புதன், 20 ஜூலை, 2011

அதிமுக ஆட்சி ஒரே வருடத்தில் கவிழும்:ஸ்டாலின்

ஜெயலலிதாவே உறுதுணையாக இருப்பார் : ஸ்டாலின்
காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம், மறைமலைநகர் நகராட்சி அண்ணா திடலில் நேற்று மாலை நடந்தது.

மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் சுந்தர், பொன்மொழி, எட்டியப்பன், சுகுமார், தண்டபாணி, மல்லிகா மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சண்முகம் வரவேற்றார்.
கூட்டத்தில், முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,
திமுக சந்திக்காத தோல்வியும் இல்லை, பெறாத வெற்றியும் இல்லை. எப்படி வெற்றி பெற்றோம் என்று வெற்றி பெற்றவர்களுக்கும் புரியவில்லை. அதே போல், எப்படி தோற்றோம் என்று நமக்கும் புரியவில்லை. மீண்டும் நாம் ஆட்சிக்கு வருவோம். ஒரு வருடத்திலோ, 6 மாதத்திலோ இந்த ஆட்சி கவிழும். அதற்கு ஜெயலலிதாவே உறுதுணையாக இருப்பார்.

சமச்சீர் கல்வியை கருணாநிதி மட்டுமே உட்கார்ந்து தயாரிக்கவில்லை. கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், அறிவியலாளர்கள், சமூகநல ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் சேர்ந்து உருவாக்கியதுதான் சமச்சீர் கல்வி. 2010&11ல் 1 மற்றும் 6&ம் வகுப்புக்கு இந்த கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போது, இதை எதிர்த்து சிலர், உயர்நீதிமன்றம் சென்றனர். அது ஏற்கப்படவில்லை. தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது. 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நாம் கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்தார்கள்.

நாம் குரல் கொடுத்தோம். அதையும் மீறி அதை ரத்து செய்து அரசு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், உயர்நீதிமன்றமோ, சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

கருணாநிதி ஆட்சியில் இதுபோன்ற தீர்ப்பு வந்திருந்தால், ‘கருணாநிதி ஏன் ராஜினாமா செய்யவில்லை?’ என்று ஜெயலலிதா கூறியிருப்பார்.
அதையே பல்வேறு தலைவர்களும் வலியுறுத்தியிருப்பார்கள். ஆனால் ஜெயலலிதாவை ராஜினாமா செய்ய சொல்லி கருணாநிதி வற்புறுத்தவில்லை.

உயர்நீதிமன்ற தீர்ப்பு தவறு என்று எந்த தலைவர்களும் சுட்டிக் காட்டவில்லை.
ஜெயலலிதாவின் தவறுகளை எந்த நாளேடும் சுட்டிக் காட்டுவதில்லை. மாணவர்கள் நலன் கருதி கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டத்தை முடக்கியதால் 2 மாதங்களாக பாடங்கள் நடத்தப்படவில்லை. என்ன படித்து கிழித்தோம் என்று சொல்வார்கள்.

அதுபோல வாத்தியார்களும் என்ன பாடம் நடத்துவது என்று தெரியாமல் வெற்று பேப்பரை கிழித்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு செல்வோம் என்று அரசு கூறியுள்ளது. அப்படியென்றால் இன்னும் 6 மாதத்துக்கு படிப்பே இல்லை என்ற நிலை மாணவர்களுக்கு ஏற்படும். அதற்குத்தான் அந்த அம்மா, ஏற்கனவே ஒரு திட்டத்தை போட்டுள்ளார். அதுதான் ஆடு, மாடு வழங்கும் திட்டம்.

பல்வேறு வழக்குகளை போட்டு திமுகவினரை கைது செய்து வருகின்றனர். 2006&11 வரை நடந்த பத்திரப்பதிவுகளில் மட்டும் ஏதோ மோசடி செய்திருப்பதாக கருத்தில் கொண்டு, குறிப்பாக திமுகவினர் பத்திரப்பதிவு செய்ததை மட்டும் எடுத்து பழி வாங்குகிறார்கள்.

அப்படியானால் இதே ஜெயலலிதா, 2001&06 வரை நடந்த பத்திரப்பதிவை ஏன் எடுக்கவில்லை. அப்படி எடுத்தால் சிறுதாவூர், கொடநாடு அடங்கும் என்பதாலும், அதிமுகவினரின் பத்திரப்பதிவும் அடங்கும் என்பதாலும் எடுக்கவில்லை.

பத்திரப்பதிவு அதிகாரிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் ஒன்றை கூறிக் கொள்கிறேன். ஆட்சியாளர்களின் அதிகாரத்துக்கு பயந்து, அவர்களின் பேச்சை கேட்டு திமுகவினர் மீது வழக்கு தொடர்ந்தால் அனைத்து அதிகாரிகளையும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துவோம். நான் அதிகாரிகளை மிரட்டவில்லை. நியாயத்தைதான் சுட்டிக் காட்டுகிறேன்.

நில மோசடியில் வழக்கு பதிய வேண்டுமென்றால் எப்ஐஆர் போட்டிருக்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்க வேண்டும்.

ஆனால் எதுவுமே இல்லாமல் திமுகவினருக்கு எதிராக கட்டாயப்படுத்தி புகார் வாங்குகிறார்கள். இது நியாயமில்லை. சட்டப்படி திமுக வழக்கறிஞர் அணி இதை சந்திக்கும்’’ என்று பேசினார்.

கருத்துகள் இல்லை: