திங்கள், 8 ஏப்ரல், 2019

அய்யாக்கண்ணு - அமித் ஷா சந்திப்பு!

மின்னம்பலாம் : விவசாயிகளை ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு எதிராகப் பல்வேறுவிதமான
போராட்டங்களை நடத்திய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, நேற்று (ஏப்ரல் 7) இரவு பாஜக தலைவர் அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
அய்யாக்கண்ணு - அமித் ஷா சந்திப்பு!விவசாயக் கடன் தள்ளுபடி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளை இணைத்து டெல்லியில் அய்யாக்கண்ணு 2017ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு விதமான போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறார். அரை நிர்வாண போராட்டம், மொட்டையடிக்கும் போராட்டம், எலிக்கறி உண்ணும் போராட்டம் எனப் பலவிதமான போராட்டங்களைப் பல நாட்கள் டெல்லியில் நடத்தினார். இந்தப் போராட்டங்கள் இந்தியாவையே உலுக்கின. பிரதமர் மோடியை நேரில் சந்திக்க இவர்கள் பலமுறை அனுமதி கோரியும், ஒருமுறைகூட சந்திப்பு நடக்கவில்லை.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள இந்தச் சூழலில் அமித் ஷா - அய்யாக்கண்ணு சந்திப்பு டெல்லியில் நேற்று இரவு நடந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த 111 விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக அய்யாக்கண்ணு கடந்த மாதத்தில் அறிவித்திருந்த நிலையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது கவனம்பெற்றுள்ளது.
பாஜகவுக்கான தமிழகத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் தமிழக அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோரும் இந்தச் சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர். பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்னும் வெளியாகாத நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடந்த வாரத்திலேயே தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் இடம்பெற்றுள்ள குறைந்தபட்ச ஊதிய உறுதித் திட்டம் போன்ற சில அம்சங்கள் கவனம் பெற்றுள்ளன.
இதனால் பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் அறிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. விவசாயிகளின் நலன்களுக்கான முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களைத் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வதற்காகவே அய்யாக்கண்ணுவுடனான இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, “பாஜக தலைவர் அமித் ஷாவுடனான சந்திப்பு மன நிறைவு அளிக்கிறது. விவசாயிகள் நலன் குறித்த முக்கியமான திட்டங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று அவர் உறுதியளித்தார். அதனால் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிடப் போவதில்லை” என்றார்.

கருத்துகள் இல்லை: