ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

கேரளா பழங்குடி பெண் குடிமை பணி தேர்வில் வெற்றி ...


தினபூமி : திருவனந்தபுரம், யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற கேரள பழங்குடியின பெண்ணுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தொழுவண்ணா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கமலம். ஆதிவாசிகளான இவர்களது மகள் ஸ்ரீதன்யா. ஓலை கூரை வீட்டில் வசித்த போதும் ஸ்ரீதன்யாவுக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத டெல்லி செல்ல பணம் இல்லை. ஸ்ரீதன்யா பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.
தேர்வு எழுதி விட்டு வந்த பின்னர் கூலி வேலை செய்து வந்தார் ஸ்ரீதன்யா, சமீபத்தில் மின்சாரம் தாக்கி தன்யாஸ்ரீ தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது இடது கை எலும்பு முறிந்தது. இந்தநிலையில் சிவில் சர்வீல் தேர்வு முடிவு வெளியானது. இதில் ஸ்ரீதன்யா, 410 ரேங்க் பெற்று வெற்றி பெற்றார்.
வயநாடு பகுதியில் ஆதிவாசி பெண் கலெக்டராவது இதுவே முதல்முறை. இதனால் ஆதிவாசி மக்கள் ஸ்ரீதன்யா வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, ஸ்ரீதன்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஸ்ரீதன்யாவின் கடின உழைப்பும் அவரது அர்ப்பணிப்பும் கனவை நினைவாக்க உதவியுள்ளது. தான் தேர்வு செய்யும் பணியில் மிகப்பெரும் வெற்றியை பெற ஸ்ரீதன்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராய் விஜயனும் ஸ்ரீதன்யாவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை: