சனி, 23 ஜூலை, 2011

முக்கிய முடிவுகள் குறித்து தீவிர விவாதம்!! கருணாநிதி தலைமையில் திமுக செயற்குழு கூட்டம்

கோவை: திமுகவின் அதி முக்கிய செயற்குழு கூட்டம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு கோவை சிங்காநல்லூரில் உள்ள அண்ணா வளாகத்தில் தொடங்கியது.

இந்தக் கூட்டத்துக்கு வருவாரோ மாட்டாரோ என்று பலரும் சந்தேகம் கிளப்பிய மத்திய அமைச்சர் முக அழகிரி தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்றார்.

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில், முன்னாள் துணை முதல்வரும் கட்சியின் பொருளாளருமான முக ஸ்டாலின், 2 ஜி அலைவரிசை விவகாரத்தில் சிக்கி பதவியிழந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், பேராசிரியர் அன்பழகன் உள்பட அனைத்து தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கருணாநிதி - முக அழகிரி பேச்சு

முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து ரயில் மூலம் கோவை வந்துவிட்ட திமுக தலைவர் கருணாநிதி, ஓட்டலில் தங்கியிருந்தார். அவரை முக அழகிரி தனது ஆதரவாளர்கள் மூர்த்தி, மூக்கையா ஆகியோருடன் போய் சந்தித்தார்.

பிற்பகல் வரை கட்சி விவகாரம் குறித்து அவர்கள் கடுமையாக விவாதித்ததாகத் தெரிகிறது.

ஆனால் மாலை 4 மணிக்கு கூட்டம் தொடங்கியபோது, அனைவரும் அரங்குக்கு வந்துவிட்டனர். ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படுமா, அழகிரிக்கு வேறு புதிய கட்சிப் பதவி தரப்படுமா போன்ற கேள்விகளுக்கு இந்த கூட்டத்தில் விடை கிடைத்துவிடும்.

காங்கிரஸ் கூட்டணி, அமைச்சரவையில் பங்கேற்பு குறித்து விவாதம்

மத்திய அரசில் அங்கம் வகிப்பதில் எழுந்துள்ள நெருடல்களைத் தொடர்ந்து, மத்திய அரசில் தொடர்வதா வேண்டாமா என்பது குறித்து திமுக செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இருப்பினும், மத்திய அரசில், அமைச்சரவையில் தொடரும் பட்சத்தில், மத்திய அரசில் இருந்து விலகிய 2 அமைச்சர்களுக்குப் பதிலாக, வேறு 2 பேரை அமைச்சரவைக்குப் பரிந்துரை செய்யலாமா என்பது குறித்தும் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது குறித்தும் கடும் விவாதம் எழுந்தது. இதுகுறித்த இறுதி முடிவு கட்சித் தலைவர் கருணாநிதி வசம் விடப்பட்டது.

மேலும் தமிழக அரசின் வாட் வரி உயர்வு குறித்தும், சமச்சீர் கல்வி விவகாரத்தில் திமுக அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

வழக்கறிஞர் அணி

செயற்குழு கூடும் முன் அதே அரங்கில் கூடிய திமுக சட்டத்துறை பிரிவின் கூட்டத்தில், அதிமுக அரசு திமுகவின் அனைத்துப் பொறுப்பில் உள்ளவர்கள் மீதும் பழிவாங்கும் நோக்கோடு வழக்குகளைப் பதிவு செய்து வருவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு பொய்வழக்குகள் போடும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநில மனித உரிமை ஆணையம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரிடம் முறையீடு செய்வது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை: