வெள்ளி, 23 ஜூலை, 2021

இளம் பெண்ணைத் தொடர்ந்த மோடி

May be an image of 2 people and text

.amarx.in A . Marx     : நரேந்திர மோடி தன் மனைவியை விலக்கி வைத்திருப்பது, அல்லது ஒரு இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்க முயல்வது முதலான அவரது தனிப்பட்ட வாழ்வைப் பற்றிப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஒவ்வொருவருக்கும் ஒரு அந்தரங்கம் உண்டு. அதில் மற்றவர்கள் பிரவேசிக்கத் தேவையில்லை என்பது உண்மையே, ஆனால், ஒருவர் இன்னொரு இளம் பெண்னின் அந்தரங்கத்தில், அவரறியாமல் சட்ட விரோதமாகத் தலையிடுவது என்பதை யாரும் கண்டிக்காமலிருக்க இயலாது. அதுவும் அந்த நபர் ஒரு மாநில முதலமைச்சராகவும், பிரதமர் பதவிக்கான வேட்பாளராகவும் இருந்து, தனது அதிகாரத்தின் கீழ் உள்ள அரசு எந்திரத்தை இதற்காகப் பயன்படுத்தியுள்ளதை அறியும்போது ஜனநாயக ஆளுகையில் நம்பிக்கை உடைய யாரும் அதைப் பார்த்துக் கொண்டிருக்க இயலாது. அந்த வகையில் மோடியும், அவருக்கு ஆக மிக நெருக்கமாகவும் அவரது உள்துறை துணை அமைச்சராகவும் இருந்த அமித் ஷாவும் 2009ல் ஒரு இளம் பெண்ணைப் பின் தொடர்ந்து (Stalking) அவர் யார் யாரைச் சந்திக்கிறார், யாருடன் என்ன பேசுகிறார், ஹோட்டலில் யாருடன் தங்கி இருந்தார், விமானத்தில் யாருடன் சென்றார் என்றெல்லாம் அந்தப் பெண் தங்கியிருந்த அறை முதல் ஷாப்பிங் போன மால், ஏறிப்போன விமானம் வரை பின் தொடர்ந்த செய்தி முக்கியமாகிறது.



அதைச் சொல்வதற்கு முன்,

நிகழ்வு 1: ‘ஓபன்’ வார இதழ் பத்திரிக்கையாளர் ஹைமா தேஷ்பாண்டே மோடியின் மனைவியைத் தேடிச் சென்ற கதை:

சுமார் ஆறு மாதங்களுக்கு முன் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ராஜோசோனா கிராமத்திற்குச் சென்றார் ஹைமா. அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்புப் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரியும் ஒரு 57 வயதுப் பெண்ணை நேர்காண்பது அவரது பயணத்தின் நோக்கம். பள்ளி நேரம் போக டாய்லெட், குளியலறை எந்த வசதியுமில்லாத ஒரு பத்தடிக்குப் பத்தடி ‘வீட்டில்’ வசிக்கும் அப் பெண்ணின் பெயர் யசோதாபென் சிமன்லால் மோடி. குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் தள்ளி வைக்கப்பட்ட மனைவி.

அன்று காலை அந்த அரசுப் பள்ளிக்குத் தன்னைக் காண வந்த ஹைமாவைப் பார்த்து எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளப் பொங்கும் ஆர்வத்துடனும், இதழ் விரிந்த புன்னகையுடனும் ஓடிவந்த யசோதாவின் தோற்றத்தை இப்படி விவரிக்கிறார் ஹைமா. “சற்றுப் பொருந்தாத ஜாக்கெட், எளிய பிரின்டட் புடவை, சற்றே வளைந்த முதுகு, சுருக்கங்கள் விழுந்த முகம், வேலை செய்து கரடு தட்டிப்போன கரங்கள், அழுக்கேறியுள்ள வெடிப்புகள் நிறைந்த பாதங்களில் ரப்பர் செருப்புகள்…”

சுமார் 39 ஆண்டுகளுக்கு முன் வெறும் ஏழாம் வகுப்பு படித்திருந்த 18 வயது யசோதாவிற்கும், அப்போது அரசியல் ஏணியில் இவ்வளவு உயரம் ஏறியிராத நரேந்திர மோடிக்கும் அக்னி சாட்சியாகப் பெரியோர்களின் ஆசியுடன் திருமணம் நடந்துள்ளது. எவ்வளவு நாட்கள் சேர்ந்திருந்தார்களோ தெரியவில்லை. அரசியலில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த மோடிக்கு இந்தப் படிக்காத கிராமத்துப் பெண்ணைப் பிடிக்கவில்லைளொரு சில நாட்களிலேயே தந்தை வீட்டுக்கு அனுப்பப்பட்ட யசோதா அதன்பின் விட்ட படிப்பைத் தொடர்ந்து, ஆரம்பப் பள்ளி ஆசிரியைப் பயிற்சியையும் முடித்து, ஒரு சில அரசுப் பள்ளிகளில் பணியாற்றி, 92ம் ஆண்டு முதல் ராஜோசோனா வில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். அநேகமாக சென்ற மாதத்தோடு அவர் ஓய்வும் பெற்றிருப்பார்.

அது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிராமம். மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர். பள்ளியில் பயிலும் முஸ்லிம் சிறார்களின் முன்னேற்றத்தில் அவர் காட்டும் அக்கறையை அனைவரும் பாராட்டுகின்றனர். ஒரு வேளை கணவரின் பாவங்களுக்கான பிராயச்சித்தமாக இருக்குமோ?

யசோதாவின் ஒரே ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் என்றாவது ஒரு நாள் அகமதாபாத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகம் அல்லது வீட்டிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வரும் என்பதுதான். பாவம் யசோதா, மோடியின் தொலை பேசி வேறொரு பெண்ணைப் பின் தொடரக் கட்டளை இட்டுக் கொண்டிருப்பதை அறியார்.

“என் கதையச் சொல்கிறேன்” என ஓடி வந்த யசோதாவை பள்ளித் தலைமை ஆசிரியர் பிரவீண்குமார் வியாசின் இரும்புக் குரல் தடுத்து நிறுத்தியது. “பள்ளி நேரத்தில் பேசக் கூடாது. வகுப்புக்குப் போ” என அவர் ஆணையிட்டார்.

“இடைவேளையின் போது கொஞ்ச நேரம் பேசுறேன்” என யசோதா கெஞ்சியதற்கு வியாஸ் மசியவில்லை. பத்திரிக்கையாளர்கள் யாருடனும் யசோதா பேசக் கூடாது என்பது மேலிடத்து ஆணை.

பரிதாபமாகத் திரும்பிச் சென்ற யசோதா சற்று நேரத்தில் ஓடி வந்தார். “மன்னியுங்கள், என் கணவருக்கு எதிராக நான் எதுவும் சொல்லமாட்டேன். அவர் பெரிய அதிகாரத்தில் உள்ளவர். என் பிழைப்புக்கு ஒரே ஆதாரம் இந்த வேலைதான். இதுக்கும் எதுவும் ஆபத்து வந்துவிடக் கூடாது” எனச் சொல்லித் திரும்பிப் பாராது நடந்தார்.

இடையில் பிரவீண்குமார் யார் யாருடனோ தொலை பேசினார். பின் யசோதாவின் வகுப்பறைக்கு ஓடினார். ஹைமா மீண்டும் யசோதாவைச் சந்தித்துப் பேச முயற்சித்தபோது அவர் வீறிட்டார். நான் உங்களோடு பேச விரும்பவில்லை எனச் சொல்லி நகர்ந்தபோது ஒரு கணம் நின்று அப்புறம் பேசலாம் எனச் சைகை செய்தவாறே அகன்றார்.

சற்று நேரத்தில் ஏகப்பட்ட வாகனங்கள் பள்ளியை நோக்கி வந்தன. வண்டிகளைப் பள்ளி வளாகத்திற்குள் நிறுத்திவிட்டுடு இறங்கியவர்கள் தலைமை ஆசிரியரின் அறையை நோட்டம் விட்டவாறு சிறிது நேரம் நின்று விட்டுக் கலைந்தனர்.

மாலையில் பள்ளி விட்டதுதான் தாமதம். தலையைக் குனிந்தவாறே ஓடி வந்த யசோதா அங்கு நின்றிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறி 20 கி.மீ தூரத்தில் இருந்த தன் சகோதரனின் வீட்டிற்கு ஓடினார்.

சற்று நேரத்தில் ஒரு இளைஞன் அங்கு வந்தான். திகைத்து நின்ற ஹைமாவிடம் தன் பெயர் பிரகாஷ் என்றும் ‘ராம் சேது’ என்கிற அரசு இதழ் ஒன்றின் நிருபர் எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை விரைவாக அந்த கிராமத்தை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துவிட்டுச் சென்றான்.

கிராமத்து மக்கள் சொன்னவற்றில் ஒன்று: யசோதாவின் ஒரே பொழுது போக்கு ஜோசியம் பார்ப்பது. எல்லா ஆரூடக்காரர்களிடமும் அவர் கேட்கும் கேள்வி அகமதாபாத்திலிருந்து அழைப்பு வருமா என்பதுதான். ஜோசியர்கள் “நிச்சயம் வரும்” என்று நம்பிக்கை ஊட்டிக் கொண்டே இருக்கின்றனராம்.

நிகழ்வு 2 : 2009 சாகேப் ஒலிநாடாக்கள் கட்டவிழ்க்கும் அரசதிகாரம் ஒரு இளம் பெண்ணைத் தொடர்ந்த கதை :

இஸ்ரத் ஜெஹான் போலி மோதல் கொலையில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் நால்வரில் ஒருவரான ஜி.எல்.சிங்கால் தற்போது மத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐயிடம் ஒரு 4 ஜி.பி அளவுள்ள பென் டிரைவில் 2009ம் ஆண்டில் தனக்கும் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இடையில் நடந்த இரு நூறுக்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களின் பதிவுகளைச் சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பாகப் பிற அதிகாரிகளிடன் பேசியவற்றையும் சேர்த்தால் மொத்தம் 267 உரையாடல்கள். இதன் விவரங்களைப் புலனாய்வு இதழாளர்களான குலைல் டாட் காமின் அசிஷ் கேதனும் கோப்ராபோஸ்ட் டாட் காமின் ராஜா சவுத்ரியும் இப்போது வெளியிட்டுள்ளனர்.

இந்த ஒலி நாடாக்கள் முழுவதிலும் அமித் ஷா, தனது ‘சாகேப்’பிற்காக ஒரு இளம் பெண்ணைச் சட்ட விரோதமாக எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து, அவர் யாரைச் சந்திக்கிறார், யாருடன் ஓட்டலில் தங்குகிறார், விமானத்தில் யாருடன் பயணம் செய்கிறார் என்பன போன்ற அனைத்து அந்தரங்க விவரங்களையும் காவல்துறை அதிகாரம் மற்றும் நவீன உளவுத் தொழில்நுட்பம் அனைத்தையும் பயன்படுத்திச் சேகரித்து உடனுக்குடன் தன்னிடம் தெரிவிக்குமாறு உயர் போலீஸ் அதிகாரியான சிங்காலை வற்புறுத்துவது பதிவாகியுள்ளது. சட்ட விரோதமான இந்தச் செயல்பாடு எந்தவிதமான அதிகாரபூர்வமான ஆணையும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளது சிறப்புக் காவல்படைக் கண்காணிப்பாளர் சிங்காலும் அவ்வாறே பணிந்து செயல்பட்டுள்ளார், குறிப்பாக அந்தப் பெண்ணுடன் இருக்கும் ஆண்கள் யார் என்பதும், அதிலும் குறிப்பாக ஒட்டலில் தங்கும்போது அப் பெண்ணுடன் எந்த ஆண் இருந்தார் என அறியத் துடிப்பதும் யாருக்காக இந்த உளவும் பின்தொடர்தல்களும் நடத்தப்பட்டதோ அந்த சாகேப் எந்த அளவு பாலியல் வக்கிரம் பிடித்த நபராக இருக்கவேண்டும் என்பதை யூகிக்க வைக்கிறது.

‘சாகேப்’ இதைத் தெரிந்து கொள்ள அவசரம் காட்டுவதைத் தெளிவுபடுத்தும் இந்த உரையாடல்கள், தனக்கு மிகவும் விசுவாசமான அமித்ஷாவையும்கூட அவர் முழுமையாக நம்பி விடாமல் வேறொரு பின்தொடர் அமைப்பின் மூலமாகவும் அந்தப் பெண்ணின் அந்தரங்கத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதையும் வெளிப்படுத்திவிடுகின்றன. ஈந்த ஒலிப் பதிவுகளில் ஒன்றில் ஆகஸ்ட் 9, 2009 அன்று அமித் ஷா மிகுந்த பரபரப்போடு சிங்காலைக் கூப்பிடுகிறார், “இப்பதான் நான் சாகேப்போட பேசினேன். அவங்க இன்னைக்கு இரண்டு தடவை வெளியே போன விஷயம் அவருக்கு யார் மூலமோ தெரிஞ்சிருக்கு. நம்ம ஆளுங்க சரியா வேல செய்யலேன்னு நினைக்கிறேன். இன்னும் அவங்க அங்கதான் இருக்காங்க. அவங்க ஷாப்பிங் போயிருக்காங்க, அவளைப் பாக்க வந்த அந்தப் பயலோடா போயிருக்காங்க” என அமித் ஷா பதறுகிறார்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் அமித் ஷா அந்தப் பெண்னுடன் திரியும் அந்தப் பயலை, “நம்ம வன்சாராவை விட அதிக காலம் ஜெயில்ல இருக்க மாதிரி பண்ணனும்” எனச் சிங்காலிடம் கருவுகிறார். வன்சாரா, இஷ்ரத் ஜெஹான் படுகொலையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் இன்னொரு ஐ.பி.எஸ் அதிகாரி.

குஜராத்தின் உயர் மட்ட அதிகாரத்தில் இருந்த அமித் ஷாவால் ‘சாகேப்’ என மிக்க மரியாதையுடன் அழைக்கப்பட்ட நபர் வேறு யாருமல்ல குஜராத்தில் அமித் ஷாவைக் காட்டிலும் அதிகாரமிக்கவராக இருந்த அந்த ஒரே நபர்தான் என்பதும் உரையாடலினூடாக ஊகிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.

யார் அந்த இளம் பெண்?

அஷிஷ் கேதனும் ராஜா சவுத்ரியும் அந்தப் பெண்ணின் பெயர் தெரிய வேண்டாம் என அவர்களது பதிவில் அவருக்கு ‘மாதுரி’ என்றொரு புனைபெயரைச் சூட்டினர். ஆனால் இன்று அப்பெண்ணின் முழுப் பெயரும் விவரங்களும் வெளிவந்துவிட்டன. அந்தப் பெண்ணின் தந்தையே அவர் பெயர் வெளிவருவதற்குக் காரணமாகிவிட்டார். இணையத் தளங்களில் அவர் பெயர் வெளிப்படையாகப் பதிவாகியுள்ளது. எனினும் நாம் அவரின் கண்ணியம் கருதி இக்கட்டுரை முழுவதும் மாதுரி என்ற பெயரையே பயன்படுத்துவோம். அவர் பெங்களூரைச் சேர்ந்த ஒரு லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட். 2003 – 06 காலகட்டத்தில் கட்ச் மாவட்டத்தில் ஒரு மலைப் பூங்கா அமைக்கப் பொறுப்பேற்றவர். 2005ல் அந்தப் பூங்காவைத் திறந்து வைக்க மோடி வந்தபோது அவருக்கு அறிமுகமாகிறார் மாதுரி. உரையாடல்களில் அந்தப் பெண்ணின் பெயர் உச்சரிக்கப்படுவதால் யார் இவ்வாறு பிந்தொடரப்பட்டார் என்பது உறுதியாகத் தெரிகிறது.

உரையாடல்களில் சிலவற்றை வாசித்தால் எல்லாம் விளங்கும், அதற்கு முன்…

நிகழ்வு 3 : மாதுரி மோடிக்கு நெருக்கமானதும் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பலியானதுமான கதை :

சிங்காலை ஏவி அந்தப் பெண் மட்டும் பின் தொடரப்படவில்லை. இன்னொரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அதே நேரத்தில் பின் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளார். அவர் பின்னர் பவநகர் முனிசிபல் கமிஷனராக இருந்த பிரதீப் ஷர்மா. மாதுரி மோடிக்கு அறிமுகமான காலத்தில் அவர் கட்ச் மாவட்ட ஆட்சியர். பின் அவர் ஊழல் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டு தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட பிரதீப் ஷர்மா கடந்த மே 2011ல் உச்ச நீதிமன்றம் முன் சமர்ப்பித்த மனுவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த மனுவை அவர் சமர்ப்பித்தபோது மாதுரியும் தானும் ஒரே நேரத்தில் பின்தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதும், அது தொடர்பான உரையாடல்கள் பின்னால் வெளிப்படப் போவதும் அவருக்குத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஷர்மா தன் மனுவில் சொல்வது:

“2003 – 06 காலகட்டத்தில் கட்ச் மாவட்ட ஆட்சியர் என்கிற வகையில் நான் (மனுதாரர் என மனுவில் குறிப்பிடப்படுகிறது) பூஜ் நகரத்தை அழகுபடுத்துவது மற்றும் கட்ச் மாவட்டத்தை மேம்படுத்துவது தொடர்பாகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வந்தேன். 2005ல் மலைத் தோட்டம் ஒன்றை அமைப்பதற்காக ஒரு இடத்தைத் தேர்வு செய்து அதற்கென கலை விற்பனராக பெங்களூரைச் சேர்ந்த மாதுரி (மனுவில் உள்ள பெயர் மாற்றப்பட்டுள்ளது. எந்தப் பெண் பின் தொடரப்பட்டாரோ அந்தப் பெண்னின் பெயர்தான் அது. எனினும் நாம் புனை பெயரையே பயன்படுத்துவோம்) தேர்வு செய்யப்பட்டார். பூங்கா அமைக்கும் பணி முடிந்து 2005ல் அதைத் திறந்து வைப்பதற்காக ஶ்ரீ நரேந்திரமோடி அங்கு வந்தபோது மாதுரி அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதற்குப்பின் மாதுரி தான் பெங்களூர் திரும்ப இருப்பதைக் கூறியதோடு தனக்கும் முதலமைச்சருக்கும் இடையில் உள்ள பரஸ்பர தொடர்புகளையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். ஒரு முறை அரசு விழா ஒன்றில் மாதுரியும் ஶ்ரீ மோடியும் மிக நெருக்கமாக இருந்ததைப் பார்க்கவும் அவர்கள் உரையாடலைக் கேட்கவும் நேர்ந்தபோது அவர்களுக்கிடையே இருந்த நெருக்கமான உறவு குறித்த உண்மை எனக்கு உறுதியாயிற்று. தொடர்ந்து மாதுரி என்னிடம், தான் ஶ்ரீ மோடியச் சந்திக்கச் செல்லும்போது அவர் எவ்வாறு, மூத்த அதிகாரிகளுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டங்களைக் கூட இடையில் நிறுத்திவிட்டு வெளிவந்துத் தன்னுடன் அந்தரங்கமாகப் பேசுவார் என்பதையும் கூறினார்.”

தான் பழிவாங்கப்பட்டதற்குக் காரணம் மோடிக்கும் மாதுரிக்கும் இருந்த அந்தரங்க உறவைத் தான் அறிய நேர்ந்ததே எனக் கூறும் பிரதீப் ஷர்மா, அவரறிந்த அந்த அந்தரங்கங்கள் சிலவற்றையும் தொடர்ந்து மனுவில் பதிவு செய்கிறார். மார்ச் 2006 இரண்டாம் வாரத்தில் ஒரு நாள் மாலை 5 மணி அளவில் தான் அகமதாபாத் வந்து இறங்கியுள்ளதாகவும் பூஜுக்கு வர இருப்பதாகவும் தெரிவித்த மாதுரி, அடுத்த இரண்டு நாள்வரை தன்னுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதிருந்ததாகக் குறிப்பிடுகிறார் பிரதீப். பின் தொடர்பு கொண்டபோது கடந்த இரு நாட்களும் தான் ஶ்ரீ மோடியுடன் இருந்ததாகவும், அது ஹோலிப் பண்டிகை நாளானதால் பலரும் அவரைப் பார்க்க வந்தனர் எனவும், அவ்வப்போது வெளியே சென்று அவர்களைச் சந்த்தித்து மோடி திரும்பி வந்ததாகவும் மாதுரி தன்னிடம் கூறியதாகவும் பிரதீப் பதிவு செய்கிறார். நடுவில் சற்று உடல் நலமில்லாமல் போன மாதுரி மருத்துவர் யாரையாவது அழைக்க இயலுமா எனக் கேட்டபோது நாம் இருக்கும் நிலையில் அது சாத்தியமில்லை என மோடி மறுத்ததாகவும் தெரிகிறது.

9909923400 என்கிற எண்ணிலிருந்து மோடி மாதுரிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்று குறித்தும் பிரதீப் தன் மனுவில் கூறியுள்ளார். தொடர்ந்து பிரதீப் சொல்வதை சுருக்கம் கருதி மட்டுமின்றி அப் பெண்ணின் கண்ணியம் கருதியும் தவிர்க்கிறேன்.

பின்னிகழ்வுகள் :

1.விஷயம் இப்படி அம்பலப்பட்டவுடன் ‘மாதுரி’யின் தந்தை பிரான்லால் சோனி அனுப்பிய கடிதம் ஒன்று பா.ஜ.க தரப்பில் சுற்றுக்கு விடப்பட்டது. அது எந்த வகையிலும் மோடியைக் காப்பாற்றவில்லை. மாறாக அமித் ஷா தன் உரையாடல்களில் குறிப்பிடும் ‘சாகேப்’ மோடிதான் என்பதை அது உறுதி செய்தது. பிரான்லாலின் கடித வாசகங்களில் சில:

“அவள் (மாதுரி) அடிக்கடி அகால நேரங்களில் பயணம் செய்ய நேரிட்டது. ஒரு தந்தை என்கிற முறையில் நான் அதற்காகக் கவலைப் பட்டேன். இதனால் எங்கள் குடும்பத்துடன் நீண்ட நாள் உறவில் உள்ள குஜராத் முதல்வர் ஶ்ரீ நரேந்திர மோடியிடம் அவளைக் கவனித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டேன்.”

அதாவது தாங்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே மோடி மாதுரியின் ஒவ்வொரு நடமாட்டத்தையும் இவ்வாறு கண்காணித்தாராம்.

ஆனால் உரையாடல்களைக் கவனித்தால் வெறும் பாதுகாப்புக் கருதி மட்டும் மாதுரி கண்காணிக்கப் படவில்லை என்பதோடு, அவர் அறியாமலேயே அவர் கண்காணிக்கப்பட்டுள்ளார் என்பதும் உறுதிப்படுகிறது.

தவிரவும், இதை உண்மை என்றே கருதினாலும் கூட, தனது குடும்ப நண்பரின் வேண்டுகோளுக்காக ஒரு முதலமைச்சர் எவ்வாறு அரசு எந்திரத்தை இவ்வாறு பயன்படுத்த இயலும்?

2. பிரான்லால் இரண்டு நாள் முன்னதாக (நவம்பர் 19) இன்னொரு கடிதத்தை வெளியிட்டுள்ளார், அதில் தனது மகள் அறிந்தே அவர் கண்காணிக்கப்பட்டார் என்றுள்ளது. இது முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்கும் வேலை என்பதைப் பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் உறுதி செய்கின்றன.

3. இந்தியாவின் மிக முக்கியமான பெண்கள் இயக்கங்களும் முற்போக்கு இயக்கங்களும் இணந்து நவம்பர் 18 அன்று டெல்லியில் இது குறித்த மத்திய புலனாய்வுத் துறை விசாரணை வேண்டுமென ஆர்பாட்டம் நடத்தின.

ஆக, பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பிலிருந்தே அந்தப் பெண்ணின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது, அவர் பின் தொடரப்பட்டதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. நரேந்திர மோடிதான் இதற்கான ஆணையை இட்டார் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. பா.ஜ.க இக்கடிதங்களை வெளியிட்டதிலிருந்து அக்கட்சியும் இவற்றை ஏற்றுக் கொள்வது தெரிகிறது.

காவற் படைக் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.சிங்கால் ஐ.பி.எஸ் மற்றும் மூத்த அதிகாரி பிரதீப் ஷர்மா ஐ.ஏ.எஸ் ஆகியோரின் வாக்கு மூலங்கள் மற்றும் சிங்கால் புலனாய்வுத்துறையின் முன் சமர்ப்பித்துள்ள ஒலிப்பதிவுகள் ஆகியன அப்பெண்ணுக்கும் ‘சாகேப்’புக்குமான உறவு ஒப்புதல் அடிப்படையில் இருந்தபோதிலும் அந்தப் பெண்ணுக்கு வேறு ஆடவருடன் தொடர்புள்ளதா என அறிய அவர் அறியாமலேயே அரசு எந்திரத்தின் மூலம் அவர் கண்காணிக்கப்பட்டதையும், பின்தொடரப்படந்தையும் உறுதி செய்கின்றன.

ஒரு ஜனநாயக அரசில் தனிநபரே ஆக உயர்ந்த அதிகாரம் படைத்தவராகக் கருதப்படுகிறார், அரசின் அதிகாரம் அவரிடமிருந்தே பெறப்படுகிறது. எக்காரணம் கொண்டும் ஒரு அரசுக்குத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரது அந்தரங்கத்தைப் பின்தொடர உரிமை இல்லை. பெண்களை இவ்வாறு பின்தொடர்வது (Stalking) டெல்லி பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு கடுங் குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பின்தொடர்வு பற்றிய ஒரு நடுநிலையான புலன் விசாரணை இன்று உடனடித் தேவையாகிறது

இணைப்பு : பதிவு செய்யப்பட்டுள்ள 267 உரையாடல்களில் ஓரிரண்டு மட்டும். (ஆங்கிலத்தில் உள்ள உரையாடல் தமிழுக்குத் தக்கவாறு பொருள் மாறாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது)

1.அமித் ஷா : சிங்கால், நான் அமித் பேசுறேன்.. கவனமா வாட்ச் பண்ணுங்க.

ஜி.எஸ்.சிங்கால்: சார், ஹோடல் பார்கிங் ஏரியாவில் ஒருத்தன், வெளியில் ஒருத்தன்,, அப்புறம் இன்னொருத்தனையும் வாட்ச் பண்ண போட்டிருக்கேன்..

அமித்: இன்னும் உள்ளதான் இருக்காங்களா.. ?

சிங்கால் : இது வரைக்கும் வெளியில வரல.. அதுனால உள்ளதான் இருக்கணும்…

அமித் : இன்னிக்கு லன்ச்சுக்கு அவங்க ஒரு ஓட்டலுக்குப் போறாங்க…

சிங்கால் : சரி.. சரி..

அமித் : அப்படீன்னு சாகேப்புக்கு ஒரு போன் வந்திருக்கு…

சிங்கால் : ஓகே.. ஒகே…

அமித் : அவ ஒருத்தனோட போவா கவனிங்க..

சிங்கால் : சார்..

அமித் : அவளைப் பார்க்க வருவானே அவன்தான்..

சிங்கால் : ஓகே.. ஒகே…

அமித் : விஷயம் என்னன்னா சாகேபுக்கு எல்லாத் தகவலும் வந்துட்டு இருக்கு. நாம எதாவது கவனிக்க விட்டுட்டோம்னா தெரிஞ்சு போயிடும்.

சிங்கால் :ஆமா.. ஆமா..

அமித் : அதனால நீ தயவு செய்து…

சிங்கால் : சார், நானே நேர்ல போயி எல்லா ஏற்பாட்டையும் கவனிச்சுகிறேன்..

அமித் : ஆமா, நீயே அங்கே ஒருதடவை போய் பாக்கிறதுதான் நல்லது..

சிங்கால்: சார், நான் இங்க பக்கத்துலதான் இருக்கேன். பத்து நிமிசத்துல அங்கே போய்டுவேன்.

2. அமித் : சிங்கால், ஏதாவது புதுத் தகவல்…?

சிங்கால் : சார், அவ ஓட்டல விட்டு வெளியே வந்துட்டா. பிரகலாத் நகரை நோக்கிப் போயிட்டு இருக்கா..

அமித் : பவநகர் எஸ்.பி யோட உனக்கு எப்படி உறவு..

சிங்கால் : ஒ! நல்ல உறவுதான் சார்..

அமித் : கமிஷனர் அவ வீட்டில இருக்கானா இல்ல இங்க வந்துட்டு இருக்கானான்னு செக் பண்ணு.

சிங்கால் : ஒகே சார்..

அமித் : முனிசிபல் கமிஷனரை (பிரதீப் ஷர்மாவை) சொன்னேன்..

அமித் : ஓகே சார்..

3. சிங்கால் ; சார், நமஸ்தே சார்…

அமித்: ராத்திரி என்ன நடந்துது?

சிங்கால்: சார், அவ நேத்து ராத்திரி 12.30., ஒரு மணி வரைக்கும் அவனோட கார்லதான் இருந்தா. அவ ஓட்டலுக்கு வர்ரப்ப ஒரு மணி. பவநகர்ல இருந்து தகவல் வர ராத்திரி ரொம்ப லேட் ஆயிட்டு. உங்களைத் தொல்லை பண்ண விரும்பல. அவர் பவநகர்லதான் இருந்தார்.

அமித் : அவன் மேலையும் ஒரு கண்ணை வச்சுக்குங்க..

சிங்கால் : எட்டு மணியில இருந்து என் ஆட்கள் அந்த வேலையிலதான் இருக்காங்க. நம்ம தெரிஞ்சுக்கிறணும்கிறதுக்காக லொகேஷன சொல்லச் சொல்லி இருக்கேன்.

அமித் : அவ ஓட்டல் லோகல் நம்பரை எடு..

சிங்கால்: சரி சார். இன்னிக்கு 11 மணி வரைக்கும்தான் அவ ஓட்டல் ரிசர்வேஷன் இருக்கு.. 11 மணி..

அமித் : புரியுது.. புரியுது..

4. அமித் : சிங்கால்..

சிங்கால் : எஸ் சார்..

அமித் : மும்பை ஃப்ளைட்ல யாரையாவது அனுப்ப முடியுமா?

சிங்கால் : ம்ம்ம்..

அமித்: ஏதோ நடக்குதுன்னு சாகேபுக்கு உறுதியா. தகவல் வந்திருக்கு. நாம யாராவது ஒருத்தரை அந்த ஃப்ளைட்ல அனுப்புறது நல்லது..

சிங்கால் : சரி, சார்.. நல்லது சார்.. நான் யாரையாவது அனுப்பிடறேன் சார்..

அமித் : கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அவனை (அதே) ஃப்ளைட்ல ஏத்தி விடு. அப்புறம் அவ ஏர்போர்ட்ல (பப்ளிக் பூத்ல இருந்து) எஸ்.டி.டி., பி..சி.ஒ போன் கால் எதுவும் பேசுனா அந்த நம்பரைக் கண்டுபிடி..

சிங்கால் : சரி சார்.. ரைட் சார்…

இப்போது சொல்லுங்கள். இதெல்லாம் அந்தப் பெண்ணின் பாதுகாப்பிற்காக, அவள் சம்மதத்துடன், அவள் அறிந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளா?

ஒரே நேரத்தில் அந்தப் பெண் மட்டுமின்றி பவநகர் முனிசிபல் கமிஷனர் பிரதீப் ஷர்மாவையும் உளவு பார்த்ததையும், அவர்கள் இருவருக்கும் இடையிலும், அதேபோல அந்தப் பெண்ணுக்கும் இன்னொரு இளைஞனுக்கும் இடையில் இருந்த அல்லது இருந்ததாக சாகேப்பினால் சந்தேகிக்கப்பட்டுந்தான் இந்தப் பின்தொடரல்கள் நடைபெற்றுள்ளமைக்கு வேறென்ன சான்றுகள் வேண்டும்?

அமித் ஷா மூலமாக மட்டுமின்றி தானும் தனியே அந்தப் பெண்ணைக் கண்காணித்த சாகேபின் வக்கிரத்தை என்ன சொல்வது?

குஜராத் போலீசைப் பற்றியும் மோடியின் நிர்வாகத் திறமை பற்றியும் என்ன சொல்வது.. சீச் சீ, நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்றா?

கருத்துகள் இல்லை: