வியாழன், 20 நவம்பர், 2014

2ஜி வழக்கு விசாரணையிலிருந்து சிபிஐ இயக்குநர் சின்ஹா நீக்கம்

2 ஜி வழக்கு விசாரணையில் இருந்து  சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 2ஜி வழக்கு விசாரணையில் அவர் தலையிடக்கூடாது என்றும், சின்ஹா இடத்தில் வேறு ஒரு அதிகாரி இருந்து இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ள நீதிபதிகள், சிபிஐ-யின் நற்பெயர் மற்றும் மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்ற நோக்கில்  இது தொடர்பாக மேலும் விரிவான உத்தரவுகளை பிறப்றப்பிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்தில் சின்காவுக்கு எதிராக பூஷண் தாக்கல் செய்துள்ள ஆதாரங்கள் நம்பகத்தன்மை உள்ளதாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
" எங்களை பொறுத்தவரை எல்லாமே சரியாக இல்லை. சிபிஐ இயக்குநர் சின்ஹாவுக்கு எதிராக தொண்டு நிறுவனம் கூறியுள்ள குற்றச்சாட்டில் 'சில நம்பகத்தன்மை'  உள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம்" என நீதிபதிகள் கூறினர்.


முன்னதாக சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவின் வீட்டிற்கு 2 ஜி உள்ளிட்ட ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடிக்கடி வந்து சென்றதாக , பொது நல வழக்காடு மையம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதற்கு ஆதாரமாக ரஞ்சித் சின்ஹா இல்லத்தின் வருகைப் பதிவேட்டை நீதிமன்றத்தில் சமர்பித்தது. எனினும் வருகைப் பதிவேட்டை வெளியிட்ட நபரின் விவரங்களை வெளியிட பொதுநல வழக்காடு மையம் மறுப்பு தெரிவித்து அதற்கு மன்னிப்பு கோரியது.
இந்நிலையில் இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் தங்களுக்கு உதவ வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. இது தொடர்பாக தனது கருத்துகளை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்த ஆனந்த் குரோவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டார்.
2ஜி   விசாரணையில் தலையீடு: ரஞ்சித் சின்ஹா மீது அரசு வழக்கறிஞர் குற்றச்சாட்டு

2 ஜி வழக்கில் ரஞ்சித் சின்ஹாவின் தலையீடு சிபிஐயின் நிலைப்பாட்டிற்கு எதிரானது என தெரிவித்த அவர் , ரஞ்சித் சின்ஹாவின் நிலைப்பாட்டு ஏற்கபட்டிருந்தால் 2ஜி வழக்கு விசாரணையே சீர்குலைந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.

அப்போது குரோவரின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த சிபிஐ கூடுதல் இயக்குநர் அஷோக் திவாரிக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். " நீங்கள் என்ன அவரது ஏஜெண்டா என கேட்ட நீதிபதிகள், நீதிமன்றத்திற்கு ஏராளமான சிபிஐ அதிகாரிகள் இருந்தததை கண்டித்தனர். உங்களுக்கு இங்கே என்ன வேலை..? நாங்கள் உங்களை அழைத்தோமா? எனக் கேட்டு, போய் உங்களது அலுவலகத்திற்கு சென்று வேலையை பாருங்கள் என்றும் காட்டமாக கூறினர்.

சிபிஐ தரப்பு வழக்கறிஞர், வழக்கு தொடர்பான கோப்புகளில் உதவுவதற்காக அவர்கள் வந்துள்ளனர் என்று கூறியதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
இந்த நிலையிலேயே இன்று பிற்பகல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 2ஜி வழக்கு விசாரணையிலிருந்து சின்ஹாவை நீக்கி நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
சின்ஹா ராஜினாமா செய்வாரா?
ரஞ்சித் சின்ஹாவின் வீட்டிற்கு 2 ஜி உள்ளிட்ட ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடிக்கடி வந்து சென்றதாக குற்றச்சாட்டு கிளம்பிய உடனேயே அவர் சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.
சிபிஐ விசாரிக்கும் ஒரு வழக்கில் அதன் இயக்குநர் விலகி இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது, சின்ஹாவுக்கு மிகப்பெரிய அவமானமும், பின்னடைவாகும். இதனால் அவர் இனியும் அப்பதவியில் நீடிப்பது சரியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்விஷயத்தில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  ஒருவேளை மத்திய அரசு தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டால், சின்ஹா தமது பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்படும்.
விகடன்.com

கருத்துகள் இல்லை: