செவ்வாய், 18 நவம்பர், 2014

பிகாரில் லாலு கட்சியும் நிதீஷ்குமாரின் கட்சியும் ஒரே கட்சியாகிறது, 20 ஆண்டுகளுக்கு பின் ஒன்று சேர்ந்தனர்

பாட்னா: மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., பெற்ற வெற்றி, பீகார் மாநில அரசியல்வாதிகளை கலக்கம் அடையச் செய்துள்ளது. அதனால், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் விரைவில் இணைய உள்ளன. லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கலைக்கப்படலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன. லோக்சபா தேர்தலில், பா.ஜ., பெற்ற பிரமாண்டமான வெற்றி, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமாருக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது. அதனால், லோக்சபா தேர்தலுக்கு பின், பீகாரில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலின் போது, தன் பரம எதிரியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி சேர்ந்தார்.
இந்தக் கூட்டணி, இடைத்தேர்தலில் நல்ல பலன் அளித்தது. கணிசமான தொகுதிகளை, இரண்டு கட்சிகளும் பிடித்தன.அதேநேரத்தில், மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில், கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது, லாலுவுக்கும், நிதிஷ்குமாருக்கும் மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.பீகாரில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதும், இந்தக் கலக்கத்திற்கு ஒரு முக்கிய காரணம். பீகாரில் ஒரு வேளை, பா.ஜ., ஆட்சியைப் பிடித்து விட்டால், தங்களின் செல்வாக்கு காணாமல் போய் விடும், தாங்களும் இருந்த இடம் தெரியாமல் போய் விடலாம் என, இருவரும் நம்புகின்றனர்.அதனால், லாலு பிரசாத் யாதவ், தன் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தை கலைத்து விட்டு, நிதிஷின் ஐக்கிய ஜனதா தளத்துடன் ஒன்றிணைந்து, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக, லாலுவுக்கு நெருக்கமான, அவரது கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் கூறுகையில், 'அரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களுக்குப் பின், லாலுவும், நிதிஷ்குமாரும், தங்களின் கட்சிகளை ஒன்றிணைக்க, கொள்கை அளவில் ஒப்புக் கொண்டு உள்ளனர்' என்றார்.

பீகாரின் மூத்த அமைச்சர் ரமாய் ராம் கூறுகையில், ''பீகாரில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும், கூட்டணி அமைத்து போட்டியிட்டால், துரோகங்கள் நடக்கலாம். எனவே, இணைப்பது தான் பலத்தை தரும்,'' என்றார்.
*லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியானது, 1997ல் உதயமானது. வடகிழக்கு மாநிலங்களில் பெற்ற கணிசமான வெற்றியால், 2008ல், தேசிய கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆனால், 2010ல், இந்த அந்தஸ்தை இழந்தது. தற்போது, மாநில கட்சியாக உள்ளது.
*பீகாரில் சரத் யாதவ் தலைமையில் செயல்பட்ட ஜனதா தளம், லோக்சக்தி, ஜார்ஜ் பெர்னாண்டசின் சமதா கட்சி போன்றவை இணைந்து, ஐக்கிய ஜனதா தளம் என்ற பெயரில், 2003 அக்டோபரில் உதயமானது.
*கடந்த, 1991ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது, லாலு பிரசாத்தும், நிதிஷ்குமாரும் ஒன்றாக பிரசாரம் செய்தனர். அதன்பின், அவர்கள் பிரிந்து விட்டனர்.
*பீகாரில், ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலின் போது தான், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, லாலுவும், நிதிஷும் அணி சேர்ந்தவர்; ஒன்றாக பிரசாரம் செய்தனர்.
அதன்பின், தற்போது லாலு கட்சியும், நிதிஷ் கட்சியும் இணைக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது. தினமலர்.com

கருத்துகள் இல்லை: