புதன், 20 ஜூலை, 2011

பாசிச ஜெயாவுக்கு ஒரு செருப்படி!சமச்சீர்கல்வி உயர்நீதிமன்றத் தீர்ப்பு

சமச்சீர் கல்வி - நாடகம்
சமச்சீர் கல்வி – பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்துமாறு அம்மாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஜூலை 22 ஆம் தேதிக்குள் கருணாநிதி அரசால் தயாரிக்கப்பட்டு, அம்மாவின் அரசால் ஸ்டிக்கர் ஒட்டி மேம்படுத்தப்பட்ட சமச்சீர் பாடத்திட்ட நூல்களை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “வலது இடது போலி கம்யூனிஸ்டுகளின் பேராதரவுடன் சட்டமன்றத்தில் அம்மா நிறைவேற்றிய சட்டத்திருத்தமும் செல்லத்தக்கதல்ல என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாகப்பதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
தீர்ப்பின் முழு விவரம் இன்று மாலைதான் கிடைக்கும்.
தமிழகத்தின் காவல் தெய்வம், தங்கத்தாரகை, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மூன்றாவது முறையாக முதல்வராக அமர்ந்து, முதல் முறையாக நடத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், முதன் முதலாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கே முட்டுக்கட்டை போட்டிருக்கிறது உயர்நீதிமன்றம்.
அம்மா உச்சநீதிமன்றம் போகிறார். ஒரு தலைப்பட்சமாக இடைக்காலத் தடை உத்தரவு எதையும் கொடுத்துவிடாமல் தடுக்கும் பொருட்டு, கேவியட் மனு தாக்கல் செய்வதற்காக மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் உச்ச நீதிமன்றம் போகிறது.
உயர்நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் நவநீதி கிருஷ்ணனும், உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் பி.பி.ராவும் முன்வைத்த வாதங்கள் உப்புசப்பற்றவை. அவர்கள் சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு உள்ள இறையாண்மை மிக்க அதிகாரம் குறித்துத்தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்கள். தமிழ் மாணவர்களின் முடியைத் திருத்தி குடுமி வைப்பதற்கோ, அல்லது மொட்டை அடிப்பதற்கோ அம்மாவுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதெனினும், ஒரு கோடி மாணவர்களுக்கும் இந்த ஆண்டே, இந்தக் கணமே மொட்டை அடித்தாக வேண்டும் என்ற சட்டத் திருத்தத்துக்கான நியாயத்தை விளக்கவில்லை.
அம்மா வின் கோபம், அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணனை நோக்கித் திரும்புமே தவிர, பத்மா ஸேஷாத்ரி பள்ளியின் தாளாளர் ஸ்ரீமதி ஒய்.ஜி.பார்த்தஸாரதி, டி.ஏ.வி ஸ்கூல் என்று அறியப்படும் தயானந்தா ஆங்கிலோ வேதிக் ஸ்கூலின் தாளாளர், ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளியின் அம்மையார் ஆகியோரை நோக்கித் திரும்பாது. அம்மா வை மூக்கறுபட வைத்தவர்கள் இவாள்தான். பொதுப்பாடத்திட்டத்தைப் பார்த்து கெக்கெக்கே என்று சிரித்த அக்ரகாரத்து அறிவுஜீவிகளும், ஆங்கிலக் குஞ்சுகளும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தங்களது தரப்பு வாதங்களைப் படித்துப் பார்ப்பார்களேயானால், தங்கள் முகத்தில் தாங்களே காறித்துப்பிக்கொள்ள வேண்டிய நியாயம் குறித்து அவர்கள் புரிந்து கொள்ள இயலும்.
வாதங்களின் அடிப்படையிலும், நியாயத்தின் அடிப்படையிலும்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன என்று கொண்டால், தற்போதைய உயர்நீதி மன்றத் தீர்ப்பினை “நாம் எதிர்பார்த்த்துதான்’ என்று சொல்ல்லாம். நீதிமன்றங்களின் எதார்த்தநிலையைக் கணக்கில் கொண்டு கூறுவதாயின் இந்த தீர்ப்பு அவ்வப்போது நிகழும் அதிசயங்களில் ஒன்று.
இந்த வழக்குக்காக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் இளம் வழக்குரைஞர்கள் பலர் உழைத்திருக்கின்றனர். வழக்குரைஞர் மோகன், புருஷோத்தமன் ஆகியோர் வாதிட்டிருக்கின்றனர். சமச்சீர் பாடத்திட்டக் குழவின் உறுப்பினரான கல்வியாளர் எஸ்.எஸ்.இராஜகோபாலன் அவர்களிடமிருந்து வாக்குமூலம் ஒன்றையும் பெற்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தாக்கல் செய்தது.
பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களின் சார்பில் வழக்குரைஞர் என்.ஜி.ஆர் பிரசாத், திருமதி மனோன்மணி அவர்கள் சார்பில் வழக்குரைஞர் விடுதலை ஆகியோர் இவ்வழக்கில் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கின்றனர்.
பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் மார்க்சிஸ்டு கட்சியின் சார்பாளர் என்ற போதிலும் அக்கட்சியின் நெறியற்ற, சந்தரப்பவாத நடைமுறையை நிராகரித்து இறுதிவரை உறுதியாக நின்று போராடியிருக்கிறார் என்பது பாராட்டத்தக்கது. சமச்சீர் கல்விக்காக இவரும், இந்திய மாணவர் சங்கமும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, மார்க்சிஸ்டு, வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைமைகள் அம்மாவின் குலக்கல்வித் திட்டத்துக்கு “ஓ” போட்டுக் கொண்டிருக்கின்றனர். சொரணையுள்ளவர்கள் வலது இடது கம்யூனிஸ்டு கட்சிகளிலிருந்து தாங்களாகவே வெளியேறிவிடுவார்களா அல்லது அன்புச் சகோதரி அவர்கள், இவர்களையெல்லாம் “நமது எம்ஜிஆர்” நாளேட்டில் கட்டம் கட்டி வெளியேற்றும் காலம் வரை காத்திருப்பார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சமச்சீர் கல்வியை ஒழிப்பதற்கு தமிழகத்தில் ஜெ அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், வல்லுநர் குழுவின் அறிக்கை எரிப்பு, அம்மா வின் கொடும்பாவி எரிப்பு எனப் பல்வேறு வடிவங்களில் போராடியதும் சிறை சென்றதும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்தான். மக்களின் வரவேற்பையும், அதிமுகவினருடனான மோதலையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டு கடந்த இரு மாதங்களில் மேற்கொள்ளப்பட்டன இந்த பிரச்சாரங்கள்.
இப்போராட்டத்துக்கு இணையாக மெட்ரிக் பள்ளிகளின் நன்கொடைக் கொள்ளையை எதிர்த்த போராட்டங்களும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் நடத்தப்படுகின்றன. மெட்ரிக் மோகத்துக்கு ஆட்பட்ட பெற்றோரை, அந்தக் கொள்ளையர்களிடமிருந்து மீட்பதற்காகப் போராடுவதுடன், அவர்களை சமச்சீர் கல்வியை ஆதரித்தும், கல்வி தனியார்மயத்தை எதிர்த்தும் போராட வைத்திருக்கிறோம்.
000000000000000000000000000000000
போன வாரம் பேருந்து ஒன்றில் ஜெ அரசின் சமச்சீர் கல்வி ஒழிப்பு நடவடிக்கையை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் ஒரு ம.க.இ.க தோழர். “டேய்.. அம்மா ஆட்சியைப் பத்தி பேசாதே” என்று வெயிட்டாக வந்த்து ஒரு குரல். அதைக் காதில் வாங்காமல் அந்த தோழர் தனது பேச்சைத் தொடர்ந்தார். “டேய் பேசாதேங்கிறேன்ல” என்று குரலுக்கு ஏற்ற வெயிட்டுடன் எழுந்து நின்றது ஒரு கரை வேட்டி. “நான் என் கருத்தை சொல்றேன். நீங்க உங்க கருத்தை சொல்லுங்க. எது சரின்னு சனங்க முடிவு பண்ணட்டும்” என்று அந்தத் தோழர் மிகவும் நாகரீகமாகப் பதிலளித்தார்.
“டேய்.. நிறுத்துடான்னா…” என்று சொல்லி கையை ஓங்கிய கரை வேட்டியின் கை ஓங்கியபடி நின்றது. “னா..” என்ற குரல் முடியாமல் “ஆ” என்று தொடர்ந்தது. கரை வேட்டியின் கண்ணாடி தெறித்து கீழே விழுந்திருந்தது. “யோவ், இறங்கிப் போய்யா” “தம்பி தொலையிறான் விடுங்க” என்று தலையிட்டார்கள் பயணிகள். கரை வேட்டி தப்பித்த்து.
என்ன இருந்தாலும் தனிப்பெரும்பான்மை பெற்று செயித்த கட்சியல்லவா? கேப் இல்லாம ரெண்டாவது அடிய அடிக்கப்படாது.
www.vinavu.com

கருத்துகள் இல்லை: