வியாழன், 21 ஜூலை, 2011

யாழ் தொடர்மாடிக் கட்டடத்துக்கு எதிரான மனு நிராகரிப்பு

யாழ் கஸ்தூரியார் வீதிக்கும் ஸ்ரான்லி வீதிக்கும் இடையே அமைத்த யாழ் மாநகரசபைக்குச் சொந்தமான வண்ணான்குளம் என்று அழைக்கப்படும் காணியில் அமைக்கப்படும் தொடர்மாடிக் கட்டடத்தை தடை செய்யும் வண்ணம் முன்னாள் யாழ் மாநகரசபை ஆணையாளரும் தமிழரசுக் கட்சி உபசெயலாளருமான திரு.சி.வீ.கே.சிவஞானத்தால் யாழ் மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இவ் வழக்கில் யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா யாழ் மாநகரசபை ஆணையாளர் மு.செ.சரவணபவ பிரதம கணக்காளர் ந.யோகேந்திரராஜா வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.சந்திரசிறி ஆகியோரை பிரதிவாதிகளாகக் காட்டி மனுதாரான திரு.சீ.வி.கே.சிவஞானம் இம் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
இவ் வழக்கின் மனுதாரர் தமது மனுவில் மாநகரசபையின் வண்ணான்குளம் என்ற பகுதியை பல மாடிக் கட்டிட தொகுதியை அமைப்பதற்கு தனியார் முதலீட்டாளருடன் ஒப்பந்தம் செய்து வழங்கியமை தவறானது.
மாநகரசபை விதிகளை அனுசரியாது செய்த செயல் அதிகாரம் மீறி எடுக்கப்பட்ட முடிவு என்ற காரணங்கள் காட்டப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானத்தை வலுவற்ற தீர்மானம் என்ற தன்மையில் உறுதிகேள் எழுத்தாணை மூலம் தள்ளுபடி செய்யவும் கட்டப்படவிருக்கும் கட்டித்தொகுதி செயல்பாட்டை தடுத்து நிறுத்தக் கோரியும் நிறுத்தல் கட்டளையையும் கோரி இவ் வழக்கை பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்திருந்தார்.
1ம், 2ம், 3ம் பிரதிவாதிகளான யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராச யாழ் மாநகர ஆணையாளர் திரு.மு.செ.சரவணபவ பிரதம கணக்காளர் திரு.யோகேந்திரராஐா ஆகியோர்களது சார்பில் மனுவுக்கான ஆட்சேபணையாக பின்வரும் ஆட்சேபனைகள் சட்டத்தரணி அ.இராஐரட்ணத்தினால் முன் வைக்கப்பட்டது.

யாழ் நகரசபை கூட்டிணைக்கப்பட்ட குழுமமாக இருந்தும் அதனை பிரதிவாதியாக மனுவில் காட்டாது திவிர்த்தமை 13ம்,16ம் யாப்பு திருத்த ஏற்பாடுகளுக்குப் புறம்பாக தமிழ்மொழியில் மனு தாக்கல் செய்யாது ஆங்கில மொழியில் தாக்கல் செய்தமை 4ம் பிரதிவாதியான ஆளுநர் அவர்கள் வடமாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சரின் அதிகாரத்தைப் பிரயோகிப்பதால் சட்டமா அதிபரை பிரதிவாதியாகக் காட்டத் தவறியமை.

மாநகரசபை விதி 307க்கு அமைய வழக்குக்கான ஒருமாத கால முன்னறிவிப்பு பிரதிவாதிகளுக்கு வழங்காமை போன்ற பூர்வாங்க ஆட்சேபணைகள் மாநகரசபையின் சட்டத்தரணி திரு.அ.இராஜரட்ணம் த்தினால் முன்வைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து 19.07.2011ம் திகதி விவாதத்திற்கு தினம் குறிக்கப்பட்ட நிலையில் மனுதாரர் சார்பிலான சிரேஸ்ட சட்டத்தரணி திரு.எம்.எ.சுமந்திரனும் பதிவு பெற்ற சட்டத்தரணி சபா.ரவீந்திரனும் குறித்த விவாத தினத்தில் தோன்றத் தவறியதால் மனு நிராகரிக்கப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் இவ் வழக்கில் பதிவு பெற்ற சட்டத்தரணி சபா.ரவீந்திரனின் அனுசரணையுடன் ஏற்கனவே எம்.எ.சுமந்திரன் ஆஜராகி வந்தார். 1ம், 2ம், 3ம் பிரதிவாதிகள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணியும் மாநகரசபை சட்ட ஆலோசகருமான திரு.அ.இராஜரட்ணம் ஆஜரானார். 4ம் பிரதிவாதியான வடமாகாண ஆளுநர் சார்பில் பதிவுபெற்ற சட்டத்தரணி திரு.கனகநாமநாதனனின் அனுசரணையுடன் சிரேஸ்ட சட்டத்தரணியும் வடமாகாண சட்ட ஆலோசகருமான திரு.இ.த.விக்னராஜாவும் ஆஜராகினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: