ஞாயிறு, 18 ஜூலை, 2021

34 ஆவின் உயரதிகாரிகள் கூண்டோடு மாற்றம்.. சாட்டையை சுழற்றிய அமைச்சர் நாசர்.. பின்னணி என்ன பரபர தகவல்

 Vigneshkumar - Oneindia Tamil  :  சென்னை: ஆவின் நிறுவனத்தின் பணிநியமனம் முறைகேடு ஊழல் புகார் ஆகியவை காரணமாக 34 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்கு முன்பு இருந்தே ஆவினில் பல்வேறு முறைகேடு நடைபெற்று வருவதாக திமுக குற்றஞ்சாட்டி வந்தது.
இந்நிலையில், தற்போது பணிநியமனம் முறைகேடு, ஊழல் புகார் ஆகியவை காரணமாக 34 ஆவின் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு நிறுவனங்களில் மிகவும் முக்கியமானது
ஆவின். தமிழ்நாட்டில் பால் விற்பனையில் முக்கியமான இடத்தை ஆவின் பிடித்துள்ளது. ஆண்டுதோறும் ஆவின் நிறுவனத்தின் வருவாய் உயர்ந்தாலும்கூட, பல ஆண்டுகளாக ஆவின் நிறுவனம் நஷ்டத்திலேயே இயங்கி வந்தது. இதற்கு ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகளாகக் காரணம் எனத் தேர்தலுக்கு முன்பு இருந்தே திமுக குற்றஞ்சாட்டி வந்தது.



சட்டசபைத் தேர்தலில் வென்று திமுக ஆட்சி அமைத்த பிறகு சா மு நாசர் பால்வளத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்ற சமயத்தில் கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்தது. அப்போது அனைத்து அமைச்சர்களுக்கும் கொரோனா கட்டுப்படுத்தும் பணிகளில் ஒதுக்கப்பட்டிருந்ததால், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. அதிமுக அமைச்சருக்கு

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் நாசர், தீபாவளி நேரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு 1.5 டன் அளவுக்கு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், அப்போது அவர் பணிநியமனங்களிலும் ஊழல் நடந்துள்ளதாகவும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பூர், நாமக்கல், திருச்சி , விருதுநகர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் ஆவின் கூட்டுறவு மையங்களில் பல பணி நியமனங்களில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாடுகள் எழுந்தன.

இதையடுத்து மாநிலம் முழுவதும் 236 பணி நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இது மட்டுமின்றி மற்ற பணியிடங்களை நிரப்பும் பணிகளையும் தற்காலிமாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆவின் நிறுவனத்தின் பணி நியமனம் முறைகேடு ஊழல் புகார் ஆகியவை காரணமாக 34 உயர் அதிகாரிகள் குண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏன் இந்த நடவடிக்கை ஏன் இந்த நடவடிக்கை ஆவின் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் பால் விநியோகத்தில் கமிஷன் வாங்கிக் கொண்டு செயல்பட்ட குற்றச்சாட்டில் அந்நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பொது மேலாளராக இருந்தவர் விழுப்புர சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல பணிநியமனங்களில் முறைகேட்டிற்கு நடந்தாக புகார் எழுந்துள்ள மாவட்டங்களில் பணிபுரிந்த மேலாளர்கள் மற்றும் துணை மேலாளர்கள் உள்ளிட்ட ஆவின் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குற்றச்சாடுகள் மீது விசாரணை நடத்தப்பட்டு விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த பால் முகவர்கள் சங்கம் அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது. மேலும் தவறு செய்தவர்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த ஏதுவாக இந்த விசாரணை விரைவில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: