சனி, 23 ஜூலை, 2011

வீரபாண்டி ஆறுமுகம் சரணடைய உத்தரவு

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், வரும் 25ம் தேதி, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரணடைய, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க, ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது. சேலம், அங்கம்மாள் காலனி நில ஆக்கிரமிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட 13 பேர் மீது, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதேபோன்று, சேலத்தில் உள்ள மில் விற்பனை தொடர்பாகவும், வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளிலும், முன்ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வீரபாண்டி ஆறுமுகம் மனு தாக்கல் செய்தார். இம்மனுக்கள் நீதிபதி ராஜசூர்யா முன் நேற்று விசாரணைக்கு வந்தன. வீரபாண்டி ஆறுமுகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், வழக்கறிஞர் என்.ஜோதி, அரசு தரப்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியன் ஆஜராகினர். பிற்பகல் 2.30 மணிக்கு துவங்கிய வாதம், மாலை 6.20 வரை நடந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜசூர்யா, "வரும் 25ம் தேதி காலை, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில், மனுதாரர் சரணடைய வேண்டும். அவரை காவலில் எடுத்து போலீஸ் விசாரிக்கலாம். 27ம் தேதி மாலை, சேலம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுதாரரை ஆஜர்படுத்த வேண்டும். அங்கு பிணையம் செலுத்தி முன்ஜாமின் பெற்றுக் கொள்ளலாம். அதன்பின், தினசரி காலை சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன், மனுதாரர் ஆஜராக வேண்டும்' என, உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: