ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

பி டி ஆர் .பழனிவேல் தியாகராஜன் : தி.மு.க-வினர் சமூக வலைதளங்களில் பணம் பெறுவதாக கூறுவதில் உண்மையில்லை

Palanivel Thiaga Rajan :  "ஓட்டுக்கே நோட்டு கொடுக்காத நான் ட்வீட்டுக்கு நோட்டு கொடுப்பதாக சொல்வது வேடிக்கை!"
”சமூக வலைதளங்களில் கழக கொள்கைகளை தன்னார்வத்துடன் பதிவிடும் கழகத்தினர் மீதான பொய்யுரைகளில் எள்முனையளவும் உண்மையில்லை”
மாநில சுயாட்சி, சமூகநீதி, அனைத்துத் தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு போன்ற பல்வேறு குறிக்கோள்களுடன் அயராது பாடுபட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் ’போராட்டம் என்றாலும் - பொது விவாதம் என்றாலும்’ யாராலும் வீழ்த்த முடியாத பலமும், அறிவுக்கூர்மையும் கொண்டவர்கள்.
அப்படிப்பட்ட தி.மு.க-வினர் சமூக வலைதளங்களில் பணம் பெற்றுக்கொண்டு பதிவிடுகிறார்கள் என அடிப்படை ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை, மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலர் தொடர்ந்து முன்வைக்கின்றனர். இதற்காக சில வீடியோ மற்றும் புகைப்படங்களை தயாரித்து, சமூக வலைதளங்களில் பரப்புவதை முழுநேர வேலையாகவே செய்து, பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்த முயற்சி செய்கின்றனர்.

இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புவது, கடந்த 12.06.2017 அன்று கழக தலைவர் அவர்களின் வழிகாட்டுதலுடன், தகவல் தொழில்நுட்ப அணி தொடங்கப்பட்டு, மாநில செயலாளராக நியமிக்கப்பட்டேன். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருந்த சூழலில், திமுக-வுக்கு சாதகமாக சமூக வலைதளங்களில் பதிவிட பணம் வழங்கப்படுகிறது என்று, போலி மின்னஞ்சல் உருவாக்கி, 10.04.2016 அன்று நாளிதழ் செய்தியாகவும், சமூக வலைதளப் பதிவுகளாகவும் பரப்பப்பட்டன. இப்படிப்பட்ட போலியான மின்னஞ்சல்கள், முகநூல் பதிவுகள், ட்விட்டர் பதிவுகள் ஆகியற்றை தயாரிப்பது நவீன தகவல் தொழில்நுட்ப உலகில் எளிதில் சாத்தியம் என்பதை அனைவரும் நன்கு உணர்ந்துள்ளனர். எனவே, உள்நோக்கத்துடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செய்யப்பட்ட பொய்யான பிரச்சாரம் அது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள், தகவல்களை திரட்டுதல் - பகுப்பாய்தல் உள்பட பல்வேறு பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, கழகத்தின் மீது பற்றுகொண்ட கழக தோழர்களும், தொண்டர்களும் சமூக வலைதளங்களில் திமுகவின் கொள்கை முழக்கங்களையும், நீதிக்கட்சி ஆட்சியும், தொடர்ந்து கழக அரசும் நிகழ்த்திய பல்வேறு சாதனைகளையும், தியாக வரலாறுகளையும், கழக தலைவர் அவர்களின் அயராத உழைப்பு மற்றும் செயல்பாடுகளையும் தினசரி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனவே, கழக தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் என்றமுறையில், சமூக வலைதளச் செயல்பாடுகளில் கழகத்தினர் பணம் பெற்று பதிவிடுவதாக சொல்லப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளில் எள்முனையளவும் உண்மையில்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுமட்டுமின்றி, அரசியலிலும் - பொதுவாழ்விலும் நேர்மையையும், தூய்மையையும் கடைபிடிக்க வேண்டும் என்ற மரபில் வந்த நான், 2016ம் ஆண்டு முதன்முறையாக மதுரை மத்திய தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டபோது, தொகுதி வாக்காளர்களுக்கு பணமோ, பொருட்களோ கொடுக்காமல் சீரியமுறையில் வெற்றி பெற்றவன். குறிப்பாக, நூறாண்டுகால அரசியல் களத்தில் 4 தலைமுறைகளாக கழகத்துக்காகவும், பொதுநோக்கோடு மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் குடும்ப சொத்துகளை செலவிட்டு, அரசியல் தூய்மையை கடைபிடித்து வரும் பாரம்பரியத்தை சேர்ந்த என்மீது சிறுகறை சுமத்த முயல்வது வீண் செயல்.
எனவே, ஓட்டுக்கே நோட்டு கொடுக்காத நான் ட்வீட்டுக்கா நோட்டு கொடுக்கப் போகிறேன் என்பதை கேள்வியாக அல்ல, அவதூறு பரப்புவோருக்கு பதிலாகவே கூறுகிறேன். சமூக வலைதளங்களில் கழக தோழர்களின் செயல்பாடுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோற்றோடும் சிலர், கழகத்தினர் மீது களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பொய்யாக உருவாக்கும் இப்படிப்பட்ட அவதூறான செய்திகளையும், சமூக வலைதளப் பதிவுகளையும் தமிழக மக்கள் என்றுமே நம்ப மாட்டார்கள் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அதுமட்டுமின்றி, திராவிட இயக்கம் என்பது அரசியலுக்கானது மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்துக்கான மாபெரும் மக்கள் பேரியக்கம். தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலமாக, உலகம் முழுவதும் நமது விரல் நுனியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள சூழலில், தமிழகத்தில் மட்டுமின்றி, பூமிப்பந்தின் பல்வேறு நாடுகளிலும் திராவிட இயக்கத்தின் தாக்கம் உருவாகி, கழகத்துக்கான ஆதரவு எல்லா நாடுகளில் இருந்தும் கிடைத்து வருவதை கீழே உள்ள வரைபடத்தின் வாயிலாக அனைவரும் அறிய முடியும். கழகத்தின் சமூக முன்னெடுப்புகள் அனைத்துக்கும் உலகம் முழுவதும் ஆதரவுக்குரல் எழுவதை, சமூகநீதிக்கு எதிரான சிலர் களங்கம் கற்பிப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை அனைவரும் திட்டவட்டமாக புரிந்து கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை: