செவ்வாய், 19 ஜூலை, 2011

திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு,கடுமையாக விமர்சித்த கருணாநிதி

கரூர்: திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வெளியேற இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றது.

தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ. ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் மீது 2ஜி ஊழல் முத்திரை, சட்டமன்ற தேர்தல் தோல்வி, திகார் சிறையில் மகள் கனிமொழி என்று அடுத்தடுத்து விழுந்து வரும் அடியால், நிலை குலைந்து போய் இருக்கின்றார் திமுக தலைவர் கருணாநிதி.

இந்த நிலையில் இன்னொரு அதிர்ச்சியையும் அவர் சந்தித்துள்ளார். இது எதிர்பாராத விதமாக நேர்ந்த அதிர்ச்சி. திமுகவில் சீனியர், முதன்மை செயலாளர், கலைஞர் அவையின் விகடகவி என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மூலம் இந்த அதிர்ச்சி அவருக்கு வந்துள்ளது.

தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஜூலை, 14 ம் தேதி வியாழக்கிழமை அன்று திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவாஜி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அடுத்த பொறுப்பாளர் யாரை நியமிப்பது என ஆலோசனை கூட்டம் அந்த மாவட்ட கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றது.

முடிவாக யாரை பொறுப்பாளரா போடனும்ன்னு எழுதிக் கொடுங்க என்று தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கேட்க, அதில் மாதவரம் ஒன்றியச் செயலாளர் சுதர்சனம் பெயரை பலரும் எழுதிக் கொடுத்துள்ளனர். அவரை காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் என அறிவிக்க, கருணாநிதியுடன் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அந்த அறைக்கு, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வர, அவரிடமும் துரைமுருகன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அப்போது, வக்கீல் சண்முகசுந்தரம் உள்ளே வர அவரிடம் பேசிட்டு உங்களை கூப்பிடறேன் என மு.க. ஸ்டாலினையும், துரைமுருகனையும் வெளியே அனுப்பி வைத்தார் கருணாநிதி.

பின்பு, மு.க. ஸ்டாலினையும், துரைமுருகனையும் உள்ளே அழைத்த கருணாநிதி, துரைமுருகனை நோக்கி, உங்கிட்டத்தான்யா கேட்கிறேன். என் குடும்பத்தில குழப்பதை ஏற்படுத்தறீயா, இது உனக்கே நல்லா இருக்கா என்று திடீரென திட்டினாராம்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த துரைமுருகன், என்னை எத்தனையோ முறை சந்தேகப்பட்டீங்க. பலமுறை அசிங்கப்படுத்தி இருக்கறீங்க. என்கிட்ட இருந்த பொதுப் பணித்துறையை கூட பறிச்சீங்க. கட்சிக்கும், உங்களுக்கும் கட்டுப்பட்டு இருந்தேன். குடும்பத்துல நான் குழப்பம் செஞ்சிட்டதா சொல்லிட்டீங்க. இனிமே நான் இங்கே இருக்கறதுல அர்த்தம் இல்லை என்று சொல்லிவிட்டு விருட்டென்று நடையை கட்டினாராம்.

அவரை சமாதானப்படுத்த மு.க. ஸ்டாலின் எவ்வளவோ முயன்றும் முடியவில்லையாம்.

விரைவில் தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு, கட்சியிலிருந்து கெளரவமாக விலகவே நினைக்கிறார் என துரைமுருகன் தரப்பில் கூறப்படுகின்றது.

அப்படி என்ன தான் துரைமுருகன் செய்தார் என அரசியல் வட்டாரத்தில் விசாரித்த போது, 2ஜி ஸ்பெட்ரம் விவகாரத்தில் திகார் ஜெயில் சிறையில் உள்ள கனிமொழியை துரைமுருகன் சந்திக்க சென்ற போது, அவர் கூறியதாக சில தகவல்கள் திமுக தலைவர் கருணாநிதி காதுக்கு சென்றதாம். அதனால் தான் இத்தனை பிரச்சனையாம்.

திமுகவில் அடுத்து என்னென்ன குழப்பமெல்லாம் ஏற்படப் போகிறதோ என்ற கவலையில் கட்சிக்காரர்கள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை: