வெள்ளி, 12 அக்டோபர், 2012

விவாத King ஒபாமா ஏன் அடக்கி வாசித்தார்?

அடுத்த மோதலுக்குத் தயாராகிறார் ஒபாமா: 'பொய் ஸ்பெஷலிஸ்ட்' ராம்னிக்கு பதிலடி தருகிறார்!

நியூயார்க்: அக்டோபர் 3 ம் தேதி 'பொய் ஸ்பெஷலிஸ்ட்' மிட் ராம்னியுடன் நடந்த முதல் நேரடி விவாதத்தில் தான் மிகவும் நாகரீகமாகவும் மென்மையாக நடந்து கொண்டதாகவும், முடிந்துபோன விவகாரத்தைப் பேசவேண்டாம்... அடுத்து நடக்கப் போவதைப் பேசுங்கள் என்றும் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய அங்கமாக நடைபெறும் பிரதான வேட்பாளர்களின் முதல் நேரடி விவாதம் அக்டோபர் 3 ம் தேதி டென்வர் நகரில் நடைபெற்றது. அதிகம் அலட்டிக்கொள்ளாமல் பங்கேற்ற ஒபாமாவை விட மிட் ராம்னி திறமையாக வாதாடினார் என்று கருத்து கணிப்பு தெரிவித்தது.
முன்பு தான் பேசிய அத்தனை அபத்தக் கருத்துக்களுக்கும் மாறாக ராம்னி அடுத்தடுத்து பொய்கள் கூறியதில் ஒருவேளை ஒபாமா அசந்துவிட்டாரோ என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். பின்னர் அதுதான் உண்மை என்பதை ஒபாமாவே தெரிவித்திருந்தார்.

சொந்தக் கட்சியினரோ, விவாதத்திற்கு பெயர் பெற்ற ஒபாமா ஏன் அடக்கி வாசித்தார் என்று கேள்வி எழுப்பினர். இந்நிலையில், தான் மிகவும் மென்மையாகவும், அதிகப்படியான நாகரீகத்துடனும் நடந்து கொண்டதாக, டாம் ஜாய்னர் ரேடியோ நிகழ்ச்சியின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஒபாமா.

ராம்னி மீண்டும் மீண்டும் பொய்
"மேடையில் நின்று கொண்டு அவரைப் பார்த்து, 'நீங்கள் சொல்வது பொய், பொய்' என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டே இருக்க முடியும். கவர்னர் ராம்னி நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறார். சில விஷயங்களில் அவரது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து விலகி இருக்கிறது. மெடிக்கேர் வவுச்சர் உள்ளிட்ட சில விஷயங்களை மேலும் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார். இவை அனைத்தும் அவருக்கு எதிராகத்தான் திரும்பும்," என ஒபாமா தன் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
மேலும் கூறுகையில், நியூயார்க் லாங் ஐலண்டில் நடைபெறும் இரண்டாவது விவாதம் ரொம்பவும் சூடாக இருக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கதம் கதம்...
ஏபிசி தொலைக்காட்சி நேரடி உரையாடலில், "அந்த விவாதத்தின் போது என்ன நடந்தது... ஏன் உங்கள் விவாதம் சோபிக்கவில்லை என்று கேட்கபட்டது ‘அன்று கவர்னர் ராம்னிக்கு நல்ல இரவாக இருந்த்து எனக்கு இல்லை' என்று சுருக்கமாக ஒபாமா பதிலளித்தார்.
விரிவாக சொல்ல மாட்டீர்களா என்று செய்தியாளர் கேட்டுப் பார்த்தார்.
அதற்கு, "நான் சிறு வயது முதலே விளையாட்டில் தீவிரமாக பங்கேற்பவன். ஒரு போட்டியில் தோல்வி என்றால், அடுத்த போட்டியை நினைக்க ஆரம்பித்து விடுவேன். நடந்ததைப் பற்றி விரிவாக பேசி பயனில்லை.. முடிஞ்சது முடிஞ்சுப் போச்சு..." என்றார் அழுத்தமாக.
கிட்டத்தட்ட கதம் கதம் என்று சொல்லவில்லை.. மற்றபடி ரஜினி ரேஞ்சுக்கு படு ஸ்டைலாக இருந்தது அவர் சொன்னவிதம் (அதுக்காக உடனே அவர் ரஜினி ரசிகர்னு சொன்னதா எடுத்துக்காதீங்கப்பா.. ஜஸ்ட் ஒரு உதாரணம்!)!
பைடன் - ரயன் விவாதம்
குடியரசுத் தலைவர் போட்டியாளர்களின் மூன்று விவாதங்கள் தவிர, குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளார்களும் ஒரு விவாதத்தில் கலந்து கொள்கிறார்கள்.
தற்போதைய துணை அதிபர் ஜோ பைடனும், மிட் ராம்னியின் சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியுடும் பால் ரயனும் இன்று, அக்டோபர் 11ம் தேதி கெண்டகி மாநிலத்தின் டேன்வில் நகரில் விவாதிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: