வெள்ளி, 8 செப்டம்பர், 2017

ஆளுநர் வித்தியா சாகர ராவின் அண்ணன் மகன் எம் எல் ஏ.. ஜெர்மன் குடியுரிமை ... பதவி பறிக்க நீதிமன்றம் ..

இரட்டைக் குடியுரிமை: சிக்கலில் ஆளுநர் அண்ணன் மகன்!
மின்னம்பலம் : இரட்டைக் குடியுரிமை வைத்திருந்த வழக்கில் தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவின் அண்ணன் மகனின் இந்தியக் குடியுரிமையைப் பறிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானாவின் கரீம் நகரில் உள்ள வேமுலவாடா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரமேஷ் சென்னாமெனே. இவரது தந்தை சென்னாமெனே ராஜேஷ்வர ராவ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தனது இறுதிக்காலத்தில் தெலுகு தேசம் கட்சியில் இணைந்துகொண்டார். மகாராஷ்டிர ஆளுநரும் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநருமான வித்யாசாகர் ராவ் ரமேஷின் சித்தப்பா ஆவர். ரமேஷ் மூன்று முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் போலிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து இந்தியக் குடியுரிமையைப் பெற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட எடி ஸ்ரீநிவாஸ் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதில், ரமேஷ் போலிச் சான்றிதழ்கள் மூலம் இந்தியக் குடியுரிமை பெற்றிருப்பதாகவும் அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்கும்படியும் கோரியிருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் அவரது வெற்றியைச் செல்லாது என்று அறிவித்தது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றத்தில் ரமேஷ் தடை வாங்கினார். தடை ஆணை அமலில் இருந்தபோதே 2014ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதற்கிடையே, ரமேஷின் குடியுரிமையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உள்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையில் அவர் ஜெர்மனி குடியுரிமை பெற்றவர் என்பது தெரியவந்தது. இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை கிடையாது என்பதால் அவரது இந்திய குடியுரிமையை ரத்து செய்யும்படி உள்துறை அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது குடியுரிமையை ரத்து செய்யும் ஆணையை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியர் அல்லாதவர் தேர்தலில் ஓட்டுப்போடவோ பங்குபெறவோ முடியாது என்பதால், அவரது குடியுரிமை ரத்து செய்யப்பட்டால் அவரது எம்.எல்.ஏ. பதவியும் பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ரமேஷ் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கூறுகையில், இந்திய குடியுரிமை பெற்றதுமே ஜெர்மன் குடியுரிமையை நான் ரத்து செய்துவிட்டேன். இந்தியா மட்டுமல்ல, ஜெர்மனியிலும் இரட்டைக் குடியுரிமை கிடையாது. தற்போது எனது இந்தியக் குடியுரிமையை ரத்துசெய்தால், நான் எங்கு செல்வேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: