செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

திருத்தணி உஷா கொலை ஐவர் கைது .. மாணவி கொலையில் மனம் மாறி உண்மையை கக்கிய ..

மாணவி கொலை வழக்கில் கைதானவர்கள் vikatan.com -s.magesh" : திருத்தணியில் 5 மனித அரக்கன்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி வழக்கு துப்பு துலங்கியதன் பின்னணியில் சிலர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 கொலை செய்யப்பட்டமாணவியின் சீருடைதிருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு அருகே உள்ள புதுவெங்கடாபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, எல்லாம்மாள் தம்பதியின் மகள் உஷா. இவர் அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார். 7.9.2018 அன்று பள்ளிக்குச் சென்ற உஷா, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் சுப்பிரமணி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், 11.2.2019 அன்று கீச்சளம் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தின் அருகிலிருக்கும் ஓடையில் எலும்புக்கூடாக உஷா கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கில் கல்லூரி மாணவர் சங்கரய்யா, மாந்தோப்பு வீட்டின் உரிமையாளர் நாதமுனி மற்றும் இவர்களின் கூட்டாளிகள் ஜெகதீஷ்பாபு, கிருஷ்ணமூர்த்தி, மோகன் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோர்
இந்த வழக்கை துப்பு துலக்கியது எப்படி என போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``மாணவி உஷா மாயமானதும் அவரின் தந்தை சுப்பிரமணி, கல்லூரி மாணவர் சங்கரய்யா மீது சந்தேகம் இருப்பதாக எங்களிடம் தெரிவித்தார். உடனடியாக சங்கரய்யாவிடம் விசாரித்தோம். அப்போது அவர் மாணவி உஷாவைப் பார்க்கவில்லை என்று சத்தியம் செய்தார். இதையடுத்து சங்கரய்யாவுக்கு ஆதரவாக சிலர் வந்தனர். அப்போது சங்கரய்யா மீது நடவடிக்கை எடுக்க எங்களிடம் எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை.

நாங்களும் மாணவியை 5 மாதங்களுக்கு மேலாகத் தேடினோம். பெங்களூருக்குச் சென்றோம். அதோடு மாணவியின் தோழிகள், ஸ்கூல், அவர் வழக்கமாகச் செல்லும் இடங்கள் எனப் பல கோணங்களில் விசாரித்தோம். ஆனால், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் மாணவியின் எலும்புக்கூடு கீச்சளம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அந்த எலும்புக்கூடு கிடைத்தபிறகு டி.எஸ்.பி. சேகர் தலைமையிலான போலீஸ் டீம் விசாரணையில் களமிறங்கியது.
ஏற்கெனவே சங்கரய்யாவின் மீது எங்களுக்குச் சந்தேகம் இருந்ததால் அவரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தோம். அப்போது அவர், மாணவி மாயமான நாளிலிருந்து குறிப்பிட்ட 4 பேரிடம் தொடர்ந்து பேசிவரும் தகவல் தெரியவந்தது. இதனால் சங்கரய்யாவிடம் விசாரணை நடத்தினோம். அவர், எதுவும் தெரியாது என்று கூறினார். அப்போது சங்கரய்யாவுக்கு ஆதரவாக சிலர் சிபாரிசு செய்தனர். அவர்களில் ஒருவர் மாணவி கொலை வழக்கில் சிக்கியுள்ளார்.

மாணவியை கொலை வழக்கில் கைதான சங்கரய்யா
சங்கரய்யாவிடம் விசாரித்தபோது மாணவி உஷாவைக் காதலித்த விவரத்தைக் கூறினார். மாந்தோப்பு வீட்டுக்கு உஷாவை அழைத்துச் சென்றபோது நாதமுனி மற்றும் அவரின் கூட்டாளிகள், தன்னுடைய நண்பர்கள் என அனைவரும் சேர்ந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து ஓடையில் புதைத்த தகவலை கூறினார். இதையடுத்து மற்றவர்களை கைது செய்தோம். இந்த வழக்கில் மாணவி தினமும் ஒருவரின் வீட்டுக்கு பால் கொண்டு செல்வார்.
சம்பவத்தன்று அவரின் வீட்டுக்கு மாணவி பால் கொடுக்கவில்லை. இதனால் அந்த நபரின் மீதும் எங்களின் சந்தேகப் பார்வை இருந்தது. ஆனால் அவர்தான் சில தகவல்களை எங்களிடம் கூறினார். அவர் கூறிய தகவல்தான் 5 பேர் சிக்க காரணமாக இருந்தது. மாணவியிடம் தவறாக நடந்தவர்கள் குறித்து தகவல் கிடைத்தபோது மனமாறிய முதலாளி ஒருவர், முழுவிவரங்களையும் எங்களிடம் கூறியதோடு செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து மாணவி கொலை வழக்கில் 5 பேரை கைது செய்துள்ளோம். மாணவியின் ஸ்கூல் பையையும், பால் கேன் ஆகியவற்றை அந்தப் பகுதியில் உள்ள புதரில் கைதானவர்கள் மறைத்துவைத்திருந்தனர். எங்களின் விசாரணையில் மாணவியை எப்படியெல்லாம் சித்ரவதை செய்தோம் என்பதை விரிவாகக் கூறியுள்ளனர். மாணவியை வெளியில் விட்டால் தங்களை காட்டிக் கொடுத்துவிடுவார் என்ற பயத்திலேயே அவரை கொலை செய்துள்ளனர்.
மேலும் மாந்தோப்பு வீட்டில் மாணவி சத்தம் போடாமலிருக்க 5 நாள்களும் அவரை மயக்கத்திலேயே வைத்துள்ளனர். மயக்கம் தெளிந்த அவர் தன்னை விட்டுவிடும்படி தெலுங்கில் கதறினார். போதையில் இருந்த நாங்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக கூட்டாக மாணவியிடம் தவறாக நடந்தோம் என்று விசாரணையின்போது தெரிவித்தனர்.
இந்தக் கொலை வழக்கில் இன்னும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. கைதான நாதமுனி, ஜெகதீஷ்பாபு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அந்தப் பகுதியில் வசதியாக வாழ்ந்துவருகின்றனர். இதனால்தான் மாணவி மாயமான வழக்கில் அவர்கள் மீது எங்களுக்குச் சந்தேகம் ஏற்படவில்லை. மாணவி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை சிலர் மிரட்டி பணமும் பறித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதுதொடர்பாக விசாரித்துவருகிறோம். கைதானவர்களை கஸ்டடியில் எடுக்கவும் முடிவு செய்துள்ளோம்" என்றார்.
மாணவி கொலை செய்யப்பட்ட தகவல் தெரிந்த கல்லூரி மாணவர் சங்கரய்யா, எதுவும் நடக்காததுபோல அதே கிராமத்தில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்துள்ளார். அவரின் நடவடிக்கைகள் கிராமத்தில் யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. தற்போது அவர் கைது செய்யப்பட்ட தகவல் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: