வியாழன், 21 பிப்ரவரி, 2019

கீழடியில் மத சின்னங்களோ, கடவுள் சின்னங்களோ ஒன்று கூட இல்லை... தமிழரின் வாழ்வியலை எடுத்துக்காட்டுகிறது

செஸ் காயின்
சுடுமணல்தாயக்கட்டை
Karthikeyan Fastura :தமிழை ஆதியில் இருந்து
இதுவரை சொல்லப்பட்ட அனைத்து வரலாற்றையும் திருப்பிப்போடும் சான்றுகள் வந்துவிட்டன. கீழடி ஆய்வில் கிடைத்த பொருட்கள் செப்பேடுகளோ, மன்னர்கள் செதுக்கி வைத்த கல்வெட்டுக்களோ அல்ல. சாமானியர்களின் கைவண்ணங்கள், மொழிக்குறிப்புகள். வாணிப சான்றுகள்.
தோண்டி எடுத்து பார்த்தால்
சாதியும் இல்லை, மதமும் இல்லை. சமிபத்தில் மதுரையில் நிகழ்ந்த தொல்லியல் திருவிழாவில் கீழடி ஆய்வு குறித்து மிக விரிவாக பேசப்பட்டது.
இதில் எங்கேயும் சிவன் இல்லை முருகன் இல்லை வேறு எந்த மத சின்னங்களோ, கடவுள் சின்னங்கள் ஒன்று கூட இல்லை. சாதிய அடையாளங்கள் ஒன்று கூட இல்லை. வாழ்க்கையும், கலையும், கொண்டாட்டமும் தான் இருந்திருக்கிறது. தமிழ் மொழி சித்திரக்கோடுகளாக இருந்திருக்கிறது.
விளையாட்டு பாண்டங்கள் கிடைத்திருக்கிறது. Dice எனப்படும் கனசதுர சதுரங்க கல், தாயக் கட்டைகள், செஸ் காயின்கள் கிடைத்திருக்கிறது. இவை அனைத்தும் 2200 வருடங்களுக்கு முன்பு உள்ளவை. எனக்கு ஆச்சரியத்திலும் ஆச்சர்யம் இது தான்.

இதுவரை எழுதப்பட்ட வரலாறெல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் பின்னணியில் நிகழ்ந்தது. அது வடமொழியை தொன்மையாக காட்டுகிறது. சிந்து சமவெளியை தொன்மையான நாகரிகமாக காட்டுகிறது. அதைவிட தொன்மையான நாகரிகமாகவும், மொழி வளமும் வைகைநதி படுகையில் இருந்திருக்கிறது. அதுவும் எழுத்து வடிவில் அது அரசாங்கத்தின் அலுவல் மொழியாக மட்டுமில்லாமல் எளிய மக்களின் வணிக மொழியாக இருந்திருக்கிறது. வைகை நாகரிகம் சிந்துசமவெளியினும் தொன்மையாக பெரும் வளத்துடன் சிறந்த கட்டுமானத்துடன் திகழ்ந்திருக்கிறது. தங்கத்தின் பயன்பாடு இருந்திருக்கிறது. பலவகை ஆபரணக்கற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. மிக வடிவான, சுடுமணலால் உருவாக்கப்பட்ட உறுதியான பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
வைகை உற்பத்தியாகும் இடத்தில் இருந்து அது கலக்கும் இடம் வரை மொத்தம் 220 இடங்களில் இது போன்ற சான்றுகள் கிடைக்கப்பட்டிருக்கிறது. அதில் தோண்டப்பட்டது கீழடி மட்டுமே. அதுவும் நான்கே பேர் கொண்ட ஒரு சிறு ஆய்வாளர் குழுவும், உள்ளூர் கூலியாட்களும் மட்டுமே இத்தனை விசயங்களை வெளியே கொண்டுவந்திருக்கிறார்கள்.
இன்று மத்திய அரசும், மாநில அரசும் இதில் மெத்தனம் காட்டி வரலாறை மறைக்கலாம். எதிர்காலத்தில் இது நிச்சயம் வெளிவரத்தான் போகிறது. அப்போது இன்று நம்பிக்கொண்டிருக்கும் பல நம்பிக்கைகள் தவிடு பொடியாகும் என்பது உண்மை. அந்த உண்மையில் மனிதம் மட்டுமே இருக்கும். மதம் இருக்காது சாதி இருக்காது வேறுபாடும் இருக்காது.
அப்படி இருந்தால் அதை பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளவும் கூடாது. மாறாக அம்மடத்தனத்தில் இருந்து மேன்மை அடையவேண்டும்.
ஆனால் ஆதியில் தமிழ் மொழி அந்த களங்கம் ஏதும் இல்லாமல் மனிதநேயத்துடன் கொண்டாட்டத்துடன், கடல்கடந்து வாணிகம் செய்து பொருளீட்டி மகிழ்ச்சியாக மக்களிடம் புழங்கும் மொழியாக திகழ்ந்திருக்கிறது என்பதால் நான் தமிழை போற்றுகிறேன். தமிழ் மொழியின் வளத்தை இந்த தாய்மொழி தினத்தில் கொண்டாடுகிறேன். வாழ்க தமிழ்.

கருத்துகள் இல்லை: