வியாழன், 11 ஏப்ரல், 2019

ராகுல்காந்தி தலைக்கு குறிவைக்கப்பட்டது!’ - உள்துறை அமைச்சகத்தில் ஆதாரத்துடன் காங்கிரஸ் புகார்


காங்கிரஸ்ராகுல்கலிலுல்லா.ச -விகடன் :
ராகுல்காந்தி அமேதியில் மனுத்தாக்கல் செய்தபோது, அவரை லேசர் குண்டு மூலம் கொல்ல முயற்சிகள் நடப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் கடந்த 4-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதேபோல உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதியில் நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக அவர், 3 கிலோ மீட்டர் தூரம் திறந்த வாகனத்திலே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரின் சகோதரி பிரியங்கா, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, அவர்களின் மகன் ரேகன், மகள் மிரயா ஆகியோரும் கலந்துகொண்டனர். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ராகுல்காந்தியைக் கொல்ல முயற்சி நடந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் ஒன்றையும் காங்கிரஸ் அனுப்பியுள்ளது.
; அதில், ``ராகுல்காந்திக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அமேதியில் ராகுல் வேட்புமனு தாக்கல்செய்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தபோது, லேசர் குண்டு மூலம் அவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். லேசர் ஒளி மூலம் 7 முறை ராகுலின் தலைக்கு குறி வைக்கப்பட்டது. குறுகிய நேர வெளியில், 7 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர் தலைக்கு குறிவைக்கப்பட்டது. நீண்ட தூரத்திலிருந்து கொண்டு ரகசியமாக சுடும் துப்பாக்கி மூலம் லேசர் குண்டைப் பயன்படுத்தி ராகுல்காந்தியை கொல்ல சதி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே, அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராகுல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, லேசர் கதிர் மூலம் அவரது நெற்றியில் குறிவைக்கப்பட்டது தொடர்பான வீடியோ ஆதாரங்களை உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், இதுபோன்ற எந்தக் கடிதமும் காங்கிரஸிடமிருந்து பெறப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: