வியாழன், 21 ஜூலை, 2011

இன்ஸ்பெக்டர் லட்சுமணன் பல கோடி மதிப்பு சொத்து சேர்த்த அம்பலம்

தமிழக போலீசாரின் கண்ணியத்தை கெடுக்கும் வகையில் செயல்பட்டு, சர்ச்சைக்கு உள்ளாகி, சஸ்பெண்டில் உள்ள இன்ஸ்பெக்டர் லட்சுமணனுக்கு, பல கோடி ரூபாய் மதிப்பில் கொங்கு மண்டலத்தில் சொத்து இருப்பதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பாய்ச்சல் கிராமத்தில் பிறந்தவர் லட்சுமணன். 1997ல் போலீஸ் துறையில் எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தார். பயிற்சிக்கு பின், முதன் முறையாக கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,யாக ஆறு மாத காலம் பணியாற்றினார்.

கடந்த 1998 டிசம்பரில் சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய போது, ஓமலூரைச் சேர்ந்த சங்கர் என்பவரை திருட்டு வழக்கில் கைது செய்த இவர், அவரை வாயில் துப்பாக்கியால் சுட்டு என்கவுன்டர் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த என்கவுன்டர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின், 1999 செப்டம்பர் முதல், 2000 செப்டம்பர் வரை இவர் சஸ்பெண்டில் இருந்தார்.

ஒரு ஆண்டுக்கு பின் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, அப்போதைய வேளாண் அமைச்சரின் ஆதரவு, கருணையால் மீண்டும் இவருக்கு போலீஸ் துறையில் பணி வழங்கப்பட்டது. இன்ஸ்பெக்டராக பதவி உயர்வையடுத்து, ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். 2006 மே மாதம் தேர்தலுக்கு பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, ஜூன் மாதம் சேலம் பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார்.

பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இவர் பணியில் இருந்தபோது, இவர் மீது ஏராளமான புகார்கள் குவிந்தன. இதையடுத்து, ஏ.டி.ஜி.பி., விஜயகுமார், சேலத்தில் நேரடியாக முகாமிட்டு, விசாரணை மேற் கொண்டார். இந்த விசாரணையில், லட்சுமணன் மீதான புகார்கள் நிரூபணமானது. லட்சுமணன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, போலீஸ் வட்டாரங்களில் நிலவியது. ஆனால், மீண்டும் அப்போதைய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் கருணையால், இவர் கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார்.

அமைச்சரின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு மாற்றப்பட்டதால், அவரின் அடாவடிகளும், அதிரடி வசூல்களும் அதிகரித்தன. அத்துடன் வீரபாண்டி ஆறுமுகத்தை, "அப்பா' என்றே அழைக்கத் துவங்கினார். கடந்த 2008ல் கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு பணிக்கு வந்த இவர், 2011 பிப்ரவரி வரை இங்கு பணியாற்றினர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இவர் தர்மபுரி மாவட்டத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியில் சேர்ந்த இவர், தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு, சேலத்தில் முகாமிட்டு வீரபாண்டி ஆறுமுகத்துக்கு தேர்தல் பணிகளை செய்து வந்தார்.

இது குறித்து, சேலம் மாவட்டத்தின் அப்போதைய கலெக்டர் சந்திரகுமார், தேர்தல் கமிஷனுக்கு தொடர்ந்து சென்ற புகார்களை அடுத்து லட்சுமணன், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு, இரண்டு நாள் மட்டுமே பணியாற்றிய லட்சுமணன், மருத்துவ விடுப்பை பெற்றுக் கொண்டு, சேலத்தில் முகாமிட்டார். இது குறித்து, தென்மண்டல ஐ.ஜி., விளக்கம் கேட்டார். போதிய விளக்கம் தெரிவிக்காததால், இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஜாதி சாயத்தை பூசிக் கொண்டு, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, மீண்டும் தன்னை காத்துக் கொள்ளும் வகையில், தமிழக வேளாண் அமைச்சர் செங்கோட்டையன் உட்பட கவுண்டர் இன அமைச்சர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயன்றார். ஆனால், இவரை முழுமையாகத் தெரிந்து கொண்ட அமைச்சர்கள், இவருக்கு அடைக்கலம் தர மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில், இவர் மீது அதிகப்படியான புகார்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, 2006 முதல், 2011 வரையிலான தி.மு.க., ஆட்சியில் இவர் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன. தற்போது, கடந்த ஆட்சியில் புகார் அளித்தவர்கள் மீண்டும் புகார் அளிக்கத் துவங்கியுள்ளனர்.

சேலம் அங்கம்மாள் காலனி நில விவகாரம், பிரிமியர் ரோலர் மில் வழக்குகளில் இவர், 12வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் இவரால் பாதிக்கப்பட்டவர்கள், சென்னை ஐகோர்ட்டில் இவர் மீது மட்டுமின்றி, தமிழக போலீஸ் துறை மீதும் வழக்கு பதிவு செய்ய தயாராகி வருகின்றனர்.

இவர் தன் மீது மட்டுமின்றி, தன் உறவினர்கள் பெயர்களிலும், 14 ஆண்டு போலீஸ் துறை பணி மூலம், பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்திருப்பதாக புகார்கள் சென்றுள்ளன.

கொங்கு மண்டலத்தில் கொடி கட்டி பறந்து, கோடிக்கணக்கில் சொத்துகளை குவித்துள்ள இவர் மீது, காவல் துறையும், அரசும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வி தான், போலீசார் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: