள வேண்டும் என்று அது மேலும் தெரிவித்துள்ளது. அந்த வாலிபரின் விந்தணு பரிசோதனையில் எபோலா இல்லை என்று வரும் வரை அவர் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார். அவரால் நோய் பரவும் என்று இல்லை இருப்பினும் மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் விஷப்பரீட்சை வேண்டாம் என்று தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

tamil.oneindia.com/n

கருத்துகள் இல்லை: