வியாழன், 21 ஜூலை, 2011

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் பாதாள அறை கண்டுபிடிப்பு

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாத சுவாமி கோவிலில் பாதாள அறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவைகுண்டம் கைலாசநாத சுவாமி கோவில் உள்ளது.

இங்கு விரைவில் கும்பாபிஷேகம் நடக்கவிருப்பதால் பல கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடந்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக கோவிலின் உள்பிரகாரத்தில் உள்ள பழைய கல் தளத்தை புதிய கல் தளமாக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

கோவிலின் உள் பிரகாரத்தில் உள்ள சுனை சுப்பிரமணிய சுவாமி சன்னதிக்கு செல்லும் படிக்கட்டை இடித்துவிட்டு புதிய படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளது.

அதற்காக பழைய படிகட்டுகளை இடித்தபோது அதற்கு பின்னர் வெற்றிடம் இருப்பதைப் பார்த்தனர். உடனே இது குறித்து அறநிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலைய துறை துணை ஆணையர் வீரராஜன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் வசந்தா ஆகியோர் கோவிலுக்கு வந்தனர்.

அவர்கள் முன்னிலையில் அந்த பகுதியைத் தோண்டியபோது சிறிய அறை ஒன்று இருந்தது தெரிய வந்தது. ஒரு வேளை அது பாதாள அறையாகவோ, சுரங்கப் பாதையாகவோ இருக்கலாம் என்று நினைத்து மேலும் தோண்டினர். ஆனால் 3 அடி வரைத் தோண்டியதும் அங்கிருந்து வேறு எங்கும் அந்த அறை செல்லவில்லை.

தோண்டப்பட்ட இடத்தின் அருகில் படிக்கட்டை அடுத்து இருக்கும் கல்தூணில் படம் ஒன்று செதுக்கப்பட்டிருந்தது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அறை அக்காலத்தில் முக்கியமான அறையாக இருக்கலாம் என்று பக்தர்கள் கருதுகின்றனர்.

இது தவிர கோவிலின் உள்புறத்தில் உள்ள கல் சுவர்கள் மற்றும் தூண்களில் அக்கால எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே தொல்லியல் துறை கோவிலில் ஆய்வு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக கைலாசநாத சுவாமி கோவிலுக்கு அருகில் அரசு குழந்தைகள் காப்பகம் கட்டுவதற்காக பூமியைத் தோண்டியபோது யானையின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: