சனி, 23 பிப்ரவரி, 2019

காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசு: ஆய்வு முடிவு!

காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசு: ஆய்வு முடிவு!மின்னம்பலம் : வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமைய அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வு நிறுவனமான ஃபிட்ச் கணித்துள்ளது.
இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மட்டுமின்றி மாநிலக் கட்சிகளும் இம்முறை கூட்டணியமைத்து போட்டியிட தயாராகி வருகின்றன. தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடாகி வரும் நிலையும் தேர்தல் கருத்துக்கணிப்புகளும் வெளியாகிப் பரபரப்பைக் கூட்டி வருகின்றன.

இந்நிலையில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இரு தேசிய கட்சிகளும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறாது என்று ஃபிட்ச் சொல்யூஷன்ஸ் மேக்ரோ ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் பெறாது.
இதனால் இரு கட்சிகளும் பிராந்திய கட்சிகளிடம் ஆதரவைப் பெற முயற்சிக்கும். மாநில ரீதியாகப் பலமிக்க பல கட்சிகளுடன் பாஜக பெருமளவில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறது. இதனால் தேர்தலுக்குப் பின்னர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளது. அதேசமயத்தில், ‘பாஜக அரசு அறிவித்திருக்கிற நிதித் திட்டத்தால் விவசாயிகளிடம் சிறிய தாக்கத்தைப் பெறக்கூடும். புல்வாமா தாக்குதல் சம்பவம் தேர்தலில் தேசப்பற்றைத் தூண்டுவதற்கான காரணியாகப் பயன்படும்’ என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 336 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. டிசம்பர் மாதம் நடந்த 3 மாநில தேர்தல்களில் தோல்வியடையந்த பிறகு பாஜகவின் ஆதரவு சரிந்து வருவதாக மேலும் சில கருத்துக்கணிப்புகளும் கூறியுள்ளன. குறிப்பாக இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இம்முறை 237 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என்று கூறியுள்ளது. அதேசமயத்தில் டைம்ஸ் குழுமம் ஆன்லைனில் நடத்திய சர்வேயில் மீண்டும் மோடி பிரதமராக 83 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: