வெள்ளி, 21 நவம்பர், 2014

ஆசிரியர் மீது மாணவனின் தந்தை பயங்கர தாக்குதல் MLM தொழிலதிபரை கைது செய்யக்கோரி ஆசிரியர்கள் சாலை மறியல்

சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி 4–வது குறுக்கு தெருவில் லயோலா தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த ரொனால்டு என்ற மாணவர் 8–ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது தந்தை அருளானந்தம் ‘ரிச் இந்தியா’ என்ற பெயரில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று மதியம் மாணவர் ரொனால்டு பள்ளி மைதானத்தில் வைத்து விசில் அடித்தார். உடனே உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர்ராஜ் மாணவர் ரொனால்டுவை எச்சரித்து அடித்தார்.
இதுபற்றி மாணவர் ரொனால்டு தனது செல்போன் மூலம் தந்தை அருளானந்தத்துக்கு மெசேஜ் அனுப்பினார். உடனே அவர் தனது கம்பெனியில் வேலை செய்யும் 50 பேரை பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.

அவர்கள் திபுதிபுவென பள்ளிக்குள் புகுந்தனர். உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர்ராஜ் மீது கொடூர தாக்குதல் நடத்தினார்கள். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
காயம் அடைந்த ஆசிரியர் பாஸ்கர்ராஜ் உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆசிரியர் தாக்கியதில் மாணவர் ரொனால்டுவுக்கும் காயம் ஏற்பட்டிருந்தது. அவரும் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 தரப்பினரும் போலீசில் புகார் செய்தனர். பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியரை தாக்கியவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதே போல் மாணவர் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியரை தாக்கியதாக 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் ஆசிரியர் மீது தாக்குதலுக்கு காரணமான தொழில் அதிபர் அருளானந்தத்தை கைது செய்யக் கோரி இன்று காலை 8.30 மணியளவில் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு ஆதரவாக மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் இறங்கினர்.
இதனால் காலையில் நெரிசல் மிகுந்த நேரத்தில் கோடம்பாக்கம் ஆற்காடு சாலை ஸ்தம்பித்தது. தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தொழில் அதிபர் அருளானந்தத்தை கைது செய்தால்தான் மறியலை கைவிடுவோம் என்று ஆசிரியர்கள் கூறினார்கள்.
அதற்கு போலீசார் அருளானந்தம் தலைமறைவாகி விட்டதாகவும், அவரை தேடி கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து 3 மணி நேரம் கழித்து ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இன்று பகலில் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், கூடுதல் கமிஷனர்கள் சுபாஷ்குமார், திருஞானம், துணை கமிஷனர் பகலவன் மற்றும் போலீசார் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மதியம் 1 மணியளவில் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தையை முடித்து விட்டு கமிஷனர் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நின்றிருந்தார். அப்போது பள்ளி நிர்வாகி ஒருவர் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அருளானந்தம் தலைமறைவாக இருக்கிறார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த விவகாரத்தில் கமிஷனர் ஜார்ஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்ற கூறினார்.
இதனை ஏற்றுக் கொள்ளாத பெற்றோர்கள் 17 பேரை கைது செய்த நிலையில் அவரை மட்டும் தப்ப விட்டது ஏன் என்று கேள்வி கேட்டு அங்கேயே கூடி இருந்தனர்.
சிங்கம்.2 படத்தில் மாணவரை தாக்கிய ஆசிரியரை ஒரு கும்பல் பள்ளிக்குள் புகுந்து கொடூரமாக தாக்குதல் நடத்தும். அதே பாணியில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.maalaimalar.com

கருத்துகள் இல்லை: