சனி, 13 ஏப்ரல், 2019

விக்கிலீக்ஸ் ஜூலியன் ஆசாஞ்சே .. அரசுகளினதும் பெரும் கம்பனிகளினதும் ரகசியங்களை அம்பலமாக்கியவரின் எதிர்காலம்?


தினகரன் : ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்ஜ். இவர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கம்ப்யூட்டர்களை ஹேக் செய்வதில் கைதேர்ந்தவர். பல்வேறு நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து தகவல்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டிருந்த இவர் மீது ஆஸ்திரேலியாவில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உடனே, குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு அபராதம் கட்டி வழக்கில் இருந்து வெளியே வந்தார்
2006ம் ஆண்டு விக்கி லீக்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கி அதன் நிறுவனராக செயல்பட்ட அசாஞ்ஜ், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் பென்டகன் இணையதளத்தை ஹேக் செய்து ரகசியங்களை திருடி வெளியிட்டார். இது அமெரிக்காவுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. எப்படியாவது இவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று முயற்சியை தொடர்ந்தது.


பல நாட்டு தலைவர்களின் அந்தரங்க விஷயங்களை திருடியும் விக்கி லீக்ஸ் இணையதளத்தில் கசியவிட்ட அசாஞ்ஜ்க்கு எதிராக உலக நாடுகள் கோபமடைந்தன. இந்நிலையில் சுவீடனில் இரு பெண்கள் இவர் மீது பாலியல் புகார் அளித்தனர்.
இதன் ேபரில் சுவீடன் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய உத்தரவிட்டது. அடுத்ததாக ஜாமீன் விதிமுறைகளை மீறியதாக லண்டன் நீதிமன்றமும் இவரை கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பித்தது. இனி தப்பிக்க முடியாது என்று நினைத்த அசாஞ்ஜ் லண்டனில் உள்ள ஈக்குவடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். தூதரகத்தில் அகதியாக ஏழு ஆண்டுகள் இருந்த ஜூலியனுக்கு அளித்து வந்த ஆதரவை ஈக்குவடார் அரசு திடீரென திரும்ப பெற்றுக்கொண்டது. இதை தொடர்ந்து ஈக்குவடார் தூதரகத்தில் நுழைந்த லண்டன் போலீசார் அசாஞ்ஜை கைது செய்தனர். எதற்காக ஈக்குவடார் அரசு இவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது என்று விசாரித்ததில்,  ஈக்குவடார் அதிபர் லெனின் மோரேனோவின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை விக்கிலீக்ஸில் ஜூலியன் கசியவிட்டுள்ளார். அதுசரி, ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா?

அசாஞ்ஜ்சுக்கு அளித்த ஆதரவை ஈக்குவடார் அரசு வாபஸ் பெற்றாலும் மரண தண்டனை விதிக்கும் நாடுகளுக்கு அவரை கடத்தக்கூடாது என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இருந்தாலும் அமெரிக்காவிடம் ஜூலியனை ஒப்படைக்க பிரிட்டன் போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கிடையில், அசாஞ்ஜ்சுக்கு அளித்த ஆதரவை ஈக்குவடார் சட்டவிரோதமாக விலக்கி கொண்டுள்ளது. இது சர்வதேச விதிமுறைகளுக்கு முரணானது என்று விக்கிலீக்ஸ் அசராமல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அசாஞ்ஜ் விஷயத்தில் ஈக்குவடார் அதிபர் ரொம்ப சாப்ட்டாக டீல் செய்வதை பார்த்தால், ஏதோ எக்கச்சக்கமான ரகசியத்தை ஜூலியன் திருடிவைத்திருப்பார் என்றே கருத தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை: